search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?
    X

    பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா?

    பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.
    `மற்றவர்களை மரியாதையாக நடத்துவதும், நம்மையறியாமல் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கேட்பதும்தான் மனிதத்தன்மை. இதில் பெற்றோர், பிள்ளைகள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே `பெத்தப் பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்பதா' என்கிற ஈகோ காணாமல் போய்விடும். இப்படி ஈகோ இல்லாத பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் தாங்களும் அப்படியே வளர்வார்கள். அடுத்தது, ஒரு தடவை மன்னிப்புக் கேட்டபிறகு, அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது என்பதிலும் பெற்றோர்களாகிய நாம்தாம் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

    `அம்மாவும் அப்பாவும் தப்புப் பண்ணிட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறாங்க' என்கிற எண்ணம் உங்கள் குழந்தைகளின் மனதில் பதிய பதிய காலப்போக்கில் அந்த உணர்வானது அன்பாகி, மரியாதையாகி, பக்தியாக மாறும். பெற்றவர்கள்மீது பக்தி செய்கிற பிள்ளைகள், வளர்ந்தபிறகு பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டது என்று நினைத்து அவனை/அவளை அடித்து விடுகிறீர்கள். பிறகு, பிள்ளைமீது தவறு இல்லை என்பது தெரிந்து அவனிடம்/அவளிடம் மன்னிப்புக் கேட்பது ஒருவகை. இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. அதாவது, பிள்ளை நிஜமாகவே தப்பு செய்துவிட்டது. அதனால் பிள்ளையை அடித்து விட்டீர்கள். இதன் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் நிதானமானதும், பிள்ளையிடம் பேசுங்கள்.



    `நீ இப்படித் தப்பு செய்ததால் அம்மாவுக்குக் கோபம் வந்து அடித்து விட்டேன். ஆனால், நான் அடித்ததற்கு `ஸாரி' என்று கேட்டு விடுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், `யாராவது தவறு செய்தால் அவர்களை அடித்தும் திருத்தலாம் போல' என்கிற பாடம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவே கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு. கூடவே, செய்த தவற்றை மறுபடியும் பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைப்பதும் உங்கள் கடமை.

    கடைசியாக ஒரு விஷயம், பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.
    Next Story
    ×