search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தமிழரின் பாரம்பரியம்: வேட்டியை மடிச்சு கட்டு... சேலையை வரிந்து கட்டு...
    X

    தமிழரின் பாரம்பரியம்: வேட்டியை மடிச்சு கட்டு... சேலையை வரிந்து கட்டு...

    இன்று பாவாடை-தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை.
    பாரம்பரியம் காப்போம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளி எழுந்து மெரினாவில் திரண்ட கூட்டமும், எழுப்பிய கோஷமும் வரலாற்றுப் பதிவாகிப்போனது.
    சபாஷ். தமிழன் தன் அடையாளத்தை காக்க எழுந்துவிட்டான் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே பாரம்பரிய அடையாளங்கள் காக்கப்படுகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா? என்பதை பாரம்பரியம் பற்றி பெருமை பேசும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.

    இன்னும் பத்துநாளில் தைமகள் பிறக்கப்போகிறாள். தை திருநாள் பாரம்பரிய கலாச்சார திருவிழா.

    இந்த பாரம்பரிய விழாவுக்கு தனி மகத்துவம் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக பாரம்பரியத்தை காத்து கொண்டாடுவதில் அர்த்தமும் உண்டு. நிலத்தில் பாடுபட வைத்து பலனையும் கொடுப்பவள் நிலமகள். அந்த இனிய மகளுக்கு - இயற்கைக்கு நன்றி செலுத்தும் இனிய விழாவே தை திருநாள். இந்த இனிய நாளில் உண்பது, உடுத்துவது, கொண்டாடுவது எல்லாமும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தோடு தொடர்புடையது. அதில் ஒன்று தான் ஜல்லிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பைக் ரேஸ், கார் ரேஸ் என்று எத்தனை போட்டிகள் வந்தாலும் ஜல்லிக்கட்டை மட்டும் மனதார நேசிப்பது ஏன்? அது தமிழர் அடையாளம். அதேபோல் தான் பொங்கல் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நேசிப்பதும், காப்பதும் தான் நமது அடையாளத்தை அழியாமல் பாதுகாக்கும். நாகரீக மோகத்தில் சிக்கி நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, பாவாடை-தாவணி, புடவை இவைகளை மறந்து போனோம் என்பதை மறைப்பதற்கில்லை.

    இன்று பாவாடை - தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை. இந்த அடையாளம் தானே தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இதன் மீது தானே மற்றவை எல்லாம் கட்டமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த அடிப்படை அடையாளத்தை தொலைத்துவிட்டு மற்ற எதைப்பற்றியும் பேசிப் பயனில்லை.



    வேட்டி... ....


    அவ்வளவு சாதாரணமான உடையா?

    கர்ணனுக்கு உடன் பிறந்த கவச குண்டலம் போல் தமிழனின் உடலை முதல் முதலில் ஒட்டியிருந்தது இந்த வேட்டி அல்லவா? இலைகளையும், தளைகளையும் சுற்றி உடலை மறைத்து வாழ்ந்த ஆதிகால தமிழன் நாகரீகத்தின் முதல் அடையாளமாக உருவாக்கிய உடை தான் வேட்டி. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து, பஞ்சை நூலாக்கி நெசவாளர்கள் எண்ணத்துக்கு வடிவமாக்கி உருவாக்கியது தான் வேட்டி, சேலை வகையறாக்கள்... !

    இது வெறும் உடை அல்ல. உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் அல்லவா அடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் வேட்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது! கவித்துவம் இல்லாத இதயங்கள் கூட என்ன விலை அழகே? என்று வர்ணித்து ரசிக்கிறதே! இந்தமாதிரி வேட்டி-சட்டை அணிந்து வருபவருக்கு தனி கம்பீரம் வந்துவிடுகிறது.

    இப்படிப்பட்ட பாரம்பரிய அடையாளத்தோடு நின்று, பொங்கல் வைத்து கொண்டாடினால் எப்படி இருக்கும்...? துள்ளாத மனமும துள்ளும்! பாடாத மனமும் பாடும்! ஆடாத மனமும் ஆடும், பாடும் கொண்டாடுமே...?!

    ஆனால் இன்று தமிழர்களின் உடலோடு ஒட்டியிருந்த வேட்டி உருவிப் போனதால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்று கவர்ச்சி வசனம் பேச வேண்டி இருக்கிறது.



    வேட்டி கட்டினால் கவுரவ குறைச்சல் என்று கருதும் காலம்! பக்கத்து மாநிலமான கேரளாவில் வேட்டி கட்டுவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆகால் வேட்டி கட்டக்கூட தெரியாத நிலையில் தமிழ் இளைஞர்கள் இருப்பது வேதனையானது. அதனால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்றெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

    எது எப்படியாயினும் நாம் பாரம்பரிய திருவிழா காலங்களிலாவது நமது பாரம்பரிய உடையோடு இருந்தால் போதும். பாரம்பரியத்தை காக்கிறோம் என்று பெருமையோடு மார்தட்டிக் கொள்ள முடியும். அதைவிட்டு விட்டு பத்துநாள் துவைக்காத ஜீன்ஸ், அரை மற்றும் முக்கால் டவுசருடன் நின்று கொண்டு பாரம்பரியம் காப்போம் என்று முழங்குவது வேடிக்கையாகத்தான் பார்க்கப்படும்.

    வருகிற பொங்கல் திருநாளை அதற்கான சபதமேற்பு நாளாக கடைப்பிடிப்போம். பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைப்போம். எந்த பக்கம் திரும்பினாலும் சேலை கட்டிய எம் இன பெண்கள்-பாவாடை - தாவணியில் என் சகோதரிகள் - வேட்டி, சட்டையில் இளசுகள் முதல், பெரியவர்கள் வரை தெரிய வேண்டும். மாற்று உடையில் ஒருவரை பார்த்தால் அவர் வேற்று மாநிலத்தவராக இருக்க வேண்டும்.

    வருகிற தமிழர் திருநாளையாவது தமிழரின் அடையாளத்தோடு கொண்டாடுவோம். அதுவே தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் வளர்க்கும். வாழ வைக்கும்.

    Next Story
    ×