search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • சிக்கனை பலரும் விதவிதமாக சமைத்து ருசித்திருப்பார்கள்.
    • கிரீன் சிக்கன் கிரேவியை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

    சிக்கனை பலரும் விதவிதமாக சமைத்து ருசித்திருப்பார்கள். ஆனாலும் கூட 'கிரீன் சிக்கன் கிரேவி'யை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். வித்தியாசமான, அதே நேரம் மிகவும் சுவையான 'கிரீன் சிக்கன் கிரேவி'யை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் 1/2 கிலோ

    எண்ணெய் - 3 ஸ்பூன்

    பிரிஞ்சி இலை -2

    பட்டை -2

    ஏலக்காய் 2

    கிராம்பு 2

    வெங்காயம் -2

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய் 2

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    சீரகத்தூள் - அரை ஸ்பூன்

    கரம் மசாலா- அரை ஸ்பூன்

    மல்லித்தூள்- 2 ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

    புதினா - ஒரு கைப்பிடி

    முந்திரி - 7

    பச்சைமிளகாய்-  3-4

    தயிர்- ஒரு ஸ்பூன்

    மிளகுத்தூள்-1/2 ஸ்பூன்

    கசூரி மேத்தி- சிறிதளவு

    செய்முறை:

    அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் அளவுக்கு வதக்க வேண்டும்.

    தொடர்ந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், தயிர், ஊறவைத்த முந்திரிப்பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து கிளறி நன்கு வே கவைக்க வேண்டும். சிக்கன் வெந்ததும் கடைசியாக அதில் மிளகுத்தூள், கசூரி மெத்தி சேர்த்து கிளறி இறக்கினால், வித்தியாசமான நிறத்துடன், சுவையான கிரீன் சிக்கன் கிரேவி ரெடி. இந்த கிரீன் சிக்கன் கிரேவி, சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி தோசை என அனைத்துக்கும் ருசிகரமான துணையாக இருக்கும்.

    • ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க எலுமிச்சை, ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.
    • பொரிக்கும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க புளியை எண்ணெயில் போட்டால் போதும்.

    * ரவா கேசரி தயாரிக்கும்போது அதில் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, மாம்பழத் துண்டுகளை, இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி தயார்.

    * நறுக்கிய ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.

    * ஏலக்காயை பொடித்து போட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அப்படியே குடிக்கும் நீரில் போட்டால் போதும். மணமும், ருசியும் சேர்ந்த நீரை பருகலாம்.

    * பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பதற்கு முன்னால் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் அதில் உள்ள பால் கைகளில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். வெட்டுவதற்கும் சவுகரியமாக இருக்கும்.

    * பீன்ஸ் காய்ந்துவிட்டால் அதை வேகவைத்த பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் விரைவாக வேகாது.

    * வடை தயார் செய்யும்போது மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.

    * எந்த வகை குழம்பிலும் கடலை மாவை தனியாக கரைத்து, பின்னர் குழம்பில் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.

    * மசாலா, குருமாக்களில் காரம் கூடுதலாகிவிட்டால் சிறிது தயிரை கடைந்து சேர்க்கவும் அல்லது தேங்காய்ப்பாலை விடவும். தேங்காய்ப்பாலை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பசும்பாலை சேர்த்துக்கொள்ளலாம்.

    * பருப்பு உசிலியை பீன்சுக்கு பதிலாக வெண்டைக்காய், பாகற்காய் இவற்றிலும் செய்யலாம்.

    * அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக்கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்.

    * கீரையை கூட்டு செய்வதற்கு சிறிது சிறிதாக நறுக்காமல் ஒன்றிரண்டாக பிய்த்து அளவான தண்ணீரில் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் லேசாக அரைக்கவும். அரிந்தது போல மசிந்து விடும். சத்தும் கெடுவதில்லை.

    * வாணலியில் ஏதேனும் உணவுப்பதார்த்தங்களை வறுக்கும்போதோ அல்லது பொரிக்கும்போதோ எண்ணெய் பொங்குமானால், சிறிது புளியை எண்ணெய்யில் போட்டால் போதும், பொங்காது.

    * கொழுப்புச்சத்தை குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை பொரிக்காமல் பயன்படுத்தலாம்.

    • உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது.
    • அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு சர்பத் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும்.

    குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். மேலும், வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் சர்பத் எப்படி தாயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைபிடி

    சர்க்கரை- 200 கிராம்

    கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்

    பால்- அரை லிட்டர்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் சப்ஜா விதைகளை நீரில் பொட்டு உறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இளநீரினை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்து போகிற அளவுக்கு கலந்துவிட வேண்டும். பின்னர் இதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒருமணிநேரம் வைக்க வேண்டும். ஒருமணிநேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது ஜெல்லி மாதிரி இருக்கும். இதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இந்த பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இளநீர் சர்பத்தினை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

     இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த இளநீர் சர்பத் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • ஸ்வீட் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
    • பார்ட்டி நாட்களிலும் இதனை செய்து அசத்தலாம்.

    ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். பார்ட்டி நாட்களிலும் இதனை செய்து அசத்தலாம். மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பால் பவுடர்- ஒரு கப்

    மைதா- ஒன்றரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை

    உப்பு- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- ஒரு கப்

    பால்- 200 கிராம்

    நெய்- 2 ஸ்பூன்

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மாவினை ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் நெய் விட்டு கலந்து பால் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு அழுத்தமாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சப்பாத்தி மாதிரி திரட்டி அதனை சதுர சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

    அதாவது குலோப்ஜாமூன் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் செய்ய வேண்டும். பாகு பதம் வந்தவுடன். நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது ஊற்றி புரட்டி எடுத்தால் சுவையான மில்க் கேக் தயார்.

    • எல்லோரும் தினமும், இட்லி, தோசை, பொங்கல் தான் சாப்பிட்டு இருப்போம்.
    • கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை?

    பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் எல்லாரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு- 100 கிராம்

    பொட்டுக்கடலை- ஒரு கைபுடி

    முட்டை- 5

    வெங்காயம்- 2

    பச்சை மிளகாய்- 2

    பச்சை அரிசி- 200 கிராம்

    உப்பு- தேவையான அளவு

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கொர கொரப்ப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை அடை தோசை தயார். இதனை கார சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். வேண்டுமென்றால் கொத்தமல்லித் தழை அல்லது வெங்காயத்தாள் தூவியும் தோசை வார்க்கலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.

    • மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்சாக சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 இருக்கும். இதுபோன்று மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து பொடிமாஸ், ஆம்லெட், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து சாப்பிட்டு இருப்போம், இன்று முட்டையை வைத்து 65 வித்தியாசமாக செய்வது எப்படி என பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

    மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

    சோளமாவு- 1ஸ்பூன்

    கரம் மசாலா- 1ஸ்பூன்

    இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை- பாதியளவு

    அரிசிமாவு-1ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு சிறிதளவு

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை கலவையை அந்த பாத்திரத்தை மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஆவியில் வேகவைத்த முட்டையை எடுத்து சிறு சிறு பீசாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பிரட்டி எடுக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி. நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    • திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

    சிக்கன் சில்லி சாப்பிட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் சுவையான இந்த சைவ சில்லி பிரட் போன்றவற்றை சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் வைத்து சில்லி பிரட் காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சாண்ட்விச் பிரட் – 5

    எண்ணெய் – தேவையான அளவு

    பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் – ஒன்று

    குடைமிளகாய் – ஒன்று

    பச்சை மிளகாய் – இரண்டு

    உப்பு – தேவையான அளவு

    மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன்

    சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயத்தாள், வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

    கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன்

    தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு

    செய்முறை

    20 மிளகாய்களை மூழ்கும் அளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றியதும் மிளகாயை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விட வேண்டும். பிரெட்டை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

    கலவை வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். வினிகர் இல்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இவைகளை வதக்கி விட்டு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    ஒரு ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் சேர்க்க வேண்டும். கிரேவி பதத்திற்கு கெட்டியாக வந்ததும், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மசாலா பிரெட்டில் ஊரும் அளவிற்கு நன்கு கலந்து விட வேண்டும். இதில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான சில்லி பிரெட் தயார்.

    • கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
    • கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம்.

    அரிசியை காட்டிலும் கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. புரோட்டீன் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் இதில் உள்ளன. இடியாப்பம் என்றாலே நாம் பெரும்பாலும் அரிசிமாவில்தான் தயாரிப்போம். நாம் கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம். இது அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    தண்ணீர் - ஒரு கப்

    தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் லேசாக சூடானதும் கோதுமை மாவை சேர்த்து, லேசான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். (மாவு தீய்ந்து விடாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்) வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியைக் கொண்டு மாவை நன்றாக கிளறி விட வேண்டும்.

    சிறிது சூடு ஆறியதும் மாவை, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்த மாவை 5 முதல் 10 நிடங்கள் மூடி போட்டு அப்படியே ஊற வைக்க வேண்டும்.

    இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி வைத்து விட வேண்டும். இடியாப்பம் அல்லது இட்லி தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி இடியாப்பம் பிழியும் கட்டைக்குள் சேர்த்து இடியாப்ப தட்டில் பிழிந்துவிட வேண்டும்.

    இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்த பின், பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை அதற்குள் எடுத்து வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வறுத்த மாவை சுடு தண்ணீரில் பிசைந்துள்ளதால், இடியாப்பம் விரைவிலேயே வெந்து விடும்.

    இந்த இடியாப்பம் தேங்காய் பால் மற்றும் குருமாவுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

    • ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது.
    • தித்திக்கும் சுவையுடன் கேக்

    பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    குங்குமப்பூ- தேவையான அளவு

    கிரீம்- தேவையான அளவு

    பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

    பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- ஒரு மூடி

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

    டோண்டு மில்க்- 200 மில்லி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

    • கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
    • ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.

    * புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.

    * ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.

    * கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.

    * வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.

    * மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

    * கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.

    * கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.

    * கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.

    • வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
    • வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.

    பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 5

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    தண்ணீர் - 1/4 கப்

    முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    ×