search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டேட் வங்கியில் நாதெள்ள சம்பத் நகை கடை ரூ.250 கோடி கடன் மோசடி- சி.பி.ஐ. போலீசில் புகார்
    X

    ஸ்டேட் வங்கியில் நாதெள்ள சம்பத் நகை கடை ரூ.250 கோடி கடன் மோசடி- சி.பி.ஐ. போலீசில் புகார்

    சென்னையின் பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ள சம்பத் நகைக்கடை ரூ.250 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ஸ்டேட் வங்கி சி.பி.ஐ.யில் புகார் செய்துள்ளது. #cbiinquiry

    சென்னை:

    மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வங்கி மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து வரிசையாக வங்கி மோசடிகள் வெளியாகி வருகிறது.

    ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகைக் கடை நிறுவனம் மோசடியில் சிக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது சென்னையின் பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ள சம்பத் ஜூவல்லரி பிரை வேட்லிட் மீது ஸ்டேட் வங்கி சி.பி.ஐ.யில் புகார் செய்துள்ளது.

    அதில், நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தவறான நிதி கணக்குகளை காட்டி ஸ்டேட் வங்கியில் ரூ.250 கோடி வரை கடன் பெற்றுள்ளது. கடந்த 2017 டிசம்பர் 22-ந்தேதி வங்கியின் ஆய்வில் இது தெரிய வந்தது. எனவே மோசடி தொடர்பாக சி.பி.ஐ. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதன் துணை நிறுவனமான நாதெள்ள சம்பத் செட்டி நகைக் கடை பொதுமக்களிடம் இருந்து தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடுகளை பெற்றது. கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் திடீரென்று இந்த நிறுவனம் நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சென்னையில் உள்ள அதன் அனைத்து கிளை கடைகளையும் மூடி விட்டது.

    வாடிக்கையாளர்களுக்கு பணத்தை தர இயலவில்லை என்று மூடப்பட்ட நகை கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் நகை கடையை முற்றுகையிட்டார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் நாதெள்ள சம்பத் செட்டி நிறுவனம் பொதுமக்களிடம் மாதாந்திர தவணை முறையில் பல்வேறு சீட்டு குரூப்கள் மூலம் நகை தருவதாக பணம் வசூலில் ஈடுபட்டதும், மொத்தம் 21 ஆயிரம் பேரிடம் ரூ.75 கோடி வசூலித்ததும் தெரிய வந்தது.

    இதில் 1,000 வாடிக்கையாளர்கள் வரை போலீசில் புகார் செய்துள்ளனர். நகை கடை அதிபர்கள் ரங்கநாத குப்தா மற்றும் அவரது மகன்கள் பிரபன்னகுமார், பிரசன்னகுமார், உறவினர் கோடா சுரேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×