search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
    • 50 சதவிகிதம் பேருக்கு இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினை உள்ளது.

    இரவில் பல முறை சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேர், இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிக திரவ உணவுகள், காபி, மது ஆகியவற்றை உட்கொண்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். மேலும், வயதானவர்களுக்கு இரவில் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் வெளியீடு குறைவதால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடலாம்.

     இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத காரணங்களில், கீழ்கண்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.

    1) புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (புரோஸ்டேட்ஹைபர்பிலேசியா),

    2) வயது முதிர்வின் காரணமாக சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்,

    3) நீர்பை அழற்சி, கற்கள் அல்லது தொற்று,

    4) சிறுநீர் பாதையில் தொற்று அல்லது கற்கள்,

    5 மன அழுத்தம் அல்லது மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,

    6) இதய செயலிழப்பு,

    7) கல்லீரல் செயலிழப்பு.

    நீங்கள் ரத்த கொதிப்பிற்கு காலை மற்றும் இரவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதன் பக்க விளைவாக கூட சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடலாம். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டையூரிட்டிக்ஸ் (தையாசைடு), கால்சியம் சானல் பிளாக்கர்ஸ் (அம்லோடிப்பின்), அஞ்ஜியோடென்சின் கன்வர்டிங் என்சைம் இன்ஹிப்ட்டாஸ் (எனலாப்பிரில்) ஆகிய மருந்துகளின் பக்கவிளைவுகளால் கூட சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடும்.

    இதற்கு தீர்வாக தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், திரவ உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் பக்க விளைவுகளால் இது ஏற்படுவதாக இருப்பின், மருத்துவரை அணுகி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மாற்றம் செய்யலாம். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து அல்ட்ரா சவுண்ட் மற்றும் யூரின் கல்ச்சர் போன்ற பரிசோதனைகளை செய்து, உரிய காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.

    • சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
    • குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும்.

    தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.

    ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 7 கலோரிகளே உள்ளன. இது மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் செரிமான தொந்தரவு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சீரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

    உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரித்து உடல் பருமன் பிரச்சினையை போக்கும் தன்மையையும், புற்றுநோயை தடுக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடியது. அதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும்.

    கர்ப்பிணி பெண்களும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று சீரக நீர் பருகலாம். அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். அதிக பால் சுரப்புக்கும் வழிவகுக்கும்.

    உடல் நலனுக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. அதன் குறைபாட்டை போக்க தொடர்ந்து சீரக தண்ணீர் பருகி வருவது நன்மை பயக்கும். மாதவிடாய் காலத்தில் சீரக தண்ணீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கவும் சீரக தண்ணீர் துணைபுரியும். உடல்நலக் குறைவின்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரக நோயாளிகளும் சீரக தண்ணீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் அதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க போராடும். சளியை குணப்படுத்தவும் சீரக தண்ணீர் உதவும்.

    சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் செய்யும். பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதனால் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும்.

    சரும பளபளப்புக்கும் சீரக தண்ணீர் வித்திடும். சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. அவை சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை.

    சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவி வரலாம். அது முகத்துக்கு பொலிவு சேர்க்கும். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும். முடி உதிர்தலையும் தடுக்கும்.

    • உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும்.
    • அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.

    எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.

    சூரிய ஒளி இல்லாத காரணத்தாலோ அல்லது தவறான உணவு முறையாலோ கூட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்கிடைக்காமல் போனாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் வைட்டமின் டியை எப்படி, எதன் மூலம் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை கொண்டு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.

    உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வழி வகுக்கும்.

     சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

    1. காளான் (மஷ்ரூம்கள்): சைவ உணவுகளில் அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.

    2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பது போல் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி மீன் வகைகள்.

    3. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

    4. ஆரஞ்சு ஜூஸ்: மேற்கத்திய நாடுகளில் வைட்டமின் டிக்கு ஆரஞ்சு ஜூசை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவுகள் வைட்டமின் டியை பெற முடியும்.

    5. பசும்பால், பாதாம் பால், சோயா பால்: பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் டியையும் ஓரளவு பெற முடியும்.

    6. ஓட்ஸ் மற்றும் செரல் வகைகள்: ஓட்ஸ் மற்றும் செரல் வகைகளில் நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. ஓட்மீலில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவு வைட்டமின் டி கிடைக்கும்.

