என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
    • கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.

    கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.

    இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.

    445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.

    இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

    • நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
    • 2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 35 வயதான அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.

    அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார்.

    இதற்கிடையே 2027-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியை சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதல் கட்டமாக அவர் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதிக்க உள்ளார்.

    இது தொடர்பாக பி.சி.சி. ஐ. வட்டாரங்கள் கூறியதாவது:-

    முகமது ஷமி தேர்வு குழுவின் விவாதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. அவருடைய உடற்தகுதி மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் அணிக்கு தேவை.

    2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம். நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் தொடரில் பெங்கால் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட் கைப்பற்றினார்.

    விஜய் ஹசாரே கோப்பையில் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த அபாரமான பந்து வீச்சால் தேர்வு குழுவினரை தனது பக்கம் திரும்ப வைத்து உள்ளார்.

    முகமது ஷமி 2015, 2019, 2023 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி உள்ளார். 18 ஆட்டத்தில் 55 விக்கெட் கைப்பற்றி சர்வதேச வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.

    2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி மலிங்கா தலைமையில் வென்றது நினைவு கூரத்தக்கது.

    • 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
    • 5-வது போட்டியில் இந்தியாவின் தீப்தி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    இந்த போட்டியில் தீபதி சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா வீராங்கனை மேகன் ஷட் சாதனையை தீப்தி சர்மா முறியடித்துள்ளார். அவர் 133 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை பட்டியலில் தீப்தி ஷர்மா 152 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) 151 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3 முதல் 5 இடங்கள் முறையே நிடா டார் (பாகிஸ்தான்) 144 விக்கெட்டுகள், ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா) 144 விக்கெட்டுகள் சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) 142 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணி:-

    ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குர்பாஸ், முகமது இஷாக், அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஒமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நூர் அகமது, முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்சாய்.

    • இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
    • இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும்.

    இந்தியா-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    நேற்றைய ஆட்டத்தில் 68 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும். இதன்மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகி விருது பெற்றவர் என்ற சாதனையை படைத்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை ஹர்மன்பிரீத் கவுர் சமன் செய்தார்.

    மிதாலி ராஜ் 89 போட்டிகளில் 12 முறை இந்த விருதை வென்றிருந்தார். ஹர்மன்பிரீத் இதுவரை 187 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

    தொடர் நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. இது அவருக்கு 3-வது விருதாகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகி விருது வென்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் ஷபாலி வர்மாவும் இணைந்தார்.

    • மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர்.
    • உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோமா நிலையில் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    54 வயதான டேமியன் மார்ட்டின், கடந்த டிசம்பர் 26 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சலால் டேமியன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டேமியன் உடல்நிலை மோசமாக இருந்தாலும், சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேரன் லீமன், வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும், தற்போதையை வீரர்களும் டேமியன் குணமடைய பிரார்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    1992 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியபோது, உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்,

    • 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மாக்னஸ் கார்ல்சென், ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார்.
    • பதற்றத்தில் இருந்த கார்ல்சென் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார்.

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

    இந்த பிளிட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கார்ல்சென் கைப்பற்றினார். உலக பிளிட்ஸ் போட்டியில் கார்ல்சென் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

    முன்னதாக இந்த போட்டியின் 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், அர்மேனியா கிராண்ட்மாஸ்டர் ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார். 69-வது நகர்த்தலின் போது, 2 வினாடி மட்டுமே எஞ்சி இருந்ததால் கார்ல்சென் வேகமாக காயை நகர்த்தினார்.

    அப்போது பதற்றத்தில் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார். பிளிட்ஸ் விதிப்படி, நேரம் கணக்கீட்டை நிறுத்துவதற்குள் காய்களை மீண்டும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். டென்ஷனில் இருந்த கார்ல்செனால் அதை செய்ய முடியவில்லை.

    பிறகு நடுவர் தலையிட்டு இது விதிமீறல் என்று கார்ல்செனுக்கு எடுத்துரைத்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த சுற்றில் மார்ட்டிரோசியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கார்ல்சென் அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

    இதன்படி பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, வெஸ்ட் இண்டீசின் மேத்யூ ஹெய்ன்ஸ், இந்தியாவின் மந்தனா, ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

    இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதர்லாண்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சாதியா இக்பால் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தென்ஆப்பிரிக்காவின் மிலாபாவுடன் பகிர்ந்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 17 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பெற்றுள்ளார். இலங்கை தொடரில் அறிமுகம் ஆன இந்திய சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 124-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக கார்ல்சென் பட்டத்தை வென்றார்.
    • உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

    தோகா:

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

    252 வீரர்கள் பங்கேற்ற ஓபன் பிரிவில் அனைத்து சுற்றுக்கள் முடிவில் அரை இறுதிக்கு கார்ல்சென் (நார்வே), அர்ஜுன் எர்கைசி (இந்தியா), பாபியானோ காருனே (அமெரிக்கா), நோடிர்பெக் அப்தசத்தோ ரோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் தகுதி பெற்றனர். இதில் அர்ஜுன் எரிகைசியை அப்துசத்தோரோவ்வும், காருனேவை கார்ல்சென்னும் தோற்கடித்தனர்.

    இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு கார்ல்சென், அப்துசத்தோரோவ் தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர். 4 சுற்றுக்கள் கொண்ட இறுதிச்சுற்றில் முதல் 3 ஆட்டங்களுக்கு பிறகு இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 4-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    அவர் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று பிளிட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கார்ல்சென், உலக பிளிட்ஸ் போட்டியில் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

    பிளிட்ஸ் போட்டியில் ஓபன் பிரிவில் 19 சுற்றுக்கள் முடிவில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் அவர் அரை இறுதியில் தோற்றார். இதனால் அவருக்கு வெண்கலபதக்கம் கிடைத்தது. ஏற்கனவே அவர் ரேபிட் பிரிவில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக பிளிட்ஸ் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கம் வென்ற 2-வது இந்திய ஆண் வீரர் என்ற பெருமையை அர்ஜுன் எரிகைசி பெற்றார்.

    உலக பிளிட்ஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை பிபிசரா சாம்பியன் பட்டம் வென்றார்.

    • தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை
    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    நடிகை குஷி முகர்ஜி ஒரு நேர்காணலில் பேசுகையில்,"எனக்கு கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வதில் விருப்பமில்லை. பல கிரிக்கெட் வீரர்கள் என்னைத் தொடர்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ்கள் செய்வார். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    நடிகையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷாவுடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 

    • 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    • கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இலங்கை வீராங்கனை ஹசினி பெரேரா அதிகபட்சமாக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இமேஷா துலானி 39 பந்தில் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

    ஹாசினி பெரேரா 42 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தனர்.

    கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.  

    ×