search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் கவலைகளை மறப்போம்.. கண்ணீருக்கு விடைகொடுப்போம்..
    X

    பெண் கவலைகளை மறப்போம்.. கண்ணீருக்கு விடைகொடுப்போம்..

    வீடு, குழந்தைகள், வேலை என்று சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா பெண்களுமே தினந்தோறும் ஏதாவது ஒருவகையில் பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
    பெண்கள் சவால்களை சந்திக்கவும், பொறுப்புகளை நிறைவேற்றவும் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் மகள், சகோதரி, மருமகள், மனைவி, தாய், பாட்டி போன்ற பல பதவிகளை வகிக்கிறார்கள். அந்த ஒவ்வொரு பதவிக்குரிய கடமைகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது.அந்த கடமைகளை நிறைவேற்ற விரும்பும் பெண்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. வீடு, குழந்தைகள், வேலை என்று சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா பெண்களுமே தினந்தோறும் ஏதாவது ஒருவகையில் பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ஆரோக்கியத்திற்கு சுத்தமும் அவசியம். தினமும் இருமுறை பல்துலக்குதல், குளித்தல், கழிப்பறையை பயன்படுத்திய பின்பு சோப் பயன்படுத்தி கைகழுவுதல், சாப்பிடுவதற்கு முன்பும் கைகழுவுதல் போன்றவை கட்டாயம் என்பதை தனது வாழ்வியல் நடவடிக்கைகள் மூலம் தாய், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.

    இப்போதெல்லாம் பெண்கள் எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் அளவுக்கு மீறிய உடல் வளர்ச்சி, தவறான உணவுப் பழக்கம் போன்றவை களாகும். மேலும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மூன்று வயதில் இருந்து கல்லூரி கன்னிகளாய் சிறகு அடித்து பறக்கும் வரையில் பாலியல் பலாத்காரம் என்ற கொடூர அரக்கனின் பிடியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் வீட்டில் உள்ள உறவுகளாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும் சிறுமிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

    அவர்களுடன் அன்புடன் பழகி வீட்டுக்குள் அழைத்து மிட்டாய், சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யும் வக்கிர மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அதனால் குழந்தைகளை கவனமாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் பற்றியும், மாதவிலக்கு போன்றவை பற்றியும் விளக்கிச் சொல்லி அவர்களின் சந்தேகங்களை போக்குவது தாயாரின் கடமையாகும்.



    படித்து முடித்தபின் பெண்கள் நகரங்களை நோக்கி படை எடுத்து சென்று வேலை தேடுகிறார்கள். வேலை கிடைத்ததும் பெண்கள் விடுதியிலோ அல்லது நான்கு, ஐந்து பெண்களாய் சேர்ந்து வீடு எடுத்து தங்கியோ வேலைக்கு போகிறார்கள். அப்படி வேலைக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் வேளா வேளைக்கு சாப்பிடுவது இல்லை.

    பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து சக தோழிகளுடன் அரட்டை அடித்துவிட்டு, காலையில் வெகு நேரம் தூங்குவது, அதன் பிறகு வேலைக்கு நேரமாகிவிட்டதே என்று சாப்பிடாமல் அவசரம் அவசரமாக ஓடுவது, பசி அதிகமாகி மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது... இவை எல்லாம் அசிடிட்டி, உடல் பருமன் போன்ற வியாதிகளை ஏற்படுத்தும். உணவு முறையும், வாழ்க்கை முறையும் மாறுவதால் தேவையற்ற வியாதிகளாலும், மன அழுத்தத்தாலும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

    எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்க பெண்களுக்கு முதலில் தேவைப்படுவது உடல் ஆரோக்கியம். ஆரோக்கியத்திற்கு தேவை சத்தான உணவு. தானும் சத்தான உணவுகளை உண்டு, குழந்தைகளுக்கும் அவைகளை வழங்கவேண்டிய கடமை தாய்க்கு இருக் கிறது.