    7. காட் லீவர் ஆயில்: சைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிட முடியாது. இவர்கள் காட் லீவர் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். இவை மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.

    இவை தவிர, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், சீஸ் வகைகளிலும் வைட்டமின் டி உள்ளது. மேலும், கீரைகள், வெண்டைக்காய், கேரட், புரோக்கோலி, தயிர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

    • சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.
    • விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும்.

    விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும் உணவு வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.

     உணவுகள்:

    நாட்டுக்கோழி முட்டை,இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்தி, சாளை மீன்கள், பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சை, திராட்சை பழம், பொரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளைப்பழம், சின்ன வெங்காயம், பூண்டு, கீரைகளில் பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, காய்கறிகளில் தக்காளி, புடலங்காய், அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, முருங்கைக் காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கிழங்குகளில், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை சிறிதளவு சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.

    இளநீர், மோர், முலாம் பழம், கிர்ணிப்பழம் இவைகளை எடுத்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். இந்த பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

     கீழ்க்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    1) அமுக்கரா சூரணம் ஒரு கிராம், பூனைக்காலி விதை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை பாலில் கலந்து குடிக்கலாம்.

    2) சாலாமிசிறி லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) பூரண சந்திரோதயச் செந்தூரம் 100 மி.கி. நாகப்பற்பம் 100 மி.கி. வெள்ளி பற்பம் 100 மி.கி. இவைகளை ஒரு கிராம் அமுக்கரா சூரணத்தில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும்.

    • வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
    • தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.

    கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.

    தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

    சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

     கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.

    கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.

    கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

     பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை  கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.

    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • `கார்-டி’ புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அதன் சிகிச்சை முறைகளும் மிகவும் வலி நிறைந்தவை. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் பெயர் கார்-டி (சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி டி-செல்) செல் சிகிச்சை. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

     லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும். இந்தியாவில் கார்-டி சிகிச்சைக்கு மத்திய மருந்து நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது.

    கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு குணமாகாத புற்று நோயாளிகளுக்கு கார்-டி (CAR-T) செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்து போராட, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கிறது.

    கார்-டி சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை தாக்குவதற்கு நோயாளியின் டி-செல்களை பயன்படுத்துவதாகும். டி-செல்கள் என்பது ஒரு வகை ரத்த வெள்ளை அணுக்களாகும். இவை உடலில் தொற்றுநோய் ஏற்படும்போது அதை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்காக டி-செல்கள் நோயாளியின் ரத்தத்தில் (ரத்த வெள்ளை அணுக்கள்) இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் மரபணு மாற்றம்

    செய்யப்படுகின்றன. இந்த மரபணு மாற்றப்பட்ட செல்கள் மீண்டும் நோயாளிக்குள் செலுத்தப்பட்டு, அவை புற்றுநோய் செல்களைத் தாக்கி கொல்லும்.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார்-டி சிகிச்சையின் பெயர் நெக்ஸ்கார்-19. இது இந்தியாவில் இன்மியூனோ ஆக்ட் என்ற நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சம். லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சையை வெளிநாட்டில் செய்தால் ரூ. 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சத்தில் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது அளிக்கப்படுகிறது. பி-செல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ரத்த புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளது.

    புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் பலருக்கு ரத்தத்தில் புற்று நோய் செல்கள் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சை பயனுள்ளாதாய் இருந்தாலும், கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.

    ஆனால் கார்-டி செல் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    2017-ம் ஆண்டில், அமெரிக்கா கார்-டி சிகிச்சையை முதன் முதலில் அங்கீகரித்தது. ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. முதலில் இந்தியா இந்த சிகிச்சை முறையை வெளிநாடுகளில் இருந்து தான் பெற வேண்டி இருந்தது.

