search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
    • பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும்.

    பிட்டான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.

    ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மயக்கம், வாந்தி அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் சுயநினைவு இழக்க நேரிடும். மாவுச்சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

     பயிற்சி முறை

    ஜிம் பயிற்சிகள் சிக்கலானவையாக இருக்கலாம். சரியான முறையில் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும். அதேபோல, புதிய பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    • சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
    • சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.

    உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?

    இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

     ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?

    உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

    உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?

    முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

    பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.

    தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

    • எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை.
    • பலருக்கும் சில காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.

    கருத்தரித்தலை எதிர்நோக்கும் எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது. இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு செய்றகை கருவுறுதல் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது.

    கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை எனும் போதும் இந்த இவ்ப் தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.

    இந்த செயல்முறையின் போது கருப்பையில் இருந்து முட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுறுகின்றன.

    பிறகு பெண்ணின் கருப்பையில் மீண்டும் செருகப்படுகின்றன. தம்பதியர் கருவுறாமை பிரச்சனையில் இருக்கும் போது invitro fertilization (IVF) சிகிச்சையை தேர்வு செய்வதாக இருந்தால் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

     நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சிகிச்சையில் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்கள் சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்கச் செய்யலாம். அதிக எடையுடன் இருக்கும் பெண், சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.

    ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை செய்யலாம். உணவியல் நிபுணருடன் ஆலோசித்து கார்டியோ, மெட்டபாலிக் எடை இழப்பு திட்டம் போன்றவை எடையை பராமரிக்க உதவலாம். பெண்களோடு, ஆண்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிகிச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தடை ஏற்படும். மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.

    மனம், உடல் திட்டங்களில் பதிவு செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கர்ப்பத்தின் வெற்றியை சாத்தியமாக்கலாம்.

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். ஆண்களும் மலட்டுத்தன்மை குறைபாடு வராமல் இருக்க மல்டி வைட்டமின்கள் எடுப்பது நல்லது. உடல் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.

    இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம். விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

    புகைப்பிடிக்கும் பழக்கம்

    ஆண்கள் புகைப்பிடிக்கும் போது IVF வெற்றிக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.

    விந்தணுக்களின் தரம் அதிகரிக்க மாத்திரைகள்

    விந்தணுக்களின் தரம் மேலும் உறுதி செய்ய சில சப்ளிமெண்ட்கள் உதவுகிறது. மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் அல்லது நீங்களே மருத்துவரிடம் கேட்டு அதற்கான மாத்திரைகளை எடுக்கலாம். இதற்கு மல்டிவைட்டமின்களும் உதவியாக இருக்கும். தம்பதியர் இருவருக்கும் கூட இவை தேவையாக இருக்கலாம்.

    வைட்டமின் டி

    போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40 சதவீதம் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம். கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.

    சரியான மருத்துவரை அணுகவும்

    சிறந்த இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவில்லாத உங்கள் வரலாறு முக்கியம். அப்போதுதான் சரியான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம். மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.

    முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள். ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    • திராட்சையின் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
    • மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

    கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

    ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை அதிகமாக பயன்படுகிறது.

    கருப்பு திராட்சையின் விதை மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப்போதல் போன்ற பிரச்னையை குணமாக்க கருப்பு திராட்சையின் விதை மிகவும் உதவுகிறது.

    சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை பயன்படுகிறது.

    பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கவும் கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது.

    நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட் இதில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே திராட்சைப் பழத்துடன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.

    உடல் வளர்ச்சியில் குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

    எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சையுடன் விதைகளையும் சாப்பிடுங்கள்.

    பழங்காலத்தில் இருந்தே திராட்சை ரசம் அல்லது சிவப்பு ஒயின் குடிக்கும் பழக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களிடம் இருந்து வருகிறது. இதற்கு காரணம், திராட்சையில் அரிய பல மருத்துவ குணங்கள் இருப்பதை நம் முன்னோர் கண்டறிந்ததுதான்.

    சிவப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ரத்தம் உறைதல் காரணமாக உடலின் நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாத பாதிப்புகள் ஏற்படும். சிவப்பு ஒயினில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால், ரத்தம் உறைவு ஏற்படுவதை தடுக்கிறது. நோய் வருவதையும் தடுத்து நிறத்துகிறது.

    இதேபோல் சிவப்பு ஒயின் அருந்துவதால் ரத்த அழுத்தம் சீராக துணை புரியும் என்றும், அதற்கு சிவப்பு ஒயினில் காணப்படும் ரெஸ்வராடால் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    • குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம்.
    • பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும்.

    சிசேரியன் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம். ஏற்கனவே சிசேரியன் இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சிசேரியனை அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சிசேரியனை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சிசேரியனுக்கு மாற்றப்படலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக தெரிந்தால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் டாக்டர் சிசேரியன் சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம் எனவே டாக்டர் சிசேரியனை திட்டமிடுகின்றனர்.

