search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பிரசாரம்
    X

    ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பிரசாரம்

    ஆர்.கே.நகரில் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால் இத்தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று பொதுமக்களிடம் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வாக்குறுதி அளித்தார்.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஒவ்வொரு நாளும் தொகுதி மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்தநிலையில் சென்னை தண்டையார்பேட்டைக்கு உட்பட்ட பூண்டி தங்கம்மாள் தெருவில் நேற்று அவர் பிரசாரம் செய்தார்.

    அவருடன் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் உடன் சென்று மருதுகணேசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பல்வேறு வாக்குறுதிகளை முன்னிறுத்தி வீடு, வீடாக தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

    பொதுமக்களிடம் அவர் பேசுகையில், “ஆர்.கே.நகரில் என்னை எம்.எல்.ஏ.வாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இத்தொகுதியில் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் பார்த்துக்கொள்வேன். காசிமேடு, அண்ணாநகரில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு ஏற்படுத்தி தருவேன். தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று வாக்குறுதி அளித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று தண்டையார்பேட்டையில் உள்ள எழில்நகர், மூப்பனார்நகர், கார்னேசன்நகர், வ.உ.சி.நகர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

    Next Story
    ×