search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.
    கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சமயம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி கொள்வர். சில வேளைகளில் கடும் கோபம் கொள்வர். ஏன் காரணமே இல்லாமல் விரக்தி அடைவர். இதை ஆங்கிலத்தில் ‘மூட் ஸ்விங்’ என்பர். இந்த மனநிலை மாற்றங்களுக்குச் சுரப்பிகளின் ஏற்ற இறக்கங்களே காரணம். ஆக ஒரு கணவனுக்குக் கர்ப்பவதியாக உள்ள தன் மனைவியின் மனநிலை மாற்றம் குறித்த புரிதல் மிக மிக அவசியம். உங்கள் கரிசனமும், அன்பும் உங்களது மனைவியின் மனதை இதமாக்கும் கருவிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் மனைவி மருத்துவ ஆலோசனை பெற ஏற்ற பெண் மருத்துவரைத் தேர்வு செய்யுங்கள். கூடுதலாக வீட்டின் அருகாமைப் பகுதியில் உள்ள தரமான மருத்துவமனையாக அது இருக்கும் பட்சத்தில் இன்னும் நல்லது. உங்கள் மனைவியின் பிரசவ நேரத்தில் இது சௌகரியமான சூழலை ஏற்படுத்தும். கணவன்மார்களே உங்கள் கர்ப்பிணி மனைவிகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகள் அவசியம். அதனால் சரியான நேரக் குறிப்பெடுத்து அவர்களை அன்போடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உங்களின் மிக முக்கிய கடமையாகும்.

    உங்கள் கர்ப்பிணி மனைவிகளால் எல்லா வீட்டு வேலைகளையும் தனியாகச் செய்ய இயலாது. இந்த சமயத்தில் அவர்கள் நிச்சயம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் உரிமையோடு உதவி கேட்கும் நபர்களில் நீங்கள் முதலிடத்தில் உள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யும் போது சில பொருட்களின் நெடி அவர்களுக்குப் பிடிக்காமல் குமட்டல் உணர்வைப் பெற்றுச் சிரமப்படுவார்கள். இந்த சமயத்தில் நீங்கள் சமையலில் சற்று உதவிகரமாக இருந்து உங்கள் மனைவிமார்களுக்கு கை கொடுக்கலாம். அதற்கென்று அதீத அன்பில் உங்கள் மனைவியை நாற்காலியில் அமர்த்தி வைத்து விடாதீர்கள். அவர்களும் வீட்டு வேலை செய்ய வேண்டும். அது தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    கர்ப்பிணிப் பெண்களுக்குச் சரியான வழிகாட்டுதலும், உந்துதலும் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும். அவர்கள் தேவையான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே சுகப் பிரசவம் நடைபெறும். அதற்காகத் தினம் உங்கள் மனைவியை மாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். அதே மாதிரி காலை நேரத்தில் உரிய யோகா ஆசிரியரிடம் கற்று அறிந்த பிரசவ கால பயிற்சிகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய உங்கள் அன்பு மனைவியை ஊக்கப்படுத்தலாம்.

    சராசரியாகக் கணவன் மனைவிகளால் தினம் ஒரு சண்டையாவது போடாமல் இருக்க முடியாது. ஆனால் கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் அவசியம். குறிப்புக்காகப் பிரசவ நேரச் சிக்கல் வராமல் இருக்க இரும்புச் சத்து அதிகம் தேவை. அதனால் தினம் வேலை முடிந்து நீங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது காய்கனிகள், கீரைகள், பருப்பு வகைகள் என்று அட்டவணைப் போட்டு உங்கள் மனைவிக்கு தவறாமல் வாங்கி வாருங்கள்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீர் திடீரென எதாவது ஆசை வரும். திடீரென புளிப்பான மாங்காய் வேண்டும் என்பார்கள். உடனே கோவிலுக்குப் போக வேண்டும் என்று கெஞ்சுவார்கள். எப்போதோ வந்த திரைப்படத்தை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் போல உள்ளது என்பார்கள். தூரத்துக் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டிற்குப் போக வேண்டும் என்பார்கள். என்ன கணவன்மார்களே! கேட்கவே பயமாக உள்ளதா? ஆமாம் இது நிச்சயம் உங்கள் பொறுமைக்கான பரீட்சைக் காலம்தான். இயன்றவரை அவர்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

    ஒரு கணவனாக உங்கள் அருகாமையை உங்கள் கர்ப்பிணி மனைவி அதிகம் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு அவசியமாகத் தேவைப்படும். உங்கள் அன்பான பார்வைகளும்,தலை கோதல்களும், சின்ன தழுவல்களும் உங்கள் மனைவியின் மனதை விவரிக்க முடியாக அளவு பரவசப்படுத்தும் என்பது உண்மை. கூடுதலாக உங்கள் குழந்தை கருவறையில் செய்யும் குறும்புகள் அதிகம். உதாரணமாக உதைப்பது, இடம் மாறுவது என்று அடுக்கலாம். அதைப் பற்றி எல்லாம் உங்கள் மனைவி உங்களிடம் பகிர்வதோடு நிறுத்தாமல் அந்த ஆனந்தத்தை உங்களையும் அடையச் செய்வர். ஒரு அப்பாக நீங்கள் அந்த சுகங்களை அனுபவிக்கத் தயாராக இருங்கள்.