    திட்டமிட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிந்துகொள்ளலாம். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெற்று, அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    சிசேரியனை திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் அவர்கள் உணரமாட்டார்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படும் இதனால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும். எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம்.

    குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உள்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சிசேரியனை காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சிசேரியனில் வேகம் அதிகமாக இருக்கும்.

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன.
    • உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வை சுரப்பிகள்.

    வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள்.

    தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

    1) இளநீர், தர்ப்பூசணி, வெள்ள ரிக்காய், கிர்ணிப்பழம், பனை நுங்கு போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட லாம்.

    2) வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் தேய்த்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்கலாம். இதுபோல சந்த னத்தை உடலெங்கும் தேய்த்துக்கொள்ளலாம். கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால் எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

    3) வெயில் காலத்தில் வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    4) முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.

    4.கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

     5. வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான். இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    6. சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

    7. வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.

    • கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் பயன்படுத்தப்பட்டது.
    • ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    மக்களுக்கு ஓமியோபதி மருத்துவம் சிறப்பானதாக இருக்கும் என்றார் மகாத்மா காந்தி. விலை குறைவு, உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நிவாரணம் அளிப்பதால் உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் 2-வது மருத்துவமுறையாக ஓமியோபதி மருத்துவமுறை இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவத்தில் பெருமளவு தாவரங்களும், ஒரு சில உலோகங்களும் அணு வடிவமாக்கப்பட்டு மருந்தாக பயன்படுகின்றன.

    அந்த வகையில் நாம் வீடுகளில் வளர்க்கும் அழகு தாவரமான கலாடியம் என்ற செடியில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு அந்த செடியின் பெயரிலே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கலாடியம் மருந்து, தீவிர புகையிலை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசியின்மை, வாயு கோளாறு, கொசு கடித்தால் கூட தோலில் ஏற்படும் கடுமையான அரிப்பு, சிவப்பு கொப்பளங்கள், மூக்கு, காது மற்றும் தலையில் ஏற்படும் கொப்பளங்கள், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளையும் நீக்க ஓமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

    கலாடியம் தாய் திரவத்தை சொட்டு மருந்தாக தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் புகைப்பழக்கம், புகையிலை பழக்கங்களில் இருந்து மீளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

    பொதுவாக, ஓமியோபதி மருந்துகளை தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தினால் பெரிய மருத்துவ செலவு இல்லாமல் பல நோய்களில் இருந்து வருமுன் தற்காத்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

    • கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு.
    • கரு முட்டை கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு. அதேநேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

    எக்டோபிக் கர்ப்பம் என்பது ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து முற்றிலும் வேறானது. எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டையானது கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணைந்து தானாகவே கருப்பையின் சுவரில் இணைந்து விடும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருமுட்டை தவறான இடத்தில் வளரும். வெளிப்புற சுவரில் அமைந்துவிடும், ஃபெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடும். மேலும் இது கருவறையின் வேறு பகுதிகளிலும் கூட அமைந்துவிடும். கர்ப்பப்பைக்குள் இல்லாமல் கருப்பை வாய் பகுதியில் அடிவயிற்றுக்குழிக்குள் என்று கருவானது வளரலாம்.

    ஏன் ஆபத்தானது?

    எக்டோபிக் கர்ப்பமானது தீவிர நிலை. இந்த நிலையில் இருக்கு பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவை. ஏனெனில் கருமுட்டையால் உயிர் பெற்று இருந்தாலும் கருப்பை தவிர்த்து எங்கு இருந்தாலும் அவற்றால் வளர முடியாது. மேலும் இது அப்பெண்ணின் உறுப்புகளை பாதிக்க செய்யும். இதனால் உட்புறத்தில் ரத்தக்கசிவு உண்டாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எக்டோபிக் கர்ப்பம் வந்தால் அந்த கருவை அகற்றுவது தான் சிறந்த வழி. 100 பெண்களில் 2 பேருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

     அறிகுறிகள்

    கருவுற்ற உடன் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அசெளகரியங்கள் போன்றவையே குழப்பமாக இருக்கும் என்றாலும் இந்த எக்டோபிக் கர்ப்பம் அறிகுறிகள் தனியாக தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறி மாறுபடும். சிலருக்கு கருவுற்ற அறிகுறி போன்று இவையும் இருக்கும். எனினும் கருவுற்றதை உறுதி செய்த உடன் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    * யோனி ரத்தப்போக்கு (புள்ளிகளாக இல்லாமல் துளிகளாக வெளியேறுவது)

    * குமட்டல் மற்றும் வலியுடன் வாந்தி

    * வயிற்று வலி

    * தீவிரமான வயிற்றுப்பிடிப்புகள்

    * தலைச்சுற்றல் அல்லது பலவீனம்

    * தோள்பட்டை, கழுத்து அல்லது மலக்குடலில் வலி

    * ஃபெலோப்பியன் குழாய் சிதைந்தால் வலி மற்றும் இரத்தப்போக்கு கடுமையானதாக இருக்கும்.

