search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம்
    X

    வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம்

    கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை.
    கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை. வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    ‘‘வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை.

    இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.

    பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் உயிரணுக்களையும் கொண்டு சோதனைக்குழாய் மூலம் கருவை உருவாக்கி அதை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி விடுவதுதான் இத்தொழில்நுட்பம். பெண்ணின் கருமுட்டைகளையும், ஆணின் விந்தணுக்களையும் தானமாகப் பெற்றும் கருவை உருவாக்கலாம். இது போன்று கருமுட்டை, விந்தணுக்களை தானமாகப் பெற்று உருவாக்கப்படும் கருவுக்கும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் மரபியல் ரீதியில் எந்தத் தொடர்பும் இருக்காது.



    அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும். வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது.

    இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது. தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர்.

    கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது.
    Next Story
    ×