search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு
    X

    இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு

    சிலருக்கு இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.
    அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.

    ஹார்மோன்கள் அடங்கிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிப்பது இதன் முதன்மைக் காரணம். மாத்திரை, பேட்ச், ஊசி என எந்த வடிவிலான குடும்பக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் அதை உபயோகிக்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் இப்படி இடையிடையே மாதவிலக்கு வருவது சகஜம். அவற்றிலுள்ள அதிகப்படியான ஹார்மோன்கள், கருப்பையின் உறைகளில் ஏற்படுத்துகிற மாற்றங்களே காரணம் என்பதை மருத்துவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    க்ளமிடியா என்றொரு பால்வினை நோய் இருக்கிறது. அது பாதித்திருப்பதன் அறிகுறியாகவும் இந்த ரத்தப் போக்கு வரலாம். கர்ப்பப்பையின் உள் உறைகளில் தொற்று ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகலாம். சில பெண்களுக்கு அரிதாக பாதிக்கிற ஒரு பிரச்சனை ‘வான் வில்லி பிராண்ட்’. ரத்தம் உறைவது தொடர்பான இந்தப் பிரச்சனையின் காரணமாகவும் இடையிடையே ரத்தப் போக்கு வரக்கூடும். இதற்கு முறையான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ஹைப்போ தைராய்டு, கல்லீரல் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருந்தாலும் இப்படி இருக்கலாம். கர்ப்பப் பையின் உள் உறைகளில் ஏற்படுகிற ஃபைப்ராய்டு கட்டிகளும் இப்படி இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்கை ஏற்படுத்தலாம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனப்படுகிற சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்குப் பொதுவாகவே மாதவிலக்கு சுழற்சி முறையற்றுதான் இருக்கும். அவர்களில் சிலருக்கு இப்படி இடைப்பட்ட ரத்தப்போக்கு இருக்கலாம்.

    கர்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படுகிற மெனோபாஸுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் அளவுகள் கன்னாபின்னாவென மாறும். அதன் அறிகுறியாகவும் இப்படி நிகழலாம்.

    எந்தக் காரணத்தால் இடைப்பட்ட ரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும். பால்வினை நோய், ரத்தம் உறைதல் பிரச்சனை, சிறுநீரக பாதிப்புகள், ஃபைப்ராய்டு, புற்றுநோய் போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். மெனோபாஸின் அறிகுறி என்றால் பயப்படத் தேவையில்லை.

    இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்குடன், அடிவயிற்றில் அதிகமான வலி, காய்ச்சல், மெனோபாஸுக்குப் பிறகு தொடரும் ரத்தப் போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
    Next Story
    ×