
சென்னை:
மார்கழி மாதத்தின் இறுதிநாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், போகி என்றாலே பொருட்களை எரிப்பதுதான் என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி விட்டது.

அவ்வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், கடும் புகை எழுந்து காற்றை மாசுபடுத்தி வருகிறது.
சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டமாக காட்சி அளிக்கிறது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த அடர் பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக காரணமாக சென்னையில் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையே தெரியாத அளவிக்கு புகை மூட்டம் சூழ்ந்தது. சென்னைக்கு வந்த 12 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகி புகை காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #tamilnews