search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற முடியாது: கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி
    X

    நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற முடியாது: கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி

    ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற முடியாது. ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சின்னம் இரட்டைஇலை. புரட்சித்தலைவி அம்மாவால் சரித்திர வெற்றி கண்ட சின்னம் இரட்டை இலை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி சரித்திரம் படைக்கும்.

    மதுசூதனன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவார். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என்பதை போல இரட்டை இலை சின்னம் இருக்கும் இடம்தான் அ.தி.மு.க.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கன்னியாகுமரியில் நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது குறைகள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆட்சி நன்றாக இருக்கிறது என்று எந்த காலத்திலும் எதிர்கட்சிகள் சொன்னது கிடையாது.

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை குறை சொன்னவர்கள்தான் தி.மு.க.வினர். அதே போன்றுதான் இன்றும் அ.தி.மு.க. அரசு மீது குறை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

    தமிழகத்தில் நிறைவான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்களுக்கு அரசு பாதுகாப்பாக உள்ளது. வெள்ளம் வந்தாலும், புயல் வந்தாலும் மக்களை பாதுகாக்கின்ற அரசாக புரட்சித்தலைவி அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்பது தவறான கருத்தாகும். அவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஊருக்குள் அண்ணன் தம்பி ஒன்றுமையாக இருந்தால்கூட அங்காளி பங்காளிக்குள் சண்டை என்று கிளப்பி விடுவார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

    100 ஆண்டுகள் தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும். அதற்கு அடித்தளமாக ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வெற்றி பெறும். நடிகர் என்றால் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே மவுசு உண்டு. எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.

    ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்று தனது திரைப்படங்களில் நல்ல கருத்துகளை எம்.ஜி.ஆர். கூறினார். அந்த கருத்துப்படி அவர் நடந்தும் காண்பித்தார். புரட்சித்தலைவர் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    நடிகர் விஷால் மற்றும் நடிகர்கள் இந்த அரசை குறை சொல்லிக்கொண்டே போகலாம். நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்
    Next Story
    ×