search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வரும்போது தமிழக அரசு காணாமல் போய்விடும் - டிடிவி தினகரன்
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வரும்போது தமிழக அரசு காணாமல் போய்விடும் - டிடிவி தினகரன்

    18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தீர்ப்பு வரும்போது தமிழக அரசு காணாமல் போய்விடும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதே நாங்கள்தான். அதுபோல விவசாய சங்கங்களின் அழைப்பை ஏற்று திருச்சியில் போராட்டம் நடத்தினோம். காவிரி கரையோரம் எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சியினர் ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினார்கள். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருக்கிறோம் என்று சொன்னார்கள். அப்படி ஒரு கடிதமே வரவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விளக்கம் கொடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்தபோது எல்லா கட்சியினரும் கருப்பு கொடி காட்டினார்கள். திரையுலகை சேர்நதவர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டார்கள். மக்கள் நலம் சார்ந்த அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.



    ஆனால் மோடி இங்கு வந்து விட்டு அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விட்டார். இது தமிழ்நாடு என்கிற ஒரு மாநிலம் இந்தியாவில் இருப்பதை மோடி மறந்து விட்டாரா என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை மோடி புறக்கணித்து விட்டாரோ, இந்திய வரை படத்தில் இருந்து தமிழ்நாட்டை எடுத்து விட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பிரதமர் மோடி மக்களை மதிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிரான போராட்டங்கள் சரியானதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும். நாங்கள், பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க போவதாக கூறுவது தவறு.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தெளிவாக கூறி இருக்கிறோம். எங்கள் இயக்கம் ஜெயலலிதா வழியில் மதச்சார்பற்ற நிலையில் தான் தொடரும். மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது.

    தமிழகத்தில் ஒரு அரசு செயல்படுகிறதா என்று தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தநிலையில் இவர்கள் உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவார்கள்? பா.ஜ.க.வால்தான் அ.தி.மு.க. இன்று படுபாதாளத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வுடன் நெருங்கி செல்வதாகவும், அவர்களை கண்டு பயப்படுவதாகவும், பதுங்குவதாகவும் சிலர் கூறுவது தவறு. எடுத்த முடிவில் இருந்து ஒரு போதும் பின் வாங்கமாட்டேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தான் தமிழக மக்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அனைவரும் ஒரே இலக்கை நோக்கி தான் போராடுகிறோம். அதற்காக ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடியவர்கள் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து வருகிறது. இவர்கள் இதை தவிர வேறு என்ன செய்ய முடியும். வைக்கோல்போரில் செய்த பொம்மை போல் இந்த அரசு உள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தீர்ப்பு வரும்போது, இந்த அரசு எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடாமல் செய்வதே மத்திய அரசுதான். தண்ணீர் உரிமையை கூட அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அடுத்தமுறை தேர்தல் வரும்போது, பா.ஜ.க.வினருக்கு மக்கள் தக்க பதிலை தருவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி வரை நாங்கள் காவிரி கரையோர மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் திருச்சியில் இருந்து காரில் தஞ்சை புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×