search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் குடல்
    X

    உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் குடல்

    குடல் முக்கியமான உடல் உள்உறுப்பாகும். உணவை செரிக்க வைக்கும் ஜீரண மண்டலத்தில் குடல்களின் பணி அதிகம். இரைப்பை எனப்படும் வயிற்றினைத் தொடர்ந்து குடல் அமைந்துள்ளது.
    குடல் முக்கியமான உடல் உள்உறுப்பாகும். உணவை செரிக்க வைக்கும் ஜீரண மண்டலத்தில் குடல்களின் பணி அதிகம். இரைப்பை எனப்படும் வயிற்றினைத் தொடர்ந்து குடல் அமைந்துள்ளது. குடல் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகையாக பிரிக்கப்படுகிறது.

    இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி சிறுகுடல். இது, 4 முதல் 7 மீட்டர் நீளம் இருக்கும். இது பெருங்குடலைவிட சுமார் 4 மடங்கு நீளமானதாகும். சிறுகுடலை முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். இங்குதான் பெரும்பாலான செரிமான நிகழ்வு நடக்கிறது. சிறுகுடலின் உட் சுவரில் விரல்கள்போல மெல்லிய நீட்சிகள் காணப்படும். இவையே உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி ரத்தத்தின் வழியே உடலில் கலக்கச் செய்கிறது. வெவ்வேறு வகையான நீட்சிகள், குறிப்பிட்ட வகை சத்துக்களை உறிஞ்சும் வேலையை செய்கின்றன.

    பெருங்குடல் 7.6 சென்டி மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும். இங்குதான் மனிதனின் கழிவு சேகரமாகும். கழிவான மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பது பெருங்குடலின் முக்கிய பணியாகும்.

    மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனப்படுகிறது. பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய உடல் வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும், ஒட்டுண்ணிகளாலும் தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மற்ற நோய் பாதிப்பும் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகலாம். சில மருந்துகளும் வயிற்றுப்போக்கை தூண்டும். தொற்றுநோய்க் கிருமிகள் உணவு மற்றும் தண்ணீர் மூலமாக நமது உடலுக்குள் செல்கிறது. இவற்றின் தாக்குதலாலும், சில உணவுப் பொருட்களை ஜீரணிக்க முடியாதபோதும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

    உண்ணும் உணவிலும், சுத்தம் சுகாதாரத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் குடல் பிரச்சினைகளை தவிர்க்கலாம் உங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் பெற்றோரிடம் கூறுங்கள். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்போது உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகலாம். எனவே நீர் அல்லது திரவ உணவுகள் கொடுத்து வறட்சியைச் சரி செய்ய வேண்டும். உங்கள் தம்பி - பாப்பாவுக்கு வயிற்றோட்டம் இருந்தால் அம்மாவுக்கு இதை ஞாபகப்படுத்துங்கள்.

    வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர்ச்சத்து வறட்சியைப் போக்க தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்வது. ஒரு லிட்டர் காய்ச்சி ஆறிய நீரில் ஒரு கரண்டி (டீ ஸ்பூன்) உப்பு, 8 கரண்டி சர்க்கரை சேர்த்த கரைசலை குடிக்கலாம்.

    வயிற்றுப் போக்கின்போது மலத்தில் ரத்தம் அல்லது சளி வெளியேறினாலோ, மலத்தின் நிறம் மாறினாலோ பெற்றோரிடம் கூறுங்கள். டாக்டரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.

    வயிற்றுப்போக்கினால் வறட்சி ஏற்படுவதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். அதிகமாக தாகம் எடுத்தல், நாக்கு உலர்ந்து போவது முக்கிய அறிகுறிகளாகும். 3 மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வராவிட்டால் கவனம் தேவை.

    குடலில் நன்மை செய்யும் கிருமிகள் நிறைய வசிக்கின்றன. அவையே உணவு செரிமானத்திலும், பல்வேறு உடற்செயல்களிலும் பங்கெடுக்கின்றன. உணவுடன் கலந்து செல்லும் தீமைசெய்யும் கிருமிகளே குடல்செயல் பாதிக்கப்படவும், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.

    கசப்பு, துவர்ப்பு போன்ற சுவை கொண்ட உணவுகள், கிருமிகளை அழிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு வழங்கும். எனவே பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அவசியம் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் வயிறு மற்றும் குடலை சுத்தம் செய்யும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும். இப்படி செயல்பட்டால் குடலும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். யோகா செய்வதன் மூலமும், உடலும், ஜீரண உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்!
    Next Story
    ×