search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிகள்
    X

    பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிகள்

    பெண்கள் தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.
    இந்தியர்கள் அனைவரும் தங்க நகைகள் மீது கொண்டிருக்கும் மாறாக்காதலுக்கு, அவை அவசரப் பணத் தேவையில் உடனடியாகக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம். ஆனால், தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.

    சரி, தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளைப் பார்க்கலாம்...

    தங்க நகைகள்:

    தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக நாம் பின்பற்றும் வழி. தங்க நகைகள் வாங்கும்போது மொத்தக் கொள் முதல் செலவுடன், தயாரிப்புச் செலவுகளும் சேர்ந்திருக்கும். அது மொத்தச் செலவில் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, செய்கூலி, சேதாரம் என்று நாம் கணிசமானதொரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

    வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.

    தங்க நாணயம், தங்கக் கட்டிகள்:

    தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்தது. நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கிகள் தங்க நாணயங்களை விற்றாலும், அவற்றை அவை திரும்ப வாங்கிக்கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள். தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும்.

    தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

    கோல்டு ஈ.டி.எப்:

    மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் பலவகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு ஈ.டி.எப்.பும் ஒன்று. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.



    பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு யூனிட்- ஒரு கிராம் தங்கம்) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும். மேலும், இதை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றால் பணமாகத்தான் கிடைக்கும், தங்கமாகக் கிடைக்காது.

    கோல்டு பண்டு:

    கோல்டு பண்டும் கோல்டு ஈ.டி.எப். போன்றதுதான். தங்களுக்கு டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு பண்டு மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்தபட்சத் தொகையாகும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ. 500, ரூ. 1000 என்கிற அளவில் செய்யலாம்.

    கோல்டு ஈ.டி.எப் மற்றும் கோல்டு பண்டு திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பது எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை. மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.

    பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு:

    நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கச் சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.

    ஆனால் மேற்சொன்ன முதலீட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.

    ‘ரிஸ்க்’ வேண்டாம் என்பவர்கள் கோல்டு ஈ.டி.எப். அல்லது கோல்டு பண்டு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.

    அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்போதும் தங்கம் ஒரு நல்ல முதலீடுதான். எனவே நாம் விரும்பும் விதத்தில் தங்கம் வாங்கலாம்.
    Next Story
    ×