search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியை மீட்க கைகோர்ப்போம் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
    X

    காவிரியை மீட்க கைகோர்ப்போம் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    காவிரியை மீட்க மனித சங்கிலி போராட்டத்தில் ஏப்ரல் 23ந் தேதியன்று கைகோர்ப்போம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி உள்ளார். #CauveryMangementBoard #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ​நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எப்போதோ அமைக்கப்பட்டு இருக்கவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை, காலக்கெடு முடிந்தும் அமைக்காமல் காலம்கடத்தும் கடைந்தெடுத்த வஞ்சகச் செயலை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

    தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசிடம் வலியுறுத்திப் போராட வேண்டிய மாநில அரசோ, ஆளுநரே ஆட்சி செய்து கொள்ளட்டும் என தன்மானமிழந்து தரையைக்கவ்வி ஆமையைப்போல அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது.

    வஞ்சகமும், சுயமரியாதை அற்ற கோழைத்தனமும் ஆட்சி செய்யும்போது, பொது மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும் ஓயாமல் குரல் கொடுத்து, களமிறங்கிப் போராட வேண்டியது எதிர்கட்சியாகிய நமது பணியும், கடமையும்தானே! அதைத்தான் தலைமேல் கொண்டு தொய்வின்றித் தொடர்ந்து ஆற்றி வருகிறோம். தன்னிச்சையாகவோ, தனித்தோ அல்ல; தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, அவர்களின் தக்க துணையுடனும், பொதுமக்களின் முழுமையான பங்கேற்புடனும்.



    தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்தபடி, பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதுடன், மத்திய மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து, காவிரி உரிமையை நிலைநாட்ட மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23ந் தேதி திங்கட்கிழமையன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.

    ​புதுக்கோட்டையில் நடைபெறும் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் உங்களில் ஒருவனாக நான் பங்கேற்கிறேன். அதுபோல, மக்களின் நலனுக்காகவும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராட்டக்களத்தில் தோளோடு தோள் இணைந்து நிற்கும் தோழமைக்கட்சி தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னையிலும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி சிவகங்கையிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தஞ்சையிலும்,

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் சென்னையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் திருவாரூரிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் பெரம்பலூரிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கிருஷ்ண கிரியிலும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா திருச்சியிலும் மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் திரளாகப் பங்கேற்கும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23-ந் தேதி மாலையில், நமது பொதுநோக்க உணர்வின் வெளிப்பாடாக உரிமைப்போரின் ஒப்பற்ற அடையாளமாக நடைபெறவுள்ளது.

    தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய ஆட்சியாளர்கள், இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என கதிகலங்கும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையை மனித சங்கிலி அறப்போராட்டம் வாயிலாக உணர்த்துவோம். மாநில உரிமையை அடகுவைத்து ஆட்சியில் நீடிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் தக்கபாடம் புகட்டுவோம்.

    காவிரியை மீட்கக் கைகள் கோர்ப்போம்! மாநில உரிமையைப் பெற்றிட மனித சங்கிலியாய் இணைந்திடுவோம்! ஒருங்கிணைவோம்.. வென்றிடுவோம்.. வாரீர்! வாரீர்!! என வாஞ்சையுடன் அழைக்கிறேன்!!!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #CauveryMangementBoard #MKStalin
    Next Story
    ×