    * அதிகப்படியான களைப்பு

    மேற்கண்ட அறிகுறிகள் கருவுற்ற அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்றாலும் அறிகுறிகளில் உண்டாகும் வித்தியாசத்தை நீங்கள் கண்டறிய வேண்டும்.

    கருமுட்டைகள் சரியான பாதையில் செல்ல கருப்பை தொடர்பான அனைத்து செயல்முறைகளும் அதன் பணிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை கருப்பைக்குள் வர முயற்சிக்கும் பாதையில் ஃபெலோப்பியன் குழாய்கள் சேதம் அடைந்தாலும் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம். அப்போது கருமுட்டையானது வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்துவிடலாம். இது இடம் மாறிய கர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.

    35 வயதுக்கு மேல் குறிப்பாக 40 வயதுக்கு மேல் கருவுறுபவர்கள், அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டவர்கள், பெல்விக் டிசீஸ் கொண்டவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கும் எக்டோபிக் கர்ப்பம் சாத்தியமுண்டு.

    • மூச்சு இன்றி உடல் இயங்காது.
    • மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான்.

    மூச்சு இன்றி உடல் இயங்காது. இன்றைக்கு தியான மையங்கள், இயற்கை மருத்துவ நிலையங்கள் என்று எங்கு போனாலும் அங்கு ஆழ்ந்த மூச்சு பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. மனித உடலில் நுரையீரல் தொடர்ந்து சுருங்கி விரிவதால் காற்று உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடலை புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் உடலின் செல்களுக்கு வேண்டிய உணவான காற்று கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆயுள் நீடிக்கும்.

    சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதையே நிதானமான ஆழ்ந்த மூச்சு மூலம் 48 மணி நேரம் ஆக்கினால் வாழ்நாள் இரண்டாக நீடிக்கும் என்கிறது சித்தர் நூல்கள். அதாவது, ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு சுமார் 15 முறை மூச்சு விடுகிறான். இதையே மெதுவாக செய்தால் நிமிடத்திற்கு 10 முறை என்ற அளவில் சுருக்கலாம். இதையே மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமம் என்கிறார்கள்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி, இடது நாசியினால் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின் வலது மோதிர விரலாலும், சுண்டு விரலாலும் இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியை திறந்து மெதுவாக மூச்சை வெளியே விடவும்.

    இதுபோல் வலது நாசியில் மூச்சை வெளியே விட்டு உடனே, அதே நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியை மூடி, இடது நாசியினால் மூச்சை வெளியே மெதுவாக விடவும். இதுபோல் அவரவர் உடல்நிலைக்கு தகுந்தபடி 5 முதல் 8 தடவை செய்யலாம்.

    இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடலின் கழிவுகள் நீங்கி நோய் தாக்காமல் பாதுகாக்கலாம். குறிப்பாக மன அழுத்தம் நீங்கி எப்போதும் மனம் பாரம் இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
    • ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது.

    ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக காணப்படுகின்றது. காலை உணவு எப்போதும் ஆரோக்கியமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். சிலர் இதை பின்பற்றுகிறார்கள்.

    இப்போது நீங்களும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்பினால், உங்கள் சுவையில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வு ஓட்ஸ்தான். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், வேலை செய்ய போதுமான சக்தியும் கிடைக்கும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை மிகவும் ஆரோக்கியமானவை. காரம், இனிப்பு என பல வகைகளில் செய்யலாம்.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

    ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஓட்சில் பீட்டா குளுக்கான் உள்ளது, இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.

    ஓட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமம் என்றும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது.

    ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம், புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களைத் தவிர்க்கலாம். ஓட்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது, இதன் உதவியுடன் புற்றுநோயை ஊக்குவிக்கும் கூறுகள் குறைக்கப்படுகின்றன.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்சில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இந்த பிரச்சனைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது.

    ஓட்ஸ் கிரீம்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்சில் வைட்டமின் சி காணப்படுகிறது, இது உங்களை கருமை நிறத்தில் இருந்து பாதுகாக்கிறது. முகத்தில் அதிக அளவு மெலனின் இருப்பதால், கருமை பிரச்சனை அதிகரிக்கிறது, ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

    ஒரு ஆய்வின் படி, ஓட்ஸ் சாப்பிடுவது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஓட்ஸில் புரதம், சிலிக்கான், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது எலும்புகளுக்கு பெரும் பலன்களைத் தருகிறது.

     30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்ஸை, இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
    • அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது.

    தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

    ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

     வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

    கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி., மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைகால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது.

    மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.

    கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; நாம் பேசிய மூன்று மருத்துவர்களும் குறிப்பிட்டு கூறிய முதல் செய்தி இது; அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.

    அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும். மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம்.

    பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

    ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

    முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.

    இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்.

    நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

    நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.

    அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும். குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

    கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.

    ×