search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அந்தரங்கத்தை வெளியிடுவது ஆபத்து
    X

    அந்தரங்கத்தை வெளியிடுவது ஆபத்து

    வலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
    அந்தரங்கம் ஊமையானது. ஆனால் அதை அடுத்தவர்களிடம் சொல்லும்போது அதற்கு சிறகுகள் முளைத்து பறக்கத்தொடங்கிவிடுகிறது. அந்தரங்கம் என்பது ரகசியமானது. அந்த ரகசியம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும். ரகசியம், ரகசியமாக இருப்பது தனி மனித வாழ்க்கைக்கு நல்லது. ரகசியம் வெளியே கசிந்து சுவாரசியமாகிவிடுவது, பிரச்சினையாகிவிடும். சில நேரங்களில் அது ஆபத்தாகவும் மாறிவிடும்.

    மனிதர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். முதல் வகையினர், வீட்டு பிரச்சினைகள் முதல் அலுவலக பிரச்சினைகள் வரை அனைத்தையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் தன்னை பற்றியோ, மற்றவர்களை பற்றியோ மிக முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும்போது, அதை வைத்து சிலர் அவர்களை மிரட்டலாம். பணம் பறிக்கவும் செய்யலாம். நிலைமை எல்லைமீறி போய்விட்ட பின்பு வருந்தி பலனில்லை.

    இரண்டாவது ரகத்தினர் கல்லில்கூட நார் உறிக்கும் ரகத்தினர். தனக்கு தெரிந்த ரகசியங்களை வெளியே சொல்லவே மாட்டேன் என்றுகூறும் மனோபலம் கொண்ட மனிதர்களிடம்கூட பேசிப்பேசி ரகசியங்களை கறந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வேலை, தான் கறந்து பெற்ற தகவலை மற்றவர்கள் கேட்காவிட்டாலும் சுரந்துகொண்டே இருப்பார்கள். பெற்ற தகவல் சூடும், சுவையும் இல்லாததாக இருந்தால் அதில் தங்கள் தேவைக்கு மசாலா சேர்த்து பரிமாறிவிடுவார்கள்.

    இருபாலரும் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சிலருக்கு, அவர்களது குடும்ப ரகசியங்களை தெரிந்துகொண்டு, அடுத்தவர்களிடம் சொல்வது பிடித்த விஷயமாக இருக்கும். வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொல்வதைப்போல், எல்லோரது வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கின்றன. பிரச்சினைகளும் இருக்கின்றன. அவைகளை எல்லாம் அறிய முயற்சிப்பது முதலில் அபத்தம். அதை அறிந்துகொண்டு அந்த சம்பவங்களுக்கு கண், காது வைத்து அடுத்தவர்களிடம் சொல்வது பெரும் அபத்தம்.

    ஸ்டெல்லா நன்றாக படித்த பெண், அழகான தோற்றமும் கொண்டவள். அலுவலகம் ஒன்றில் வேலைபார்த்தாள். அவளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் பேசிப் பேசியே மற்றவர்கள் பிராணனை எடுத்துவிடுவாள். வீடு, அலுவலகம் என்று வித்தியாசம் பார்க்கமாட்டாள். ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் போட்டுக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அதில் மேலதிகாரியும் அடக்கம். அடுத்தவர்கள் ரகசியத்தை ஒருநாள் தெரிந்துகொள்ளாவிட்டால்கூட அவளுக்கு மண்டையே வெடித்து விடும்.

    அவளிடம், ‘இந்த பழக்கம் மிக மோசமானது’ என்றால், வித்தியாசமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘என்னிடம் தினமும் மூன்று நான்கு பேராவது நாங்க ரகசியமாக வைத்திருந்த விஷயம் உனக்கு எப்படிடீ தெரியும்?’ என்று கேட்கவேண்டும். அப்படி கேட்டால்தான் எனக்கு அன்று அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும்’ என்பாள்.

    இது ஒரு அற்ப மகிழ்ச்சி. இதை அவள் அடைவதற்காக, தினமும் ரொம்பவும் போராடுகிறாள். தன்னிடம் பேச விரும்பாதவர்களிடம்கூட வலிய போய் பேச்சுக்கொடுத்து, அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்களையாவது பிடுங்கிவிடுவாள். அவர்கள் கொஞ்சம்கூட உண்மையில்லாத கற்பனை கதையை சொன்னாலும் அதையும் அடுத்தவர்களிடம் சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருப்பாள்.

