search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை இல்ல முதியவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி காஞ்சீபுரம் போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    கருணை இல்ல முதியவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி காஞ்சீபுரம் போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட முதியவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி, காஞ்சீபுரம் போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக சர்ச்சை எழுந்தது.

    மேலும், இந்த அமைப்பின் இல்லங்களில் இறந்த ஒருவரது பிணம், காய்கறி ஏற்றிச் செல்லும் லாரியில் தூக்கிச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த கருணை இல்லத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த இல்லத்தில் தங்கியிருந்த ராமதாஸ் என்பவர் உள்பட 294 முதியவர்களை வருவாய் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று, வேறு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் புனித ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ‘எங்கள் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட ராமதாஸ் உள்பட 294 பேரை அதிகாரிகள் எங்கு அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை. தற்போது அவர்கள் சட்டவிரோத காவலில் உள்ளனர்.

    எனவே, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது, அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட 294 பேரில் ஒருவர் தற்போது மரணமடைந்து விட்டார். அவர்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. மற்றவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை? என்று வாதிடப்பட்டது.

    இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews

    Next Story
    ×