    உங்கள் மனைவிமார்கள் நிறைமாதத்தைத் தொட்டவுடன் அவர்களுக்குத் தானாகவே பிரசவ அச்சம் வந்துவிடும். ஒரு நல்ல கணவனாக நீங்கள் நிறைய நம்பிக்கைகளை வழங்க வேண்டும். நிச்சயம் உனக்குச் சுகப்பிரசவம் நடக்கும். எப்போதும் நான் உனக்குத் துணை இருப்பேன் என்பன போன்ற நேர்மறை வார்த்தைகளை உங்கள் மனைவியின் மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த விசயம் உங்கள் மனைவிக்கு மட்டும் உங்கள் குழந்தைக்கும் நன்மைப் பயக்கும். இது அப்பாக உங்கள் கடமையும் கூட!
    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய கோளாறு இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சவாலான விசயம்.
    நில்... கவனி... செல்... என்பது போக்குவரத்துக்கான விதிமுறை மட்டுமல்ல. பொதுவாக நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கும் அதுவே முக்கியமான விதிமுறையாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய கோளாறு இருப்பவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சவாலான விசயம்.

    இப்படிப்பட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள். ஆனால் இப்போது நவீன மருத்துவ வசதிகள் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டன. இதய கோளாறு, சிறுநீரக கோளாறு எதுவாக இருந்தாலும் சரி. ஏன் மாற்று சிறுநீரகம் வைத்தவர்களும் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை அடைந்து விட்டோம். முக்கியமாக கருத்தரித்த பெண்கள் இருக்கும் வீடுகளில் சில அடிப்படை சோதனைகளை அவர்களே செய்து கொள்ள முடியும்.

    பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு சென்றால் மட்டும் போதாது. அதற்கு முன்பு அந்த ஆஸ்பத்திரிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டுஅருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பார்த்து கொள்ளலாம். அப்போதுதான் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போக முடியும். துணிமணிகளை எடுத்து செல்ல முடியும் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கும்.

    அது முக்கியமல்ல. சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு உள்ளதா? அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருக்கிறார்களா? மயக்கவியல் மருத்துவர்கள் இருக்கிறார்களா? பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தால் அதை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு இங்குபேட்டர் வசதிகள் உள்ளனவா? ரத்தம் செலுத்தும் வசதிகள், ரத்த சேமிப்பு வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் அறிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

    பிரசவம் நடைபெற்றதும் குழந்தைக்கு சிக்கல் இருந்தால் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் வசதி இல்லாவிட்டால் நகரத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு போங்கள் என்று விரைவுபடுத்துவார்கள். இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் குழந்தையை ஆஸ்பத்திரிக்குள் கொண்டு செல்வதற்குள் சிக்கல்கள் பெரிதாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் எல்லா வசதிகளும் நிறைந்த ஆஸ்பத்திரிகளாக பார்த்து பிரசவத்திற்கு அனுமதிக்க வேண்டும்.
    பெண்களின் அத்தியாவசியத் தேவையில் நாப்கின் முக்கியமான ஒன்று. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது.
    பெண்ணுக்கும், மண்ணுக்கும் நல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவர் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கை முறையில், மூலிகை நாப்கின் தயாரிக்கிறார். நாப்கின்களை சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

    உங்களைப் பற்றி?

    நான் பிறந்தது வேலூர் மாவட்டம். அப்பா, அம்மா, தம்பி என நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பம் எங்களுடையது. பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ. முடித்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறேன்.

    மூலிகை நாப்கின் செய்வதற்கான ஆர்வம் எப்படி வந்தது?

    பள்ளிப்படிப்பின் போதே தையல் பயிற்சியில் ஆர்வம் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது பெண்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் ‘நாப்கின்’ தயாரிக்கும் எண்ணம் வந்தது. இயற்கை மீதான ஆர்வத்தால் இயற்கை மூலிகைப் பொருட்களைக் கொண்டு நாப்கின் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

    அதற்காக எத்தகைய பயிற்சிகள் பெற்றீர்கள்?

    பெரிதாகப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. தையல் தெரியும் என்பதால் மூலப்பொருட்களை பற்றிய தேடலில் தான் அதிகம் ஈடுபட்டேன். நாப்கின் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருள் பருத்திப்பஞ்சு. இதில் துளசி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூலிகைகளைப் பொடியாக்கி உபயோகிக்கிறேன். இந்தப் பொடியை எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தாமல் பருத்தியால் ஆன ‘நானோ கிளாத்’ என்ற துணியை வைத்து தையல் இயந்திரத்தில் தைத்துப் பார்த்தேன்.

    இதைப் பயன்படுத்திப் பார்க்கும்போது அதில் இருந்த நன்மைகளை உணர்ந்தேன். மூலிகைப் பொடியால் கிருமித்தொற்று, துர்நாற்றம் இல்லாததை என்னால் உணர முடிந்தது. மிகவும் லேசாக இருந்தது. இதை மற்ற பெண்களுக்கும் கொண்டு செல்ல நினைத்தேன்.

    உங்கள் தொழிலுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததா?

    எனது குடும்பத்தினர் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள்  எனது குழந்தையைப் பார்த்துக் கொள்வதால்தான், என்னால் தொழிலில் முழுமையாக ஈடுபட முடிகிறது. மூலப் பொருட்கள் வாங்குவதற்கும், வாடிக்கையாளர்களிடம் என்னுடைய பொருளைக் கொண்டு சேர்ப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் தயாரிக்கும் மூலிகை நாப்கின்கள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதற்கு நண்பர்கள் உதவினார்கள். அதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டோம்.

    உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?

    பிளாஸ்டிக் மற்றும் எந்தவிதமான ரசாயனமும் இல்லாமல் நான் தயாரிக்கும் நாப்கினை எல்லா பெண்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். பெண்களின் அத்தியாவசியத் தேவையில் நாப்கின் முக்கியமான ஒன்று. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது. ஆனால் இந்த மூலிகை நாப்கின் பெண்ணையும், மண்ணையும் காப்பாற்றும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயபர்களையும் இந்த முறையில் தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த திட்டம்.
    பசியால், தன் மகள் வாடாமல் இருக்கவும், அடுத்த பரிமாணத்திற்கு அடியெடுத்து புதிய வாழ்க்கைக்குள் புகும் பெண்ணுக்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கூடை கூடையாக இனிப்புகள் வழங்கப்படும்.
    இந்தியாவில் திருமணச் சடங்குகள், பல நூற்றாண்டு கடந்தாலும் இன்றும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பீகாரில் பின்பற்றப்படும் இனிப்புக்கூடை கலாசாரம். திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணமகளுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் சத்தான இனிப்புகள்தான் இதன் சிறப்பு.

    இந்தப் பழக்கம் ராமாயண காலத்தில் இருந்து வந்ததே. ராமரைத் திருமணம் செய்து சீதை புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது பல வித இனிப்புகள் அடங்கிய கூடையுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான்  இன்றும் இதைப் பின்பற்றி வருகின்றனர்.

    திருமணமாகும் புதுப்பெண், புகுந்த வீடு செல்லும் போது புதிய உறவுகளுடன் ஒன்றிப்போக சில நாட்கள் தேவைப்படும். பசி எடுக்கும் போது, அந்த வீட்டில் உணவைக் கேட்டு உண்பதில் தயக்கம் இருக்கும். பசியால், தன் மகள் வாடாமல் இருக்கவும், அடுத்த பரிமாணத்திற்கு அடியெடுத்து புதிய வாழ்க்கைக்குள் புகும் பெண்ணுக்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கூடை கூடையாக இனிப்புகள் வழங்கப்படும்.

    மேலும், இந்த இனிப்புக் கூடைகள், மணமகளின் அறையில் வைக்கப்படும். புகுந்த வீட்டில் உள்ள உறவுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது, அவர்களுக்குள் பிணைப்பு உருவாகும் என்பது ஒரு நம்பிக்கை.

    இந்த இனிப்புகளை, அந்தக் காலத்தில் பெண்ணின் வீட்டில் உள்ள பாட்டி, அத்தைகள், தாய் உள்ளிட்ட பெண்கள் தயாரித்தனர். வீட்டிலேயே அரிசியை உரலில் இட்டு இடித்து மாவாக்கி, இதனுடன் வெல்லம், சர்க்கரை, உலர் பழங்கள், நெய், பாலாடைக் கட்டி  முதலியவற்றைக் கொண்டே இந்த இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

    இதில் முக்கியமானது காஜா, கசக், நியூரா மற்றும் புக்கினி போன்ற இனிப்புகள். இவை அனைத்தும் பெண்களுக்குச் சத்து வழங்கும் என்பதுடன், ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. பீகாரில் தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு குறிப்பிட்ட இனிப்புகள் என நிர்ணயித்துள்ளனர்.   

    இனிப்புக்கூடையில், உள்ள முக்கியமான இனிப்பு ‘காஜா’. இது, அரிசி மாவு, எண்ணெய், நெய், சர்க்கரைப் பாகு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. செவ்வக வடிவில் இருக்கும் இந்த இனிப்பு 12 முதல் 15 அடுக்குகளைக் கொண்டது. ஆரம்பத்தில், பெரிய அளவில் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு இன்று சிறிய அளவாக மாறிவிட்டது. எண்ணெய்யைத் தவிர்த்து இதே பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், மற்றொரு இனிப்புக்கு ‘பியாவ்’ என்று பெயர். இது சர்க்கரைப் பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுவதால், 3 மாதங்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    இனிப்பு வகைகளில் முக்கியமானது மஞ்சள், கறுப்பு மிளகு, சுக்குப் பொடி, பெருஞ்சீரகம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் லட்டு. இந்த இனிப்புகள் அனைத்தும் பெண்ணின் பசியைப் போக்கும் என்பதுடன் முதுகு, கர்ப்பப்பை, எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்பது நம்பிக்கை.

    ஆரம்ப காலத்தில், குறைந்தபட்சம் 12 முதல் 15 இனிப்புக் கூடைகள் வரை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
    பெண்கள் உடல் எடையை குறைக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறைந்த செலவில் உடல் எடையைக் குறைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போமா...
    பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்கது உடல் எடை அதிகரிப்பு. எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கங்களை மாற்றுவது, குறைந்த அளவிலான உணவுகளை சாப்பிடுவது என பல வழிகள் உள்ளன.

    இதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உணவு முறை. இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறைந்த செலவில் உடல் எடையைக் குறைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போமா...

    1) காய்கறிகள்:

    எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். வழக்கமாக காய்கறிகளை வாங்கும் இடங்களை விட, சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும். அதனால், நேரடியாக உள்ளூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினால் புதிய, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை குறைவான விலையில் வாங்கலாம்.

