search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விவேகம் தரும் வெற்றி வாய்ப்புகள்
    X

    விவேகம் தரும் வெற்றி வாய்ப்புகள்

    விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...
    வாழ்க்கை விளையாட்டு விஷயமல்ல. மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்து வேடிக்கையாய் பொழுதுபோக்கி கழித்தவர்கள், பின்னாளில் தனது தவறு களுக்காக தினம் தினம் வருந்திய வரலாறுகள் உண்டு. நீங்கள் மாணவப் பருவத்திலும் சரி, வேலை உலகத்திலும் சரி விளையாட்டுக் குணங்களைக் குறைத்துக் கொண்டு, விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

    மாணவப் பருவத்தில் நிறைய மதிப்பெண் பெறுவதை லட்சியமாகக் கொண்ட சிலர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதும், இனி எல்லாம் சரியாக அமைந்துவிடும் என்று ஆமை வேக செயல்பாட்டிற்கு சென்றுவிடுவதுண்டு. அதுபோல நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மதிப்புமிக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், இனி ஒரு கவலையும் இல்லை என்று அமைதி அடைந்துவிடுவது உண்டு. இன்னும் சிலர், ஏதாவது ஒரு அரசுப் பணிக்குச் சென்றால் போதும் என்று நெடிய முயற்சி செய்து பணியில் சேர்ந்ததும் தனது வளர்ச்சிக்கு இதுபோதும் என்று முடங்கிவிடுவது உண்டு.

    ஆனால் சிறிது காலத்திலேயே, தாங்கள் இருக்கும் பணி எதிர் காலத்திற்கு பலன் தருமா? என்ற பயம் வந்துவிடும். அப்போது பல தடைகள், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உங்களைச் செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும். மேல் பதவிக்கு போட்டியிட வயது வரம்பு தடையாக மாறி அவதிப்படுபவர்கள் உண்டு. இருக்கிற வேலையை விட்டுவிட்டு, அடுத்த பதவிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் உண்டு. செய்யும்வேலையுடன் கூடுதலாக பயிற்சி செய்ய முடியாமல் திணறு பவர்கள் உண்டு. குடும்பச் சூழல், பொருளாதார சூழல், கடன்கள், தேவைகள், நகர்ப்புற நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துகொண்டு வாழ்வையே விரக்தியாக பார்க்க வைக்கும்.

    இதுபோன்ற நெருக்கடிகள் எப்போதும் வரக்கூடாதென்றால், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான செயல்பாடு அவசியம். இடையில் செயல்பாடற்ற நிலையிருந்தால் இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாட்டிவிடும் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம்...

    உலகின் புகழ்மிக்க தொழில்அதிபரும், பணக்காரருமான ராக்பெல்லரிடம், விமானப் பயணத்தின்போது அருகில் இருந்த ஒருவர் கேட்டாராம், “உங்களிடம்தான் போதுமான அளவுக்கு செல்வம் இருக்கிறதே, இன்னும் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்பது அந்த பயணியின் கேள்வி. அதற்கு ராக்பெல்லர் என்ன சொன்னார் தெரியுமா? “உண்மைதான், நாம் மிக உயரமான இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது விமான இயக்கத்தை நிறுத்திவிட்டால் உயரமான இடத்தில் நிலைத்துவிடுவோமா? என்று பதில் கேள்வி கேட்டவர், “அது போலத்தான் செல்வம் சேர்ந்துவிட்டாலும் உழைப்பை நிறுத்த முடியாது” என்று விளக்கம் அளித்தாராம்.

    இருக்கும் நிலையில் திருப்தி அடைந்து விடக்கூடாது என்பது இதன் பொருளல்ல. எல்லா காலத்திலும் நிலைக்கும்படியான தகுதியும், உழைப்பும் உங்களிடம் இருக்க வேண்டும். அத்தகைய விவேகமும், தலைமைப் பண்பும் இருக்கும் வரை நீங்கள் வீழ்ந்துவிடாமல் இருப்பீர்கள். அது கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், அதைச் செய்து முடிப்பதில் உங்கள் விவேகமும், மேலாண்மைப் பண்பும் எல்லோரும் போற்றும்படியாக இருக்க வேண்டும்.

