search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பதறவைக்கும் புத்தாண்டு கொண்டாட்டம்..!
    X

    பதறவைக்கும் புத்தாண்டு கொண்டாட்டம்..!

    ‘டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது’ என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன.
    புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை... அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வருடத்தின் கடைசி நாளான 31-ந் தேதியின் மாலை வேளையிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும்.

    வாணவேடிக்கைகள், பளிச்சிடும் மின்விளக்குகள், ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்கள் என்பதையும் தாண்டி, ‘டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது’ என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன. தார்ச்சாலையில் நெருப்புப் பறக்க... மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டுகளை உரசியவாறு, விண்ணைக் கிழிக்கும் சைலன்சர் சத்தத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது ‘கெத்’ என நினைக்கிறார் கள்.

    ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. மதுபோதையில் இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள், புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாட வருபவர்களை பெரும் ஆபத்தில் சிக்கவைத்துவிடுகின்றன.

    தேவாலயங்களுக்கும், கோவிலுக்கும் செல்பவர்கள் கூட.... பயந்தபடியே சாலையை கடக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா, வாலாஜா, அண்ணா, பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை போன்ற சாலைகளில் மோட்டார்சைக்கிள், கார்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். இந்த சாலைகளில் பயணிப்பது மட்டுமல்ல..., கடப்பதும் கடினமான ஒன்றுதான். சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேநிலை தான் நீடிக்கிறது. இத்தகைய கலாசாரம் எப்படி ஆரம்பித்தது என்பதை விட, அது ஏன் இன்றும் தொடர்கிறது என்பதே பெரும் கேள்விக்குறி.

    “புத்தாண்டை கொண்டாட நிறைய வழிகள் இருக்கிறது. ஆனால் இளைஞர்களுக்கு பைக் ஓட்டுவதும், ‘வீலிங்’ செய்வதும், பைக்கில் நடனமாடுவதும் தான் கொண்டாட்டமாக தெரி கிறது. வண்டியின் சத்தத்தை அதிகப்படுத்தும் ‘பில்டர்’களை பொருத்துவது, சைலன்சரில் நெருப்பு வர செய்வது, எஞ்ஜினை டியூனிங் செய்வது என... ஒரு நாள் கூத்திற்காக பல ஆயிரங்களை செலவழிக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால்... பெரும் தொகையை செலவழிப்பவர்கள், அதை ரசித்து ஓட்ட உயிரோடு இருப்பதில்லை. என்னுடைய மெக்கானிக் கடையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது” என்று சோகமாக சொல்கிறார், புதுப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

    இவர் சொல்வதை போன்றே புத்தாண்டை குதூகலமாக கொண்டாட நினைப்பவர்கள், அதை முழுவதுமாக கொண்டாடாமலேயே விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் விபத்தில் சிக்கியவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு சோகமயமாக தொடங்குகிறது.

    “2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சென் னையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2016-ம் ஆண்டு 900 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 6 பேர் இறந்துள்ளனர். 2017-ம் ஆண்டின் புத்தாண்டு, 6 பேரை காவு வாங்கியது. இவை அனைத்தும் புத்தாண்டு பிறந்த ஒரே இரவில் நிகழ்ந்தவை..! இதில், சோகச் செய்தி என்ன தெரியுமா? பைக் சாகசத்தில் ஈடுபடாமல்... சாலையின் ஓரத்தில் தன் குடும்பத்தினருடன் பைக்கில் சென்றவர்களும், நடைபாதைவாசிகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என்று ஆதங்கப்படுகிறார், ராதாகிருஷ்ணன். சாலை விபத்துகளை தடுக்க போராடும் ‘தோழன்’ தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இவர், புத்தாண்டில் நடக்கும் விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் சர்வே எடுத்து வருகிறார். அதில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கிறது. இத்தகைய அலட்சியமான உயிர் இழப்புகளை தவிர்ப்பதே தோழன் அமைப்பின் குறிக்கோள்.



    “ஊரே புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருக்கும். அந்தசூழலில் நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறோம். அடுத்தவரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றுவதே எங்களுடைய கொண்டாட்டம். இருப்பினும் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. விபத்தில் சிக்குபவர்களை மீட்க செல்வதும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் பெரும் சவாலாக அமைந்து விடும். ஏனெனில் வழக்கத்தை விட, சாலைகளில் அதிக வாகனங்கள் சுற்றிக்கொண்டிருக்கும். 

    அதில் சிலர் மதுபோதையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடி ஓட்டுபவர்கள். அவர்களது உயிரையும் காப்பாற்ற வேண்டும், ஆம்புலன்ஸில் துடிப்பவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். இத்தகைய நெருக்கடியில் தான் புத்தாண்டு எங்களுக்கு பிறக்கிறது. இத்தனை சவால்களை சமாளித்து மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு உரிய சிகிச்சை கிடைக்குமா..? என்பது சந்தேகம் தான். ஏனெனில் புத்தாண்டு நள்ளிரவில் நூற்றுக்கணக்கான விபத்துகள் நடப்பதால்.... அரசு மருத்துவமனையே பரபரப்பாக இருக்கும். மருத்துவர்களும், செவிலியர்களும் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் சொல்லுங்கள்..?” என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.

    புத்தாண்டு இரவில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு, ‘நியூ இயர் பார்டிகளும்’ ஒரு காரணமாகின்றன. ரூ.2 ஆயிரம் இருந்தால் போதும், கிழக்கு கடற்கரை சாலைகளில் குதூகலமான புத்தாண்டை கொண்டாடலாம்.... என்பது போன்ற பல விளம்பரங்கள் பேஸ்புக்கில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்திவிட்டால் போதும்... ஆட்டம் பாட்டத்துடன், உணவு, மது போன்ற பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் 18 வயதி லிருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள் பணத்தை செலுத்தி.... ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். 

    இத்தகைய கொண்டாட்டங்கள் அதிகாலை 3 மணியோடு முடிந்து விடுவதால்... போதை தலைக்கேறியப்படி வண்டி கிளம்புகிறது. இதில் அதிர்ஷ்டம் இருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்ப.... மற்றவர்களை ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறது. போலீஸ் பாதுகாப்பு சாலை முழுக்க இருந்தாலும், அதை இளைஞர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் அணிவது இல்லை. சிக்னல்களை மதிப்பது இல்லை. பொதுமக்களை பயமுறுத்துவது, மதுபோதையில் வண்டி ஓட்டுவது என அவர்களின் அட்டகாசம் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதுபற்றி போலீஸ் வட்டாரங்களிடம் விசாரித்தோம்.

    “வாகனங்களை தாறுமாறாக ஓட்டுபவர்களின் மீது வருடந்தோறும் வழக்குகள் பதியப்படுகின்றன. ஒருசிலரது ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்திருக்கிறோம். இந்த வருடமும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு பரிந்துரை அனுப்பப்படுவதோடு, கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்படும்” என்று கண்டிப்போடு பேசினர்.

    போலீஸ் கெடுபிடி, வழக்கு, ஓட்டுநர் உரிமம் ரத்து... என எத்தனை கட்டுப்பாடுகள் கொண்டுவந்தாலும், பெற்றோரது கட்டுப்பாடு இல்லையென்றால், ஒன்றும் செய்ய இயலாது. ரத்தான உரிமத்தை திரும்ப பெறலாம். ஆனால் பறிபோன உயிரை திரும்ப பெறமுடியாது. அதை உணர்ந்தபடி பிள்ளைகளின் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்துங்கள். அப்போதுதான் புத்தாண்டு இனிக்கும்.
    Next Story
    ×