search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்
    X

    பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்

    விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
    நாம் கற்பனைசெய்து பார்க்க இயலாத விசித்திரங்கள் மனித வாழ்க்கையில் நடக்கக் கூடும். அவைகளை விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்தால்தான், அதன் உண்மைத்தன்மைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். நம்மிடையே அன்றாடம் விசித்திர சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை பற்றி அலசுவோம்!

    இப்போது பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வாடகை வாகனங்களில்தான் செல்கிறார்கள். ஒரு ஆட்டோவில் பத்து குழந்தைகள்கூட ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நெருக்கடி நிறைந்த ஆட்டோ ஒன்றில் தினமும் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிக்கு 8 வயது. துறுதுறுப்பான அவள், படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என்று பள்ளியில் நடக்கும் அனைத்திலும் பங்குபெற்று, பரிசோடுதான் வீடு திரும்புவாள். திடீரென்று அவளிடம் அதிரடியான மாற்றங்கள். படிப்பில் பின்தங்கினாள். போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்த்து தனிமையை நாடினாள். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, அழத் தொடங்கினாள்.

    இரண்டு, மூன்று மாதங்களாக மகளிடம் இத்தகைய மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த தாயாரின் கவனத்தில் மகளின் புத்தகப்பை தென்பட்டிருக்கிறது. விடுமுறை நாள் ஒன்றில் அவளது புத்தகப்பை நோக்கி ஏராளமான எறும்புகள் படையெடுப்பதை பார்த்திருக்கிறார். என்னவென்று பார்ப்பதற்காக பையை திறந்திருக்கிறார். உள்ளே நிறைய சாக்லேட் இருந்திருக்கிறது.

    “நாங்கள் அவளுக்கு எல்லாவிதமான இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுப்போம். ஆனால் பற்கள் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சாக்லேட் மட்டும் வாங்கிக்கொடுக்க மாட்டோம். ஆனால் இவளுக்கு சாக்லேட் மீது ரொம்ப ஆசை இருந்தது..” என்றார் தாயார். முதலில் அவர் மட்டுமே கவுன்சலிங்குக்கு வந்திருந்தார்.

    “அப்படியானால் அதை புரிந்துகொண்டு யாரோ இவளுக்கு நிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதனை சாப்பிடாமல் வைத்திருக்கிறாளே ஏன்? அப்படியானால் இந்த சாக்லேட்டுடன்தான் இவளுக்கு ஏதோ பிரச்சினையும் சேர்ந்து வந்திருக்கிறது. அதை பற்றி விசாரியுங்கள்..” என்றேன்.

    தாயார் விசாரித்து சொன்ன சம்பவம் விசித்திரமாக இருந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 55 வயது. இந்த மாணவியின் வீட்டில் இருந்து பள்ளியை சென்றடைய, முக்கால் மணி நேரம் ஆட்டோவில் பயணிக்கவேண்டும். அதில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவள் மட்டுமே ஆட்டோவில் இருப்பாள். அப்போது பெரும்பகுதி நேரம் ஆள்அரவமற்ற பகுதியை ஆட்டோ கடந்து செல்லும். பள்ளியை நெருங்கும் நேரத்தில்தான் நிறைய மாணவிகள் ஏறுவார்களாம். தனியாக பயணிக்கும்போது அவளிடம் பேசிக்கொண்டே செல்லும் அவர், அவளது சாக்லேட் ஆசையை எப்படியோ தெரிந்துகொண்டு விலை உயர்ந்த சாக்லேட்களை நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். இவளும் ஆர்வமாக சாப்பிட்டிருக்கிறாள்.



    அதை வீட்டில் சொல்லக்கூடாது என்றிருக்கிறார். இவளும் சொல்லவில்லை. அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பிய பின்பு தனது விசித்திர சுபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ஆட்டோவில் இவள் மட்டும் இருக்கும் தனிமை நேரத்தில் அவர் தனது இடுப்புக்கு கீழ் பகுதி ஆடையை கீழே இறக்கிவிட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுவாராம். இது தொடர்ந்து நடந்திருக்கிறது. பின்பு நகரப் பகுதிக்குள் ஆட்டோ சென்றதும், தனது உடையை சரிசெய்துகொள்வாராம்.

    அவரது செயலை பார்த்த அவள் முதலில், ‘அவர் உடையை சரிசெய்ய மறந்துவிட்டார்’ என்று எளிதாக எடுத்திருக்கிறாள். பின்பு விளையாட்டுத்தனமாக கருதியிருக்கிறாள். தான் ஆட்டோவில் ஏறிய பின்பு, ஆட்கள் இல்லாத பகுதியில் அந்த செயலை செய்யத்தொடங்கியதும் அது தவறானதாகவும், பின்பு விபரீதமாகவும் அவளுக்கு புரிந்திருக்கிறது. அப்போது அவள், ‘ஒழுங்காக உடையை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டுங்கள்’ என்று கூறி இருக்கிறாள். உடனே அவரது சுபாவம் மாறியிருக்கிறது. அவளை மிரட்டியிருக்கிறார்.

    அவர் தன்னை மிரட்டியதை வீட்டில் சொன்னால், தான் வெகு நாட்களாக அவரிடமிருந்து விலை உயர்ந்த சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்ததையும் சொல்ல வேண்டியிருக்குமே என்று அவள் குழம்பி, அச்சமடைந்திருக்கிறாள். அதுவே அவள் கல்வியிலும், இயல்பான நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கிவிட்டது. உண்மை தெரிந்த பின்பு அவளது பெற்றோரே அதற்கு சரியான தீர்வை தேடிக்கொண்டார்கள்.

