search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்- வேல்முருகன்
    X

    பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்- வேல்முருகன்

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
    திருச்சி:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். சட்டப் பல்கலைக்கழகம், இசைக் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமானமாகும். இந்த 3 துணைவேந்தர்களின் நியமனங்களுக்கும் பாரதிய ஜனதா அரசின் பெரும்புள்ளிகள் உடந்தையாக இருந்து உள்ளனர். எனவே இந்த முறைகேடுகள், ஊழல், பண பரிவர்த்தனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடனான வாட்ஸ்அப் உரையாடலில் தாத்தா போன்றவருடன் நான் நெருக்கமாக புகைப்படம் எடுத்தேன் என்று கூறி இருக்கிறார். அந்த தாத்தா யார்? என்று தெளிவுப்படுத்த வேண்டும்

    நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தேகிக்ககூடியவரே தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விசாரணை குழு அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்வாரிலால் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யார், யாருடன் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசியுள்ளனர் என்பதையும், நிர்மலா தேவி யாருடன் பேசியுள்ளார் என்பதையும் விசாரிக்க வேண்டும்.


    பேராசிரியை நிர்மலா தேவியை இப்படி பேச நிர்ப்பந்தம் செய்தது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியில் வரும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

    கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை. அது ஒரு மர்ம மாளிகை போன்று உள்ளது. பேராசிரியையின் பின்புலத்தில் யார் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

    நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இந்த பிரச்சனையில் சிக்கி சந்தேகத்திற்கு ஆளாகி உள்ள தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும். பிரதமரும், ஜனாதிபதியும் கலந்து பேசி தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nirmaladevi
    Next Story
    ×