    2) திட்டமிட்டு பொருட்களை வாங்குதல்:

    பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது தேவையற்ற பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொருட்கள் வாங்கும் முன்பு தேவையான மற்றும் சத்தான உணவு பொருட்கள் பற்றிய பட்டியலை தயாரிக்க வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை, ஒரு முறை சரிபார்த்து விடுவது நல்லது. வாங்கும் பொருட்களை காலாவதி தேதி முடிவதற்குள் பயன்படுத்த வேண்டும்.

    3) ஊட்டச்சத்து நிறைந்த கலோரி குறைவான உணவுகள்:

    பழங்கள்

    ஆரஞ்சு, மாதுளை, கொய்யாப் பழம் மற்றும் ஆப்பிள் போன்ற கலோரி குறைவாக இருக்கும்  பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.

    கீரைகள்

    விலை மலிவான கீரைகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான சத்துக்கள் உள்ளன. அவற்றை தினசரி உணவில் சேர்க்கும்போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகரிக்கிறது. காய்கறிகளில் கேரட், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியது.

    4) இயற்கையாக கொழுப்பை கட்டுப்படுத்தும் மசாலாப் பொருட்கள்:

    உடல் எடையைக் குறைக்க உதவும் மசாலாப் பொருட்களான வெந்தயம், மஞ்சள், மிளகு, லவங்கப்பட்டை, இஞ்சி, குடைமிளகாய், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.

    5) சத்தான உணவுப் பழக்கம்:

    அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வேகவைத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    காலையில் காபிக்கு பதில் புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் குடிக்கலாம். லெமன் டீ, கிரீன் டீ, இஞ்சி டீ, சீரக தேநீர், செம்பருத்தி தேநீர் மற்றும் மிளகுக்கீரை தேநீர் ஆகியவற்றை தாராளமாகப் பருகலாம்.

    தயிரில் அதிகமான கலோரி இல்லாததால், காலை உணவுக்கு 3 கப் தயிர் சாப்பிட்டாலே உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
    கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு. ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.
    பெண்கள் கருத்தரித்தது முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் காலத்தை 3, 6, 9 என்று மூன்று நிலைகளாக பிரிக்கிறோம். இதில் 6-வது மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரை கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    இது சாதாரண வீக்கமாக இருந்தால் பிரசவத்திற்கு பிறகு போய்விடும். அதேநேரம் சிறுநீரகத்தில் இருந்து புரதம் கழிதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நிலையில் இந்த மாதிரி வீக்கம் ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். தலைவலி, வலிப்பு, நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை கூட பாதிக்க வைக்கும். இதை டாக்சிமீயா என்போம்.

    இந்த மாதிரி பிரச்சினைகள் மிக குறைந்த வயதான பெண்கள் கருவுற்றால் அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோல் காலம் தாழ்த்தி திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களுக்கும் வரும். முக்கியமாக தலைபிரசவத்தில் மட்டும்தான் இந்த பிரச்சினைகள் உருவாகும். தொடர்ந்து வரும் கர்ப்பங்களில் இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

    கர்ப்ப காலத்தில் நுண் கிருமி தாக்குதல் வரலாம். சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயலிழக்கலாம் என்று பயமுறுத்துகிறார்களே என்றெல்லாம் நினைக்க தோன்றலாம். நாம் இப்போதுதான் மகப்பேறு என்று பிரசவத்தை ஒரு அழகிய சொல்லாக சொல்கிறோம்.

    ஆனால் அந்த காலத்தில் பிரசவம் என்பதை ‘பிர’ ‘சவம்’ என்றுதான் வைத்தார்கள். ஏனென்றால் பிரசவம் என்பது மறு பிறவி என்பதை போலத்தான். பிரசவத்திற்கு உள்ளே செல்லும் பெண்மணி வலியாலும், பயத்தாலும் அழுதபடியேதான் செல்வார். திரும்பி வரும் போது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைதான் ஒரு காலத்தில் இருந்தது.

    கர்ப்பம் தரித்தால் மட்டும் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகிவிடும். கர்ப்ப காலத்தில் இந்த மாதிரி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு.

    • ஒன்று திருமணத்திற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கும். ஆனால் அதை கவனித்திருக்க மாட்டார்கள். கண்டுபிடித்தும் இருக்க மாட்டார்கள். திருமணத்திற்கு பிறகு கருவுற்றதும் பரிசோதனை செய்யும் போது உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கண்டு பிடித்து இருப்பார்கள்.

    • அந்த பெண்கள் சிறு குழந்தையாக இருந்த போதே சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் அதாவது அலர்சி போன்ற நோய்கள் இருந்திருக்கலாம். அது தெரியாமலும் இருந்திருக்கலாம். அல்லது அது குணமாகியும் போயிருக்கலாம். மீண்டும் அதன் விளைவாக இந்த பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு.

    • உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல் ஆகியவற்றுடன் இணைந்து சிறுநீரக பிரச்சினைகள் உருவாகலாம். கடைசி மூன்று மாதத்தில் வரும் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகி விடும்.

    எனவேதான் நவீன மருத்துவத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை உறுதி செய்ததும் மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்போது ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.