    உங்களைப் புறக்கணித்து ஒதுக்கும் வகையில் உங்கள் செயல்பாடு எப்போதும் இருந்துவிடக்கூடாது. எப்போதும் உங்களுக்கு எதிரான, எதிர்மறையான விஷயங்கள் விவாதிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. உங்களை சிறுமைப்படுத்தும் மதிப்பிடல்கள் தோன்றக் கூடாது.

    யாரும் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் அமைய மாணவப் பருவத்திலும், வேலை உலகத்திலும் நீங்கள் செய்ய வேண்டியவை...

    எல்லாவற்றுக்கும் பொறுப்பாளராகுங்கள்: எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள். அதிகமான வீட்டுப்பாட பயிற்சிகள், புதுமையான பயிற்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளை, உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக நினைக்காமல், என்னால் செய்ய முடியும் என்பதை என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள். பொறுப்பேற்று செயல்படுங்கள். மேலதிகாரியிடம் நற்பேறு வாங்குவதற்காக பணி செய்யாமல், ஆத்மார்த்தமான பணியால் மன மகிழ்ச்சி கொள்ளுங்கள். அது இன்றில்லா விட்டாலும் ஒருநாள் உங்களை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.

    முடிவு எடுக்க தயங்காதீர்கள் : வெற்றியைத் தடுக்கும் முக்கிய எதிரி தயக்கம். “ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதைவிட தவறான முடிவு மேலானது” என்பது வணிக வாக்கு. தொடங்காமல் இருப்பதைவிட தோல்வி பலபடி முன்னேற்றம்தான். எனவே எந்த சூழ்நிலையிலும் தயங்கி நிற்பதுடன் ஒரு முடிவெடுத்து செயல்படுவது வெற்றியை நெருங்கிச் செல்ல பெரிதும் கைகொடுக்கும். இப்போது உங்களுக்கு தடையாய் இருக்கும் சூழலை எதிர்கொள்ள நீங்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்படுங்கள், பலன் வெற்றியாய் மாற வாய்ப்புகள் அதிகம்.

    நட்புறவுச் செயல்பாடு:
    எப் போதும் நட்புணர்வுடன் கூடிய செயல்பாடு வெற்றியை எளிமையாக்கும். சிம்மாசனத்தை நிலைப்படுத் தும். நீங்கள் வகுப்பின் தலைமை மாணவராகவோ, பணியில் குழுவின் தலைவராகவோ, அதிகாரி யாகவோ இருக்கலாம். ஆனால் அனைவருடனும் இணக்கமான நட்புறவு கொண்டிருந்தால் மட்டுமே உங்கள் பொறுப்பில் நிலைத்திருக்கவும், மேலும் உயரவும், வெற்றி காணவும் முடியும். வெறும் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி வெற்றி கண்டவா்கள் இல்லை.

    தன்னிலை அறிதல்: எந்த நிலையிலும் தனது செயல்பாடுகளை பரிசோதித்துப் பார்ப்பவர்கள் பின்னடைவைச் சந்திப்பதில்லை. மாணவப் பருவத்தில் நீங்கள் உங்கள் முந்தைய தேர்வுகளையும், படிக்கும் நேரத்தையும், மதிப்பெண் உயர்வையும் ஒப்பிட்டு உங்கள் செயல்பாட்டை மதிப்பிடுங்கள். அது உங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும். வேலை உலகில், தங்கள் குழுவினர் மத்தியிலும், உயர் அதிகாரி அளவிலும் உங்களின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா? உங்களைப்பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் இருக்கிறதா? என்பதை சுயமதிப்பீடு செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தன்மதிப்பீடு செய்து கொள்வது வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

    இத்தகைய விவேகமான செயல்பாடு வாழ்வில் என்றும் சரிவின்றி நிலைத்த வெற்றியைத் தரும்.
    Next Story
    ×