search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னாளபட்டியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிப்பு
    X

    சின்னாளபட்டியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிப்பு

    சின்னாளபட்டியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடியது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு வீடுகளுக்கு என்று பேரூராட்சி சார்பில் 6,400 வீட்டு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இவை தவிர பொது குடிநீர் குழாய் இணைப்புகளும் உள்ளது. இவர்களுக்கு ஆத்தூர் அணை பகுதியில் 2 திறந்த வெளி கிணறுகள் தோண்டி அதிலிருந்தும், பேரணை திட்டத்தில் இருந்தும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் பேரணை தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஆத்தூர் அணை கிணற்று தண்ணீரை மட்டுமே சின்னாளபட்டி பேரூராட்சி நம்பி உள்ளது.

    கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது பேரூராட்சி நிர்வாகம் குடிநீரை விலைக்கு வாங்கி அதனை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்தது. அப்போது குடிநீரை மின் மோட்டார் வைத்து திருடியதை பேரூராட்சி பணியாளர்கள் கண்டுபிடித்து மொத்தம் 90 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதனிடையே கடந்த ஆண்டும் மழை பொய்த்து போனதால் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுபாடு நிலவும் சூழலில் ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. இதனால் மீண்டும் சின்னாளபட்டியில் குடிநீர் வீட்டு இணைப்புகளில் மின் மோட்டார் மூலம் திருடப்படுகிறது என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து 2 வது வார்டு, 5 வது வார்டு பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சோதனை செய்தனர். அப்போது மின் மோட்டாரை வைத்து குடிநீர் திருடியது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீட்டிற்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    எனவே அனைத்து குழாய்களிலும் சீரான தண்ணீர் விநியோகம் நடந்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×