search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிருஷ்ண ஜெயந்தி: 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி?
    X

    கிருஷ்ண ஜெயந்தி: 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி?

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    1. அவல் பாயசம்

    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    காய்ச்சிய பால் - ஒரு கப்,
    வெல்லத்தூள் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:

    பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.

    பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

    2. இனிப்பு அவல் பிசறல்



    தேவையான பொருட்கள் :


    கெட்டி அவல் - 100 கிராம்,
    ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    சர்க்கரை - கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்.

    செய்முறை:


    அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.

    3. வெல்ல சீடை:



    தேவையான பொருட்கள் :


    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

    ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    4. உப்பு சீடை:



    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - சிட்டிகை.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    5. கோகனட் ரவா லட்டு



    தேவையான பொருட்கள் :

    ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை கப்,
    உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:


    அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.

    பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.

     வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.  

    6. தட்டை



    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:


    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  

    7. வெல்ல திரட்டுப்பால்



    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
    வெல்லத்தூள் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).

    அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×