    கால் வீக்கம் வந்ததும் கால் வீக்கம்தானே இது கர்ப்பிணியாக இருக்கும் போது வருவதுதான், ஒன்றும் செய்யாது என்று சாதாரணமாக நினைத்து விடவும் கூடாது. மருத்துவத்தில் இப்போது எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. வீட்டிலேயே ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான இயந்திரத்தை வாங்கி வைத்து கொள்ளலாம்.

    அதேபோல் சிறுநீர் பரிசோதனைக்கான எளிய முறை வந்திருக்கிறது. அதாவது சிறுநீர் பரிசோதனை ஸ்டிப் மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சிறுநீர் சோதனையை செய்து கொள்ளலாம்.

    பொதுவாக இந்த கால பெண்கள் கர்ப்பம் அடைந்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொஞ்சம் வயதானவர்கள் நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றெடுக்கவில்லையா? இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கும். எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. அப்படி அஜாக்கிரதையாக இருப்பது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.பிரசவத்தை ஆஸ்பத்திரிகளில் பார்ப்பதே தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    தாண்டிவிட்டோம்.

    கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் சிறுநீர் பாதையும், பிறப்பு உறுப்பும் அருகருகே இயற்கையாகவே அமைந்திருப்பதுதான். எனவேதான் எளிதில் தொற்று ஏற்படுகிறது. மேலும் கரு வளர வளர கர்ப்பப்பை விரிவடையும். அதன் காரணமாக சிறுநீர் செல்லும் பாதையை அது அழுத்தும். இதனால் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்போல் தோன்றும்.

    சிலருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் கூட தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே சரியான சோதனைகள் அவசியம். இல்லாவிட்டால் அந்த தொற்றுக்கள் மூலம் ஏற்படும் பாதிப்பு ரத்தத்தில் கலந்து செப்டிசீமியா வரும். இதன்மூலம் பல உறுப்புகள் சேதமடைந்து ஆபத்தில் கொண்டுபோய் விடும். குழந்தை கலைந்து போகும் சூழ்நிலை கூட ஏற்படும். முக்கியமாக ரகசியமாக செய்ய வேண்டும் என்பதற்காக சுகாதாரமற்ற சூழ்நிலையில் முறையற்ற முறையில், தகுதி பெறாத மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் கருக்கலைப்பு செய்வதால் ரத்த போக்கு ஏற்பட்டு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

    இப்போது கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை ஆகி விட்டது. அப்படி இருந்தும் தவறு செய்து குழந்தை உருவாகி விட்டதே? வெளி உலகிற்கு தெரியாமல் கலைத்து விட வேண்டும் என்று இந்த மாதிரி தகுதியற்ற இடங்களில் சென்று கருக்கலைப்பு செய்கிறார்கள். இதனால் சிறுநீரக செயலிழப்பு மட்டுமல்ல. அதிக ரத்த போக்கு காரணமாக மிக மோசமான சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரி சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆஸ்பத்திரிகளில் சென்று கருக்கலைப்பு செய்வது நல்லது. அதுதான் அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு.

    சிலர் வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பார்கள். பிரசவிக்கும் நேரத்தில் பனிக்குடம் உடைந்து செப்டிக் ஆகி சிக்கல் ஏற்பட்டதும் அவசர அவசரமாக தாயையும், சேயையும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். அந்த நேர விரையம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    25, 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்தது உண்டு. மருத்துவ வசதிகள் வளர்ந்துவிட்ட காரணத்திலும், விழிப்புணர்வு அடைந்து விட்ட நிலையிலும் கூட இன்றும் யூடியூப்பை பார்த்து வீட்டில் வைத்தே பிரசவம் பார்க்கும் அளவிற்கு சிலர் செல்கிறார்கள். அவ்வாறு பிரசவம் பார்க்கும் போது நச்சு கொடியை முறையாக அகற்ற முடியாமல் போகலாம். பொதுவாகவே பிரசவ நேரத்தில் ரத்த கசிவு ஏற்படுவது உண்டு.

    ஆனால் பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது ரத்த கசிவை தடுக்கும் வசதி இருக்காது. அவர்களால் தடுக்கவும் முடியாது. இதனால் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    கர்ப்பிணியாக இருக்கும் போது உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல், கால்கள் வீக்கம் ஆகியவை சேர்ந்து இருப்பதுதான் ஆபத்தானது. இதைதான் டாக்சிமீயா என்கிறோம். இதுவும் சிறுநீரகத்தில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை பொறுத்தே உருவாகிறது. இது ரத்தத்தில் கலந்து பின்னர் இதயம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளையும் பாதிப்படைய வைக்கும்.

    ரத்த அழுத்தத்தை பொறுத்தவரை 120/80 இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். பொதுவாக கருத்தரித்த மூன்று மாதங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். அதன் பிறகு ரத்த அழுத்தம் கூடும்.

    எனவேதான், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குச் சிறுநீரக வியாதிகளும் சிறுநீரக வியாதி இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
    உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
    கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

    இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:

    ஊட்டச்சத்துள்ள உணவு:

    கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை ஆகியவற்றை  அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.

    உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

    மருத்துவ ஆலோசனை:

    கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.

    உடற்பயிற்சி கட்டாயம்:

    கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5  நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.
    மாதவிடாய் காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு மட்டுமின்றி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் உடலுக்கும், மனதுக்கும் முழு ஓய்வு தேவைப்படும்.