    இப்படி வலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

    பிரபலமான நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வயது பொறுப்பான அதிகாரி ஒருவரை சந்திக்க ஒரு இளம் பெண் அடிக்கடி வந்துபோனாள். இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர், அங்கு வேலைபார்க்கும் சில பெண்களிடம் சகஜமாக பழகுவார். அது வேறு சில பெண் களுக்கு பிடிக்கவில்லை. அதனால், ‘அவரை சந்திக்க புதிதாக வந்த இளம்பெண் யார்? அவளுக்கும்- அவருக்கும் என்ன உறவு?’ என்ற சூடான விவாதத்தை, எதிர்ப்பணி பெண்கள் நடத்தினார்கள்.



    அதில் ஒரு பெண், ‘நான் ஒரு உண்மையை சொல்கிறேன். அதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கும்- அவளுக்கும் தவறான தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு அவரது குடும்பத்திற்கு தெரிந்து பெரும் பிரச்சினையை உருவாக்கிவிட்டது’ என்று உண்மைக்கு புறம்பான செய்தியை சுவாரசியத்திற்காக சொல்லிவிட்டாள்.

    அதை பெரும்பாலான பெண்கள் நம்பாவிட்டாலும், சிலர் ‘பாவம்.. அந்த பொண்ணுக்கிட்டே போய் இப்படி மாட்டிக்கிட்டாரே!’ என்று `உச்' கொட்டினர். அலுவலகத்தில் பரவிய இந்தப் புரளி பின்பு அந்த அதிகாரியின் வீட்டை சென்றடைந்துவிட்டது. கடைசியில் அவரது மகளை திருமணம் செய்துகொள்ளப் போகும் சம்பந்தி வீட்டிற்கும் போய்விட்டது.

    அதனால் மனக்கவலையடைந்த அவர், அந்த புரளியை கிளப்பிவிட்டது யார் என்ற விசாரணையில் இறங்கினார். அந்த பெண் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டாள். அவள் வேலையில் இருந்து நீக்கப்பட்டாள்.

    அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து தேவையற்ற விஷயங்களை திரட்டுவது, மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி இன்னொருவரிடம் துருவித் துருவி கேட்பது, அவைகளை தொகுத்து இன்னும் பலரிடம் சொல்வது போன்ற அனைத்துமே ஒருவித மனோவியாதி என்று, மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அந்த பழக்கம் ஏற்படும் தொடக்ககாலத்திலே, அது தவறு என்பதை உணர்ந்துகொண்டால், அதிலிருந்து ஓரளவு விடுபட முடியும். அதுவே சுபாவமாக மாறிவிட்ட பின்பு, அந்த தவறை அவர்களே புரிந்துகொண்டாலும் அவர்களால் அதில் இருந்து விலகிவர முடியாது. அவர்களது மூளை எப்போதும் சுற்றி இருப்பவர்களை பற்றியே சிந்தித்து சுழன்று கொண்டிருக்கும். கிடைக்கும் விஷயத்தை வைத்துக்கொண்டு கூடுதலாக இவர்களே ஆளுக்குதக்கபடி கற்பனைகளை கலந்து புதுப்புது விஷயங்களை தயார்செய்வார்கள். அதை மற்றவர்களிடம் சொல்லும் வரை அவர்களுக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருக்கும்.

    இந்த தீய பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டால்தான் நிம்மதியாக வாழமுடியும் என்ற எண்ணம் அவர் களுக்கு ஒருபக்கத்தில் இருந்துகொண்டிருந்தாலும், அதில் இருந்து மீண்டுவர அவர்களால் முடியாது. சொறிந்து சுகம் கண்டவர்கள் புண் ஆறிய பின்பும், சொறிந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குவதுபோன்று அது அமைந்துவிடும்.

    ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் அந்தரங்கங்கள் இருக்கும். அதைப் பற்றி யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பார்கள். அப்படியே யாருக்காவது தெரிந்துவிட்டாலும், அது அவரைக் கடந்து மற்றவர்களிடம் போய்விடக்கூடாது என்பதிலும் மிகுந்த கண்டிப்புகாட்டுவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கம் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்றடையும்போது, அது சில நேரங்களில் பலவிதமான குடும்ப நெருக்கடிகளுக்கும், சமூக நெருக்கடி களுக்கும் உள்ளாகிவிடுகிறது.

    பொதுவாக இப்படி அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் ஆர்வம் செலுத்தும் ஆண்களும், பெண்களும் புத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தங்கள் அறிவையும், ஆற்றலையும், கற்பனைத்திறனையும் நல்ல விதத்தில் பயன்படுத்த முன்வரவேண்டும். முன்வந்தால் அது அவர்களுக்கும், சமூகத்திற்கும் பலன்தருவதாக அமையும்.

    Next Story
    ×