    (மூடிவைக்க வேண்டிய தனது உறுப்புகளை வெளியே காட்டுவதன் மூலம் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்பவர்கள் ‘எக்ஸிபிஷனிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பாலியல் மனநோய்க்கு எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) என்று பெயர். இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பது சிரமம். உடை விஷயத்தில் கவனம் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு, மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள். ‘வயதில் பெரியவர். தெரியாமல் ஏதோ நடந்துகொள்கிறார்’ என்று கருதாமல், தொடக்கத்திலே நாம் விழிப்படைந்து, ‘உடையை சரிசெய்யுங்கள்’ என்று சத்தமாக சொல்லவேண்டும். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் ‘இவர்களிடம் நமது கதை எடு படாது’ என்று கருதி ஒழுங்காக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்).

    ஊரில் மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்த அந்த நபருக்கு 30 வயது. கவுரவமான பதவியில் இருக்கிறார். திருமணமான புதிதில், நள்ளிரவில் மனைவி அசந்து தூங்கும் நேரத்தில் இவர் வெளியே கிளம்பிச்சென்றிருக்கிறார். பின்பு அதிகாலை நேரத்தில் திரும்பி வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அவள் கண்டுபிடித்து காரணம் கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் நள்ளிரவில் அடி உதை வாங்கி சட்டை எல்லாம் கிழிந்த நிலையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அப்போதுதான் அவரிடம் இருந்த ‘விசித்திர சுபாவம்’ மனைவிக்கு தெரிந் திருக்கிறது.



    அதாவது சிறுவயதில் இருந்தே அவர் வெளியூரில் உள்ள பிரபலமான கான்வென்ட் ஒன்றில் தங்கிப் படித்திருக்கிறார். அப்போது 15, 16 வயதுவாக்கில் இரவில் வெளியே சென்று, மாணவிகளின் விடுதி அறைகளுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் தோன்றியிருக்கிறது. அப்போதே சில நாட்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரி காலத்திலும் ஆஸ்டல் வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்து அதே விசித்திர பழக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் அந்த பழக்கம் தொடர்ந்திருக்கிறது. நள்ளிரவில் பக்கத்து வீடுகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.

    (இந்த விசித்திர மனோபாவத்திற்கு ‘வாய்யூரிஸம்’ (Voyeurism) என்று பெயர். இவர்கள் இரவு நேரங்களில் ஆக்டிவ்வாக செயல்படுவார்கள். காலை நேரங்களில் சோர்ந்துபோய் காணப்படுவார்கள். எதிர்பாலினத்தை சேர்ந்த இன்னொருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்த்தால்தான், இவர்களுக்கு திருப்தியும், தூக்கமும் வரும். இந்த இயல்பு இருப்பவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து இதில் இருந்து விடுபட முன்வரவேண்டும். இவர்களுக்கு மனநல சிகிச்சைகள் தேவைப்படும்)

    நெரிசல் மிகுந்த பஸ், ரெயில், திரு விழாக் கூட்டங்களில் பெண்களை குறிவைத்து, நீந்திச்செல்வதுபோல் சில ஆண்கள் முன்னும், பின்னுமாக நடப்பார்கள். உரசுவது, வருடுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள். மக்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் இப்படி நடமாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    (இத்தகைய மனோபாவ குறைபாடு ‘ப்ரோட்டரிஸம்’ (frotteurism) என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை பெண்களால் எளிதாக அடையாளம் காண இயலும். தங்களை அப்பாவிபோல் அடையாளங்காட்டிக்கொண்டு, எதேச்சையாக நடப்பதுபோல் தொடுவார்கள். முறைத்துப்பார்ப்பது, அதட்டுவது போன்ற செயல்பாடுகளை இவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்)

    பெண்களின் உள் ஆடைகளை மட்டும் திருடி சுகம் காண்பவர்களும் உண்டு. இத்தகைய விசித்திர சுபாவங்கள் கொண்டவர்கள் தவறு செய்பவர்களாகவே இருந்தாலும், இவர்கள் ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மனஊனம் கொண்டவர்கள். பிறப்பிலே அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களை இத்தகைய மனோபாவத்திற்கு மாற்றுகிறது. தேவையில்லாதவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதும், கேட்பதும்கூட அவர்களை இந்த நிலைக்கு மாற்றிவிடும். சிலர் சிறுவர்களாக இருக்கும்போது அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகி யிருப்பார்கள். தான் வளர்ந்து பெரியவர் ஆன பின்பு, தான் பாதிக்கப்பட்ட அதே வழியில் மற்றவர்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். தமது நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய விசித்திர சுபாவங்களுக்கு அடிமையாகிறவர்களும் உண்டு.

    பொதுவாக இத்தகைய விசித்திர குணாதிசயம் கொண்டவர்கள் சமூக பயம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாகவும், நான்கு பேர் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். பெண்களை நினைத்து அச்சப்படுவார்கள். அவர்களது முகத்திற்கு நேராக பார்த்து பேசும் தைரியம்கூட இருக்காது. பெண்கள் முறைத்துப் பார்த்தாலே அந்த பகுதியில் இருந்து நகர்ந்துவிடுவார்கள். திருமணமானவர்களாக இருந்தாலும், இவர்களது பாலியல் வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட விசித்திர குணம் கொண்டவர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    Next Story
    ×