search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபர்
    X

    திருவோணம் அருகே குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபர்

    திருவோணம் அருகே குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஏலாதி நடுத்தெருவைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் அறிவழகன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அறிவழகனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான செல்லையா மகன் மணிகண்டன் (25), குமரேசன் (27), பாலமுருகன் (23). ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது அறிவழகனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அறிவழகனை தூக்கி தரையில் அடித்தார்.

    இதில் கல்லில் தலை மோதி படுகாயமடைந்த அவரை மீட்டு ஏலாதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பணியில் இல்லாததால் அவரை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் திருவோணம் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பலியான அறிவழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த கொலை தொடர்பாக மணிகண்டனை கைது செய்தனர். மேலும் குமரேசன், பாலமுருகன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திரு வோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×