search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட காலணி
    X

    அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட காலணி

    அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி தொங்கவிடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஓட்டக்கோவில் கிராமத்தில் பா.ஜ.க.சார்பில் கொடிகம்பம் அமைக்கப்பட்டு அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த கொடி கம்பத்தின் கயிற்றில் செருப்பு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.

    இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து அரியலூர் ஒன்றிய செயலாளர் முத்துவேல் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொடி கம்பத்தில் தொங்க விடப்பட்டிருந்த செருப்பை அப்புறப்படுத்தினர்.

    நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார், எதற்காக செருப்பை தொங்கவிட்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
    Next Story
    ×