    இங்குள்ள நோயாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும்போது மருத்துவமனை கட்டணம், மருத்துவர், உணவு மற்றும் பிற செலவுகளை ஒப்பிடும்போது விலை அதிகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் விளைவாக, விலை குறையும் என்பதால் பலராலும் இந்த சிகிச்சையை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கார்-டி செல் சிகிச்சை மூலம் முதல் நோயாளியாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது பெயர் வி.கே. குப்தா. டெல்லியை சேர்ந்த இவர் இரைப்பை குடல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்-டி செல் சிகிச்சையை பயன்படுத்தி மருத்துவர் ஒருவரே புற்றுநோயில் இருந்து குணமாகி இருப்பதால் இந்த சிகிச்சை புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. எந்தவொரு சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் அடையாத ரத்த புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாகவே இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

    • நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது.
    • ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது.

    நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சினைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த நோயை கண்டுபிடிக்கிறார்கள்.

     நீரிழிவு நோயினால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, அதிலும் குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

     நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை `மைக்ரோ அல்புமின்யூரியா' என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது `டயாபடிக் நியூரோபதி'.

     இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவ்ஜிவ் என்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

     நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள் ஆகும்.

    • தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம்.
    • வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும்.

    தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

    தலைவலி ஏன் வருகிறது?

    நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

     கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?

    மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவை சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

     ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?

    தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

    தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?

    இரவில் அதிகம் கண் விழிப்போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், `வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், `டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும். மயக்கம் வரும். இத்தகைய பாதிப்பு உடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.

    விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?

    தாழ்வான கட்டிடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, `ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

     தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?

    இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக்கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

     மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?

    தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப்போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப்போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடைஇடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.

    சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?

    சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்தியேக பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    • அதிகரித்து விட்ட திருமண வயது தான் இதற்கு காரணம்.
    • வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும்.

    குறைபாடு உள்ள குழந்தை உருவாவது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கரு உருவாகும் போதே குறைபாடுகள் இருந்தால், அல்ட்ரா சவுண்டு கருவிகளால், எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. கருவின் இதயத்தில் உள்ள குறை, கரு உருவான, 13-வது வாரத்திலும், கரு வளர்ச்சியில் ஏதேனும் பெரிய அளவில் குறைபாடு இருந்தால், 18-வது வாரத்திலும் கண்டுபிடிக்க இயலும். நுணுக்கமாக இருக்கும் குறைகளை, 22-வது வாரத்தில், கண்டுபிடித்த விடலாம்.

    குறைபாடுகளுடன் கரு உருவாவதற்கு முக்கிய காரணம், அதிகரித்து விட்ட திருமண வயது. பெண் பிறக்கும் போதே, அவளுடன் இருக்கும் கரு முட்டையின் திறன், வயது ஆக ஆக மாறும். கரு முட்டையில் உள்ள குரோமோசோம்களிலும், இயற்கையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு ஆணின் குரோமோசோமும், பெண்ணின் குரோமோசோமும் சேர்ந்து தான், கரு உருவாகிறது.

    வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும். 20 வயதில் இருப்பதைப் போன்ற திறனுடன், 35 வயதில் இருக்காது.

    வயதான குரோமோசோம்கள் கொண்ட கரு, குறைபாடுகளுடன் உருவாகலாம். குறிப்பாக, டவுன் சிண்ட்ரோம் உட்பட, பல மன நல குறைபாடுகள் வரலாம். சில சமயங்களில், 46 குரோமோசோம்களுக்கு பதிலாக, 45 அல்லது 47 என்று சேரும். நிச்சயம் இது குறையுள்ள குழந்தையாகவே பிறக்கும். வாழ்வது இயலாத காரியம் எனும் போது, பல சமயங்களில், இயற்கையே அந்த கருவை அழித்து விடும். கருச்சிதைவிற்கு இதுவும் ஒரு காரணம்.

    அடுத்தது, மரபியல் ரீதியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். மூன்றாவதாக, வயதாகி குழந்தை பெறும் போது, வயது காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வரலாம். கர்ப்பம் தரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருந்தால், கருவிலேயே இதய, நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். அடுத்தது, சுவாசிக்கும் காற்றில் இருந்து, நீர், உணவு என்று அனைத்திலும், தற்போது வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவையெல்லாம் கருவின் வளர்ச்சியை பாதிப்பதால், குறையுள்ள கருவாக உருவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில வைரஸ் தொற்றுகள், கருவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    நவீன அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில், கருவில் உள்ள நுணுக்கமான குறைகளை கண்டறிவதில், எவ்வளவு துாரம் நன்மை உள்ளதோ, அதே அளவிற்கு சமயங்களில் பிரச்சினையும் உள்ளது. குழந்தைக்கு பாதங்கள் சற்றே வளைந்து இருக்கிறது போன்ற சிறிய குறை இருப்பது தெரிந்தாலும், இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லி, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துபவர்களும் உண்டு.