    அந்த சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு சமைத்து தராமல் சூழ்நிலை காரணமாகவோ அல்லது சோம்பேறித் தனத்தினாலோ துரித உணவுகளை அடிக்கடி வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்படி அடிக்கடி துரித உணவு வகைகளை வாங்கிக் கொடுப்பதால் ஒரு கட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவு வகைகள் பிடிக்காமல் உணவகங்களில் வாங்கித்தரப்படும் உணவு வகைகளுக்கு குழந்தைகள் அடிமையாகி விடுகின்றன. ஆகவே சத்தான உணவுகளை வீட்டிலேயே குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது ஆரோக்கியத்திற்கு பெற்றோர் வழிவகுக்க வேண்டும்.


    பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகள் பள்ளியின் கழிவறை சுத்தமாக இல்லை என்றால் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வரும் வரை ‘நாப்கினை’ மாற்றாமல் இருந்துவிடுகிறார்கள். இது தவறான பழக்கம். தினமும் மூன்று அல்லது நான்கு முறையாவது நாப்கினை மாற்றவேண்டும். இல்லாவிட்டால் நோய்த்தொற்று ஏற்படும். ‘டீன் ஏஜ்’ பருவத்தில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

    இந்த பருவத்தில் நல்ல உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காவிட்டால் உடல் பருமனாகி, தேவையற்ற ஊளைச்சதையால் அவதிப்பட நேரிடும். இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படுவதுடன், கருப்பையில் நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ.டி) ஏற்பட்டு அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டிய நிலை வரலாம். ஆகவே பெண்கள் ‘பாஸ்ட் புட், ஜங்க் புட், நூடுல்ஸ், சிப்ஸ்’ உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு பதில் மாலை நேரங் களில் பொரி, கடலை, சுண்டல், பால், பழங்கள் போன்ற சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

    திருமணமான பெண்கள் வேலைக்குப் போகாமல் குடும்ப தலைவியாக மட்டும் இருந்தால் வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு சுமுகமாக குடும்பத்தை நிர்வகித்துக்கொள்வார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களோ பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருபுறம் கணவனின் தேவைகளை நிறைவேற்றிவிட்டு, மறுபுறம் மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் குழந்தைகளை கவனித்துவிட்டு அவசர அவசரமாக பஸ், ரெயிலை பிடித்து வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு வருவதற்குள் சோர்ந்துபோய்விடுகிறார்கள்.

    உட்கார்ந்தே வேலை பார்க்கும் பெண்களில் பலருக்கு முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலி உள்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் எடுக்க வேண்டும். அதன் மூலம் உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.



    பெண்களை அதிகமாக தாக்கும் நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம். மார்பக புற்றுநோய்க்கான சுய பரிசோதனையை டாக்டரிடம் முறையாக கேட்டறிந்து அதை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டில் நீங்களே செய்து பார்த்துக்கொள்ளலாம்.

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘மேமோகிராம்’ என்ற பரிசோதனையை செய்து கொள்ளலாம். ‘மெனோபஸ்’ பருவத்தில் உள்ள பெண்கள் ‘பாப்ஸ்மியர்’ போன்ற பரிசோதனைகளை செய்ய முன்வரவேண்டும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் முற்றிலுமாக சரி செய்து விடலாம்.

    இந்தியப்பெண்கள் 45 வயது முதல் 50 வயதுக்குள், மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோகும் மெனோபஸ் கட்டத்தை அடைகிறார்கள். அந்த காலகட்டத்தில் டாக்டரின் ஆலோசனையை பெற்று வைட்டமின், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்களின் உடலில் சில ஹார்மோன்கள் இரவிலும், சில ஹார்மோன்கள் அதிகாலையிலும் சுரக்கும். ஆகவே ஆரோக்கியமாக வாழவிரும்பும் பெண்கள் இரவில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடாது. நன்றாக தூங்கவேண்டும். கவலைகளை மறந்து பெண்கள் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சியாக வாழவும் முன்வரவேண்டும். எதுவந்தாலும் சமாளிக்கலாம், எக்காரணம் கொண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் பெண்கள் உறுதியாக இருக்கவேண்டும். சிறுவயது பருவம் முதல் இயற்கை எய்தும் கடைசி காலம் வரை அந்த உறுதியை கடைப்பிடிக்கவேண்டும்.
    Next Story
    ×