    உடற்பயிற்சி மீது நாட்டம் கொண்டவர்கள் கூட உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புவார்கள். அப்படி அறவே உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டியதில்லை. கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    தவிர்க்க வேண்டிய பயிற்சிகள்:

    தலைகீழ் யோகா: மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத சில பயிற்சிகளும் இருக்கின்றன. இந்த சமயத்தில் யோகா சிறந்த பயிற்சியாக கருதப்பட்டாலும் தலைகீழ் யோகா போன்ற நுட்பமான யோகா வகைகளை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்வது ரத்த நாளங்களின் செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாஸ்குலர் அமைப்பும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக கருப்பையிலிருந்து ரத்தத்தை எடுத்து செல்லும் செயல்பாடுகளில் சிக்கல் நேரும்.

    கடுமையான உடற்பயிற்சி: அதிக எடை கொண்ட உபகரணங்களை தூக்குவது முதல் விறுவிறுப்பான நடைப்பயிற்சி வரையிலான கடினமான பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்யும்போது உடல் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். ஏற்கனவே உடலில் ஒருவித சோர்வு காணப்படும் நிலையில் மிதமான உடற் பயிற்சிகளை செய்வதுதான் நல்லது.
    பலரும் அறியாத வண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சில உடல் உறுப்புகள் இரு பாலருக்கும் வேறுபட்டு இருக்கின்றன. அத்தகைய தனித்துவமான உடல் பண்புகள் குறித்து பார்ப்போம்.
    ஆண்களுடன் பெண்களை ஒப்பிடும்போது மார்பகம், பிறப்புறுப்பு, கர்ப்பப்பை, கூந்தல் போன்ற ஒருசில உடல் பாகங்கள் மாறுபட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவை தவிர பலரும் அறியாத வண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சில உடல் உறுப்புகள் இரு பாலருக்கும் வேறுபட்டு இருக்கின்றன. அத்தகைய தனித்துவமான உடல் பண்புகள் குறித்து பார்ப்போம்.

    * நோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைபவர்களை ஒப்பிடும்போது பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் இறக்கிறார்கள். மார்பக புற்றுநோய், இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள், கட்டிகள் போன்றவைதான் பெண்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இவை தவிர மற்ற நோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்கள்தான் அதிகமாக இறக்கிறார்கள்.

    * வளர்சிதை மாற்ற விகிதத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

    * எலும்புகளின் கட்டமைப்பும் பாலினத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக பெண்களின் தலை ஆண்களை ஒப்பிடும்போது குறுகியதாக இருக்கும். ஆனால் முகம் அகலமாக இருக்கும். அதுபோல் பெண்களின் கால்கள் குறுகியதாகவும், தண்டு வடம் நீண்டும் காணப்படும். பெண்களின் பற்களை விட ஆண்களின் பற்கள் நீண்ட காலம் நீடித்திருக்கும்.

    * ஆண்களை விட பெண்களின் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பெரியதாக இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறியதாக இருக்கும். அதாவது நுரையீரலின் கொள்ளளவு ஆண்களை விட 30 சதவீதம் குறைவாகத்தான் அமைந்திருக்கும்.

    * பெண்களின் ரத்தத்தில் நீர் அதிகமாக காணப்படும். ஆனால் ரத்த சிவப்பணுக்கள் 20 சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். ரத்த சிவப்பணுக்கள்தான் உடலுக்குள் ஆக்சிஜனை சப்ளை செய்கிறது. அது பெண்களுக்கு குறைவாக இருப்பதால் எளிதில் சோர்வடைந்துவிடுகிறார்கள். ஆண்களை காட்டிலும் சட்டென்று மயக்கம் அடைந்துவிடுகிறார்கள். பெண்களை விட ஆண்கள் 50 சதவீதம் வலிமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

    * ஆண்களை விட பெண்களுக்கு அதிக வெப்ப நிலையை தாங்கும் சக்தி உண்டு. அவர்களால் கடும் வெயிலிலும் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு வளர்சிதை மாற்றம்தான் காரணம்.

    * ஆண்களை விட பெண்கள் மூன்று முக்கியமான உடலியல் செயல்பாடுகளை கொண்டிருக்கிறார்கள். அவை: மாதவிடாய், கர்ப்பம், பாலூட்டுதல். பெண் ஹார்மோன் வடிவங்கள் மிகவும் சிக்கலானவை மற்றும் மாறுபட்டவை. சுரப்பிகளின் செயல்பாடுகளிலும் வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, பெண்களுக்கு தைராய்டு சுரப்பி பெரியதாக இருக்கும். சுறுசுறுப்பாகவும் செயல்படும். மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது. மேலும் மென்மையான சருமம், முடிகள் இல்லாத உடல், மெல்லிய அடுக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

    * பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆண்களை ஒப்பிடும்போது சிரிப்பு, அழுகை என அத்தனை உணர்ச்சிகளையும் சட்டென்று வெளிப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். அதற்கும் ஹார்மோன் செயல்பாடுகள்தான் காரணம்.
    குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.

    அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது. அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

    * மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    * 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது, மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.

    * பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.

    * ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .​

    சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர். அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

    அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின் காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.

    மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.
    40 வயதுக்கு பிறகு பெண்களின் உடல் எடை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும். எளிமையான 40 பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதிலும் உடல் எடையை சீராக பராமரிக்கலாம்.
    40 வயதுக்கு பிறகு பெண்களின் உடல் எடை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும். ஹார்மோன் செயல்பாடுகள், உணவுப் பழக்கங்கள், தூக்கம், உடல் இயக்க செயல்பாடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே அதற்கு காரணமாக அமையும்.

    குறிப்பாக வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் எடை குறைப்பை கடினமானதாகவும், சவாலானதாகவும் ஆக்கிவிடும். எளிமையான 40 பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதிலும் உடல் எடையை சீராக பராமரிக்கலாம்.

    1. சாப்பிடும் உணவில் காய்கறிகள் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கக்கூடிய அத்தியா வசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்கறிகளில் உள்ளன.

    2. பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற குறைந்த கலோரி கொண்ட பழங்களை உட்கொள்ளலாம். சிற்றுண்டி யிலும் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் 4-5 பழங்கள் சாப்பிட வேண்டும். பழ ஜூஸும் பருகலாம்.

    3. காலை உணவை தவிர்க்காதீர்கள். அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும். ஓட்ஸுடன் நட்ஸ்கள் சேர்த்து உட்கொள்ளலாம்.

    4. இரவில் குறைவாக சாப்பிடுங்கள். அது செரிமான செயல்முறையை எளிதாக்க உதவும்.

    5. எப்போதும் ஆரோக்கியமான உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்திருங்கள். பழங்கள், பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வெண்ணெய், தயிர் போன்றவை தவறாமல் இடம்பெற வேண்டும்.

    6. துரித உணவுகளை தவிருங்கள். சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள். அது விரைவாக எடை இழக்க உதவும்.

    7. சமையலுக்கு எண்ணெய் குறைவாக பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

    8. நின்று கொண்டு உணவு உண்ணக்கூடாது. ஆசுவாசமாக அமர்ந்து உண்ண வேண்டும். உணவை பல முறை மென்று சாப்பிட வேண்டும்.

    9. சாப்பிடும் தட்டில் உணவு முழுவதுமாக நிரம்பியிருக்கக்கூடாது. பசிக்கும் அளவை விட குறைவாகவே சாப்பிட வேண்டும்.

    10. சோடா போன்ற பானங்களை தவிருங்கள். அவை எடையை குறைக்க உதவாது. அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அது எடையை நிர்வகிப்பதற்கு உதவாது. அதற்கு பதிலாக பழ சாறுகளை பருகலாம்.

    11. மது பழக்கத்தை தவிருங்கள். அது எடை இழப்பு செயல்முறையை கடினமாக்கிவிடும்.

    12. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சாப்பிடும் உணவில் உப்பை குறைத்துவிடுங்கள். அது செரிமானத்தை மேம்படுத்த உதவும். பகலில் சாப்பிடும் உணவிலும் உப்பு குறைவாக இருக்க வேண்டும்.

    13. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைப் பொருட்களை குறையுங்கள். அதற்கு பதிலாக இயற்கை சர்க்கரைக்கு மாறுங்கள். சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் உட்கொள்ளலாம். அது இனிப்புக்கு சிறந்த மாற்றாகும்.

    14. புரதங்கள் உடலுக்கு அவசியமானவை. பருப்பு, பால் பொருட்கள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    15. தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடையை குறைப்பதற்கு இது முக்கியமானது. அதிக நேரம் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் செய்யும்.

    16. கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேண விரும்பினால் உணவில் பன்னீர், பாலாடைக்கட்டி, சோயாபீன்ஸ் போன்ற உணவுகளை சேருங்கள். இவை தசை வலிமையை அதிகரிக்க உதவும்.

    17. வெயிட் லிப்டிங், புஷ் அப் உள்ளிட்ட உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவை உடல் எடையை வேகமாக குறைப்பதற்கும் உதவும்.

    18. மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அது எடை இழப்பு செயல்முறையை சிக்கலானதாக மாற்றிவிடும்.

    19. நேர அட்டவணையைத் தயாரித்து, சாப்பிடும் நேரம் மற்றும் உறங்கும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். இது செரிமானம் சீராக நடைபெறுவதற்கும், அன்றாட வழக்கங்கள் தொய்வில்லாமல் தொடர்வதற்கும் உதவும்.

    20. நிம்மதியாக தூங்குங்கள். தூக்கமும் எடை இழப்புக்கு வித்திடும். 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடலுக்கு போதுமான ஓய்வை அளிக்கும்.

    21. குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். உடலை கண்காணிப்பதற்கு இத்தகைய வழக்கமான பரிசோதனைகள் உதவும்.

    22. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான கொழுப்புகள் நிரம்பி இருப்பதால் தினமும் ஒரு ஸ்பூன் நெய் உட்கொள்ளுங்கள்.

    23. காரமான உணவுகளை தவிருங்கள். உணவில் அதிக மசாலாப் பொருட்களை சேர்க்காதீர்கள். அவற்றை குறைப்பது எடை இழப்பு செயல்முறையை எளிதாக்கும். மூலிகைகளும் சேர்க்கலாம்.

    24. ரெடிமேட் உணவுப் பொருட்களை தவிருங்கள். அவை ஆரோக்கியமானது அல்ல. பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தீங்கு விளைவிக்கும்.