    சிக்கலான பிரச்சினைகளை கருவிலேயே சரி செய்ய முடியும் போது, சிறிய பிரச்னைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.

    • டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
    • உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது.

    மரபணுக் குறைபாட்டுடன் குழந்தை பிறப்பது என்பது மிக அரிதான ஒன்று. `லட்சத்தில் ஒருவருக்கு வரும் மரபணு வியாதியைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு வரக்கூடிய தலைவலி முதல் நெஞ்சுவலி வரையிலான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவே நேரம் இல்லை' என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், மரபணுக் குறைபாடு எங்கேயோ யாரோ ஒருவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு வருவது அல்ல.

    அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு, புகை, மாறிவரும் உணவுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தூக்கமின்மை, மதுப்பழக்கம் போன்ற நம்முடைய வாழ்க்கைமுறைத் தவறுகள் காரணமாக, இன்று டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் (23 ஜோடிகள்) இருக்க வேண்டும். சிலருக்கு, 21-வது ஜோடி குரோமோசோமில், கூடுதலாக ஒரு குரோமோசோம் சேர்த்துவிடுவதால், அவர்களுக்கு 46-க்கு பதில் 47 குரோமோசோம்கள் இருக்கும்.

    இதனால், இந்த குழந்தைகள் மரபணுக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. இந்த குறைபாட்டை முற்றிலும் குணமாக்க முடியாவிட்டாலும் முறையான சிகிச்சை மூலம் எதிர்கால பாதிப்பைக் குறைக்கலாம்.

     பிறவிக்குறைபாடு

    கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திலேயே குழந்தை டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க இயலும். சில பெற்றோர் டவுண் சிண்ட்ரோம் கருவைக் கலைத்துவிடுகின்றனர். ஆனால், இன்றைய சூழலில் கல்வியறிவு மற்றும் மருத்துவ விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்துள்ளதால், பல பெற்றோர்கள் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பது ஆரோக்கியமான விஷயம்.

     ஐ.க்யூ அளவு

    சராசரி மனிதர்களின் ஐ.க்யூ அளவானது 70 முதல் 130 ஆகும். டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளின் ஐ.க்யூ அளவு 50 முதல் 70 வரை இருக்கும். மிக தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி ஐ.க்யூ 50 ஆக இருக்கும். வாழ்நாள் முழுதும் எட்டு வயது குழந்தைக்குரிய அறிவே இவர்களுக்கு இருக்கும். ஐ.க்யூ அளவு 70 உள்ளவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் சராசரியாக இருப்பார்கள்.

    ஆனால், இவர்களுக்கு டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கான தோற்றம், உடல்நலக் குறைபாடுகள் இருக்கும். இவர்களுக்கு, தங்களுக்குள் இப்படி ஒரு குறைபாடு இருப்பதும், மற்றவர்களிடம் இருந்து தாங்கள் வேறுபடுகிறோம் என்பதும் தெரியும்.

    முன்பு, ஐ.க்யூ அளவு மிகக்குறைவாக உள்ள டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் ஏழு வயது வரை சாதாரணப் பள்ளியில் பயின்று, அதற்குப் பின்னர் அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இப்போது, இந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    அறிகுறிகள் பெரும்பாலும் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பிறக்கும்போதே அடையாளம் காண இயலும். பெரிய கண்கள் அல்லது மாறுகண், அகலமான முன்நெற்றி, வாய் பாதி மூடியதுபோல இருக்கும். சிறிய தாடை, கண் இமைகள், ஒழுங்கற்ற பல் வரிசை ஆகியவை மற்ற குழந்தைகளிடம் இருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சங்கள். பெரும்பாலானோர், ஐந்து அடிக்கு மேல் வளர மாட்டார்கள். கண் பார்வை மற்றும் செவித்திறன் கோளாறுகள் வர வாய்ப்புகள் அதிகம்.

