search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மருத்துவ மகத்துவம்: மண் குளியலும்.. மண் புதையலும்..
    X

    மருத்துவ மகத்துவம்: மண் குளியலும்.. மண் புதையலும்..

    ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தை ஆதாரமாககொண்டு மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பல வகை சிகிச்சை உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தை ஆதாரமாககொண்டு மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பல வகை சிகிச்சை உண்டு. அதில் முதலாவது வகையானது, மண்ணை தண்ணீரில் குழைத்து நேரடியாக உடலில் பூசுவது. 2-வது வகை என்பது, குழைத்த மண்ணை ஒரு துணியில்வைத்து மடித்து அதை உடலில் வலி இருக்கும் இடத்தின் மேல் வைப்பது. இதற்கு மண்பட்டி என்று பெயர்.

    3-ம் வகையானது, மண் குளியல். இதில், மண்ணை தண்ணீரில் நன்கு குழைத்து அதை உடல் முழுவதும் பூசிக்கொண்டு சூரியஒளியில் முக்கால் மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நிற்க வேண்டும். 4-ம் வகை, மண் புதையல் எனப்படுகிறது. இதற்கு கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கழுத்தளவிற்கு குழி தோண்டி அதன் உள் இறங்கி கழுத்து வெளியே தெரியும்படி நின்றுகொண்டு மண்ணைப் போட்டு மூடி, குறிப்பிட்ட நேரம் வரை நிற்க வேண்டும்.

    5-வது வகைக்கு பதவாடை என்று பெயர். இது சுடுமண்ணில் ஒத்தடம் கொடுக்கும் முறை. இதற்கு மண்ணை ஒரு சட்டியில் போட்டு வறுத்து, அதை ஒரு துணியில் கட்டி இதமான சூட்டில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இத்தகைய 5 முறைகளிலும் மண் சிகிச்சை பெறலாம்.

    முதலாவது வகை சிகிச்சை: இது மண்ணை நேரடியாக தண்ணீரில் குழைத்து பூசும் முறை. இதில் கை, கால் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தலைவலி ஆகியவைகளுக்கு, குழைத்த மண்ணை வலி இருக்கும் இடத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதனால் வலிகள் குறையும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

    இரண்டாவது வகை: இது மண்பட்டி சிகிச்சை. இந்த சிகிச்சை முறையில் குழைத்த மண்ணை ஒரு துணியில் வைத்து மடித்து அதை தொண்டை மற்றும் கை, கால் உள்பட உடலில் வலி இருக்கும் இடங்களில் வைக்கலாம். காய்ச்சலுக்கு தலை, நெற்றியில் வைக்கலாம். இது உடல் சூட்டை தணிக்கும். அதனால் காய்ச்சல் குறையும்.

    மூன்றாவது வகை: இது மண் குளியல். இந்த வகை சிகிச்சை, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். மன அழுத்தம் குறையும். தோலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். தோல் வியாதிகள் நீங்கும்.

    நான்காவது வகை: இது மண் புதையல். 3-வது வகையான மண் குளியல் முறையில் கிடைத்த அனைத்து நன்மைகளும் இதிலும் கிடைக்கும்.

    ஐந்தாவது வகை: இது ஒத்தடம் கொடுக்கும் முறை. உடலில் ஆங்காங்கே தோன்றும் வலிகள், வீக்கம், கட்டி இவற்றிற்கு வெதுவெதுப்பான முறையில் இதமாக ஒத்தடம் கொடுக்கலாம். இதுவும் சரியான நிவாரணத்தை தரும்.

    மண்ணை உடலில் பூசும் காட்சி

    பொதுவாக மண் சிகிச்சை அளிப்பதற்கு சாதாரணமாக கிடைக்கும் மண்ணை பயன்படுத்த முடியாது. கழிவுகள் இல்லாத சுத்தமான மண்ணாகவும், மருத்துவ குணம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில் புற்று மண், களி மண், செம்மண்ணுக்கு மருத்துவ குணம் உள்ளது. அதை நம் முன்னோர்கள் கண்டறிந்து அந்த 3 வகையான மண்ணையும் சிகிச்சைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மண்ணில் தாமிரம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, கந்தகம் போன்றவைகளும், உயிர் சத்துக்களும் நிறைந்துள்ளது. மண் சிகிச்சைக்கு தேவைப்படும் மண்ணை, சுத்தமான இடத்தில் 2 முதல் 3 அடி ஆழத்தில் தோண்டி எடுக்கவேண்டும். அதில் இருக்கும் கற்கள், புற்களை அகற்றி வெயிலில் குறைந்தது 6 மணி நேரம் காயவைக்க வேண்டும். பின்பு அந்த மண்ணை நன்கு சலித்து எடுத்து தண்ணீரில் குழைத்து, 8 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண் டும். அதன்பிறகு அந்த மண்ணை சிகிச்சைக்கு பயன் படுத்தலாம்.

    ஒரு முறை பயன்படுத்திய மண்ணை மீண்டும் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் மீண்டும் 6 முதல் 8 மணி நேரம் அந்த மண்ணை வெயிலில் காயவைக்கவேண்டும். தோல் வியாதிக்கு சிகிச்சை அளித்த மண்ணை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    மண் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் ஜீரண மண்டலத்தின் வேலை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும். உடலின் பெரிய உறுப்பான தோல், உடலின் முக்கிய கழிவு மண்டலமாகவும் திகழ்கிறது. அந்த கழிவு மண்டலத்தின் குறைகள் மண் சிகிச்சையால் சரிசெய்யப்படுவதால், உடல் இயக்கம் சீராகும். சிறுநீரக பாதிப்பும் குறையும். மேலும் ஜீரண மண்டலம் சீராக்கப்படுவதால் இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதனால் மிகுந்த பயன் கிட்டும். தோலில் அதிக எண்ணெய் பசை உள்ளவர்களும் மண் சிகிச்சை எடுக்கலாம். இதனால் முகப்பொலிவு கிடைக்கும்.

    மாதவிடாய் காலத்தில்

    அனைத்து பாலினத்தவர்களும் மண் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு இருப்பதுண்டு. அப்போது அடி வயிற்றில் மண்பட்டி சிகிச்சை எடுக்கலாம். இதனால் உதிரப்போக்கு நிற்கும். சினைப்பையில் கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். புற்றுநோயாளிகளும், வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தாராளமாக மண் சிகிச்சை எடுக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மண் சிகிச்சை எடுக்க வேண்டும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் மண் சிகிச்சை எடுப்பது நலம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு பாத எரிச்சல் குறையும்.

    விளக்கம் : டாக்டர் கல்யாணி,

    யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு, அரசு மருத்துவமனை திண்டுக்கல்.
    Next Story
    ×