    25. சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள், மைதா போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை எடை அதிகரிப்பை ஊக்குவிக்கக்கூடியவை. ரொட்டி மற்றும் பாஸ்தாவையும் தவிர்க்கவும்.

    26. தினசரி சாப்பிடும் உணவில் கலோரிகளின் அளவை குறைக்கவும். இது படிப்படியாக உடல் எடையை குறைக்க உதவும்.

    27. ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இவை மெனோபாஸ் சமயத்தில் இயற்கையாக ஏற்படக்கூடிய தசை இழப்பைத் தடுக்கும். எடை இழப்பையும் ஊக்குவிக்கும்.

    28. கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளடங்கிய உணவு களை உண்ணுங்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்கும். எடை இழப்புக்கும் வித்திடும்.

    29. மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பிறகு கிரீன் டீ பருகலாம். அது செரிமானம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். தொப்பையை குறைக்கவும் உதவும்.

    30. மனதுக்கு பிடித்தமானவற்றை சாப்பிடாமல் உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடியவைகளை மட்டுமே சாப் பிடுங்கள்.

    31. உணவில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவு களை சேருங்கள். ஏனெனில் ஹார்மோன் சமநிலையின்மை எடை இழப்பு செயல்முறையை தடுக்கலாம்.

    32. உடல் எடையை குறைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியமும் பாதிப்படையக்கூடும்.

    33. உணவு சமைப்பதற்கு டைரி ஒன்றை உருவாக்குங்கள். அதில் வாரம் முழுவதும் சமைக்கும் உணவுகளை குறிப்பிடுங்கள். அடுத்த வாரமும் அதே முறையை பின் பற்றி சமையுங்கள். இது கலோரி அளவுகளை கண்காணிக்க உதவும்.

    34. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தியானம் மிகவும் முக்கியமானது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது தியானம் செய்யுங்கள்.

    35. நிறைய பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருப்பது ஆரம்பத்தில் தெரியாது. அதுதான் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணியாகும். அதனால் சீரான இடைவெளியில் தைராய்டு பரிசோதனை செய்யுங்கள்.

    36. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

    37. உடல் எடையை குறைப்பதற்கு ஒரே நேரத்தில் பல யுக்திகளை கையாளாதீர்கள். எடை இழப்பு யுக்தியை மெதுவாக பின் தொடருங்கள்.

    38. கார்டியோ பயிற்சிகள் மட்டுமே எடையைக் குறைக்காது. உணவு பழக்கத்தையும் நிர்வகிக்க வேண்டும்.

    39. ஒரே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யாதீர்கள். அவ்வப்போது பயிற்சி முறையை மாறுங்கள். இது உடற் பயிற்சி மீது ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வழிவகுக்கும். சலிப்பு ஏற்படாது.

    40. இரவில் குறைவாக சாப்பிடலாம். ஆனால் காலை உணவை தவிர்க்கவோ, குறைத்துக்கொள்ளவோ கூடாது. காலையில் சற்று அதிகமாக சாப்பிடலாம்.
    மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.
    பெண்களுக்கு 40 வயது தொடங்கும் போதே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலமும் தொடங்கி விடுகிறது. மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.

    மெனோபாஸ் காலம் எப்போது தொடங்கும்-

    பெண்களுக்கு 40 வயதில் இருந்து 55 வயதிற்குள் மெனோபாஸ் காலம் தொடங்குகிறது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் உடற்சோர்வும், மனச்சோர்வும்மெனோபாஸ் காலத்தில் தொடக்கத்தில் இருக்கும். இதை கடந்து வருவதும் அதற்கு தயாராக இருப்பதும் எளிதானதுததான். பயம், கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மருத்தவர்கள்.

    மெனோபாஸ் காலத்தில் என்ன நடக்கும்?

    பெண்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கருமுட்டை உருவாதல், மாதவிடாய் போன்ற செயல்பாடுகளில் முக்கயி பங்காற்றுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு வெகுவாக குறைவதால் மேற்கண்ட செயல்கள் நிற்கத்தொடங்குகின்றன. இதனையே மெனோபாஸ் காலம் என்கிறோம்.

    இதன் மூலம் பெண்களுக்கு முடி உதிர்வு, உடல் எடை அதிகரித்தல், ரத்த சோகை, மூட்டுவலி, தூக்கமின்மை, இதய நோய்கள், எலும்புகள் அடர்த்தி குறைவது, சருமப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    உணவுகளில் கவனம்

    கால்சியம் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் தேய்வதையும் உடைவதையும் தடுக்கலாம்.

    கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள், எண்ணெணில் பொரித்த பதார்த்தங்களை தவிர்த்து நார்ச்சத்து புரதங்கள் நிறைந்த உணவுகள், பயிறு வகைகள் போன்றவற்றை உண்பது நன்மை தரும்.

    கீரை வகைகள், பழங்கள் உடல் சூட்டை தணிக்கும். இளநீர், நுங்கு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது முக்கியமானது.

    மனநலனும் முக்கியம்

    மெனோபாஸ் காலத்தில் எரிச்சல்இ கோபம், கவலை போன்ற எதிர்மறை உணர்புகள் வெளிப்படுவது இயல்பானது. இவற்றில் இருந்து விடுபடுவதற்கு எளிய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.

    பிடித்தமான செயல்களில் கவனம் செலுத்துவது, மனநல ஆலோசனைகள் பெறுவதும் முக்கியமானது. வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதும் அவசியமானது.

    ×