search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாய் பெண் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியவை
    X

    தாய் பெண் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியவை

    ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும்.
    இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. 2014-ம் ஆண்டில் 89 ஆயிரமாகவும், 2015-ல் 94 ஆயிரமாகவும் இருந்த குற்றங்கள், 2016-ல் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை வழக்குகள் 2015-ல் 319 ஆக இருந்தது, 2016-ல் 421 ஆக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் காதுகேளாத சிறுமிக்கு பலரால் ஏற்பட்ட விபரீதம்போல் இப்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    எங்கோ யாருக்கோ நடந்தது என்று தாய்மார்கள் இனியும் கருதிக்கொண்டிருக்காமல், இந்த பிரச்சினை தன் வீட்டு குழந்தைகளையும் பாதிக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். அப்படி ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் வீட்டில் இது போன்ற பாதிப்பு உருவாகாமல் தடுத்தால்தான், ‘இது நம்ம நாடு.. இனி இது நடக்கக்கூடாது..’ என்ற நிலையை உருவாக்கமுடியும்.

    “பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைகளோடு நீங்கள் இரவு உணவு சாப்பிடும்போது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் டெலிவிஷனில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது உங்கள் கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையிடம் மனம்விட்டுப்பேச வேண்டிய பொன்னான நேரத்தை இழந்துவிடுகிறீர்கள்.

    அந்த நேரத்தில் சுமுகமான சூழலை உருவாக்கி, அமைதியாக அன்றாட நிகழ்வுகளை பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தால் உங்கள் மகள் பள்ளி வாகனத்திற்கு காத்திருந்தது முதல், அதில் ஏறியது, பயணம் செய்தது, அந்த டிரைவர் தன்னோடு நடந்துகொண்டது, பள்ளியை சென்றடைந்தது.. பள்ளியில் நடந்தது.. என்று ஒவ்வொன்றையும் உங்களிடம் கூறுவாள். அப்போது எங்கேயாவது பிரச்சினைக்குரிய விஷயம் நடந்திருக்கிறதா? பாலியல் தொந்தரவு ஏதேனும் நடந்துள்ளதா? என்பதை தாய்மார்களால் கண்டறிந்துவிட முடியும்.

    அதுபோல் பேசி, சிரித்து, விளையாடி, குழந்தைகளுக்கு சோறூட்டினால், குழந்தை மகிழ்ந்து தாயிடம் எல்லாவற்றையும் பேசும். அப்படி பேச வேண்டிய குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து அதற்குள் அதனை சிறைபடுத்திவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் குழந்தைகளுக்கு பேசுகின்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொடுத்தால்தான், தங்களுக்கு ஏற்படும் அதுபோன்ற அவஸ்தைகளை அவர்கள் தாயிடம் சொல்வார்கள்.

    பெரும்பாலான பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுடன் எப்படி பொழுதுபோக்குகிறீர்கள்? என்று கேட்டால், சினிமாவுக்கு போகிறோம்- மாலுக்கு போகிறோம்- சுற்றுலாவுக்கு போகிறோம் என்று சொல்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்று குழந்தையோடு இருட்டறையில் அமர்ந்து, திரையையே பார்த்துக்கொண்டிருப்பதை, குழந்தையுடன் நேரத்தை செலவிடுதல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

    அதுபோல் ஷாப்பிங் செல்வதும், அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் குழந்தையுடனான பொழுதுபோக்கு அல்ல. குழந்தையோடு சுற்றுலாவுக்கு சென்று, அங்கே ஓய்வின்றி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து பார்த்துவிட்டு, அந்த நேரத்தை எல்லாம் குழந்தையோடு செலவிட்டேன் என்று கூறுவதும் சரியல்ல. குழந்தைக்கான நேரத்தை அதனோடு மட்டும் செலவிடவேண்டும். அந்த நேரத்தில் வேறு தொந்தரவோ, அடுத்தவர்களின் தலையீடோ இருக்கக்கூடாது.

     

    அப்போது அது மனம்விட்டுப் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால், குழந்தையின் மனதில் இருக்கும் எல்லா விஷயங்களும் வெளிவரும். எல்லாவித சந்தேகங்களுக்கும் அது தாயிடம் விடைதேடும். அதை நுட்பமாக கவனித்தால் குழந்தைக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஏதாவது நடந்திருந்தால், நடந்துகொண்டிருந்தால், தெரிந்துவிடும். முளையிலே அதனை கிள்ளி எறிந்துவிடலாம்..

    “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்காக நாம் அரசாங்கத்தையோ, சமூகத்தையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும். குழந்தை பள்ளியில் இருந்து வந்த உடன் என்ன படித்தாய்? எவ்வளவு மதி்ப்பெண் வாங்கினாய்? ஆசிரியர் உன்னை பாராட்டினாரா? என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கிறார்கள். வேனில் என்ன நடந்தது? வேன் டிரைவர் எப்படி நடந்துகொண்டார்? பள்ளியில் என்னவெல்லாம் நடந்தது? என்று கல்விக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு விஷயங்கள் பற்றியும் பேசவேண்டும்.

    பல தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். நான் சொல்வதைகேள், ஒழுங்காக இருந்து படி, தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசாதே, சும்மா இருக்காதே எதை யாவது செய்.. என்று கட்டளையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி கட்டளையிடும்போது தாய், குழந்தைக்கு இடையேயான சுமூக உறவில் முட்டுக்கட்டை விழுந்து விடும்.

    அந்த குழந்தை தாயிடம் மனந்திறந்து பேசாது. அப்படி பேசாதபோது குழந்தைக்கு பாலியல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது தாய்க்கு தெரியாமல் போய்விடும். பொதுவாக பெண் குழந்தை வயதுக்கு வந்த பின்பே தாயார் அதன் மீது அதிக கவனம் செலுத்துகிறார். 9,10 வயது சிறுமிகளுக்கு பாலியல் பாதிப்பு எதுவும் நடக்காது என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். பத்து வயது சிறுமி, அவளது பெற்றோருக்கு மட்டும்தான் குழந்தை. அவளை பார்க்கும் அனைவரும் அவளை குழந்தையாக தான் நினைப்பார்கள் என்று தவறாக கருதி விடக்கூடாது.

    ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ‘யாரும் குழந்தைகளை எந்த ‘டச்’சும் செய்யக்கூடாது’ என்று வலியுறுத்துங்கள். ‘பெற்றோரும், டாக்டரும் தவிர வேறு யாரும் உன்னை எக்காரணத்தைக் கொண்டும் தொட அனுமதிக்காதே. எந்த உறுப்பு என்றில்லை. உன் உடல் முழுக்க பொக்கிஷம்தான். எங்கே தொட்டாலும் நீ தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். தற்காப்புக் கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    முன்பு கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. பாட்டிகள் தனது பேத்திகளிடம் மனம்விட்டுப்பேசி அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்துவிடுவார்கள். நேரத்தை செலவிட்டு குழந்தைகளை பக்குவப்படுத்தி வளர்ப்பார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் இல்லாததால் எதற்கெடுத்தாலும் உடனே ‘சைக்காலஜிஸ்ட் ஒப்பீனியன்’ கேட்க செல்கிறார்கள். குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டு, மனோதத்துவம் பேசி பலனில்லை.

    பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதுபோல், ஒவ்வொரு தாயும் தனது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். 
    Next Story
    ×