search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலை விவகாரம் - பேஸ்புக் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் எச்.ராஜா
    X

    பெரியார் சிலை விவகாரம் - பேஸ்புக் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் எச்.ராஜா

    பெரியார் சிலையை அகற்றுவது தொடர்பாக பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்து, விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில்,  ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறப்பட்டிருந்தது.

    எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்தது. வன்முறைக்கும் மோதலுக்கும் வழிவகுக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அனைத்து மட்டத்திலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து பதிவை நீக்கிவிட்டார். எனினும் அவரது கருத்துக்கு பல்வேறு  தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதையடுத்து தனது பேஸ்புக் பதிவுக்கு இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:-

    நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் அட்மின் என் அனுமதி இன்றி பதிவு செய்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

    கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.

    இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×