     குணாதிசயங்கள்

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான குணாதிசயங்களோடு இருக்க மாட்டார்கள். சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும், சிலர் மந்தமாகவும் இருப்பார்கள். வாலிபப் பருவத்தில் தங்களுக்கு இதுபோன்ற ஒரு குறை இருப்பது தெரிந்ததும், சிலர் மூர்க்கமாக மாறுவர். அதேசமயம் அனைவரிடமும் இன்முகத்துடனும் புன்சிரிப்புடனும் நட்பாகப் பழகுபவர்களும் உள்ளனர்.

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைத் தாக்கும் நோய்கள்

    இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், பலவகையான நோய்களும் குறைபாடுகளும் தாக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதால், மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான தைராக்ஸின் ஹார்மோன் தடைப்படுகிறது. இதனால், இதயக்குழாய் அடைப்பு, இதயச் சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்

    இந்தக் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை, வருடத்துக்கு ஒருமுறை கண் பார்வை மற்றும் செவித்திறன் பரிசோதனை மிகவும் அவசியம். மேலும், குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கப்படுத்தவேண்டியது அவசியம்.

    பாலுணர்வு

    மிதமான டவுண் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள டீன்ஏஜ் வயதினருக்கு பாலுணர்வு சராசரி மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயல்பாகவே உள்ளது. அமெரிக்க இளைஞர்கள் டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள பெண்ணைக் காதலித்து மணந்துகொள்கின்றனர். டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இயல்பான தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். டவுண் சிண்ட்ரோம் பரம்பரை வியாதி கிடையாது என்பதால், டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, இந்த குறைபாடு இருக்க வாய்ப்பு இல்லை.

    மேலைநாடுகளில் டவுண் சிண்ட்ரோம் தம்பதிகளின் விவாகரத்து எண்ணிக்கை, சராசரி தம்பதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இந்த தம்பதிகள் அனைவரும் தங்களுடைய குறையை நன்கு அறிந்தவர்களாக உள்ளதால், இவர்களுக்குள் நல்ல பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது.

    • எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு.
    • ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

    உடலுக்கு சிறிது உபாதை வந்தாலும், மருத்துவர்களை நாடி செல்லத் தொடங்குகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு நலம் பெற்றாலும், அம்மருந்துகளால், என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்று, நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதற்கு மாற்றாக, வீட்டு வளாகத்திலேயே, மூலிகை செடிகளை வளர்த்தால், சிறு, சிறு உபாதைகளுக்கு, சிறந்த மருத்துவமாக பயன்படும்.

    அருகம்புல் சாறு:

    எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.

    அருகம்புல் பச்சையம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து எடை குறையும்.

    தூதுவளை இலைச்சாறு:

    மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.

    துளசி இலைச்சாறு:

    காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

    மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு:

    பார்வை பலம் பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

    பொன்னாங்கண்ணி இலைச்சாறு:

    உடலுக்கு வலு ஊட்டுவதோடு, பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும். கண் பார்வை அதிகரித்து, வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

    வல்லாரை இலைச்சாறு:

    நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.

    முசுமுசுக்கை இலைச்சாறு:

    தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

    வில்வ இலைச்சாறு:

    காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும்.

    புதினா இலைச்சாறு:

    வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

    நெல்லிக்காய் சாறு:

    தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். பசியை, நன்கு தூண்டும். நீரழிவு நோய், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

    வாழைத்தண்டுச் சாறு:

    சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், ரத்த அழுத்தம் குறையும். அமிலத்தை குறைத்து, உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்பு, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும்.

    சாம்பல் பூசணிக்காய் சாறு:

    பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.

    கேரட் சாறு:

    கண்பார்வை ஒளி பெறும், கண்நோய், பல நோய்கள் குறையும். அமிலத்தைக் குறைக்கும்.

    கொத்தமல்லிசாறு:

    பசியை நன்கு தூண்டும். பித்தம் மற்றும் வாத நோய் குறையும். மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

    • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடிய உணர்வாகும்.
    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

    நீர் கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசவுகரியம், எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகிறது.

    சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் தொற்று, இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ், சிறுநீரக, சிறு நீர்ப்பை கற்கள், சில மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை, சிறுநீர்ப்பை புற்றுநோய், சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை. இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூ கோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

    சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆகையால் உங்களுக்கு நீர் கடுப்பு பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

    ×