search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உண்பதும் உறங்குவதும் தவமே
    X

    உண்பதும் உறங்குவதும் தவமே

    உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள்.
    உண்பதிலும் உறங்குவதிலும் ஒரு சுகம் கிடைக்கிறது. அதனால் உணவும் உறக்கமும் எல்லோருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன. உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள். அளவான உணவும் ஆழ்ந்த உறக்கமும் மனிதனுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும் வரங்கள். அதனால் இவையிரண்டும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. இதையுணர்ந்த முன்னோர் இவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் விளைவாக உணவு உட்கொள்ளும் முறையையும் உறங்குகின்ற வழிமுறையையும் கண்டறிந்து அவற்றைத் தவமாகவே போற்றினர்.

    உணவு என்பது பண்பாட்டுடன் பிணைந்தது. பிறந்த இடம், வளரும் சூழலுக்கேற்பவே மனிதனுக்கு உணவுப் பழக்கம் அமைகிறது. தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்பவே தானியங்கள் விளைகின்றன. அந்தத் தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கமும் அமைகிறது. இதனால் சொந்த பூமியில் விளைபவை சுவையானதாகவும் வயிற்றுக்கேற்ற உணவாகவும் கருதப்பட்டன. அதைத்தான் இன்று இயற்கை உணவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம். இக்காலம் எங்கோ விளையும் பல்வகை உணவு வகைகளைப் பரிமாறும் காலமாக மாறிவிட்டது.

    ஒருவேளை உண்பவன் யோகி (தவஞானி), இரண்டு வேளை உண்பவன் போகி (இன்பம்விரும்பி), மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்று உணவு உண்ணும் வேளையை ஞானியர் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மூன்று வேளை உணவு என்பதே எல்லோருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகிப் போனது. எந்தச் சூழலானாலும் எந்த உணவு ஆனாலும் நம் முன்னோர் சொன்ன முறைகளைப் போற்றி உண்பது ஆரோக்கியத்தின் திறவு கோலாகும். மூன்றுவேளை உணவு நமக்குப் பழகிவிட்டது. அவசியமும் ஆகிப் போனது. எவை அந்த மூன்று வேளை?

    காலை, மதியம், இரவு. இந்த மூன்று வேளையும் உணவு உண்ண வேண்டும். இது சரிதான். காலை எத்தனை மணிக்குச் சாப்பிட வேண்டும்? மதிய உணவு எப்போது? இரவு உணவு ஏழு மணிக்கா? எட்டு மணிக்கா? இந்த மணிக்கணக்கைத்தான் நம்முன்னோர் ‘பசித்துப் புசி’ என்று சொல்லி வைத்தனர். பசித்துப் புசி என்பது வெற்று மொழியன்று.

    அனுபவத்தில் கண்டெடுத்த ஞானமொழி. பசி என்பது சாப்பாட்டு நேரத்தைக் காட்ட வயிறு அடிக்கும் அறிவிப்பு மணி. உணவுக்கு விடுக்கும் அழைப்பு மணி. நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பதற்கு நம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. நாம் வழக்கமாகச் சாப்பிடும் நேரத்திற்கேற்ப அமிலமும் சுரக்கப் பழகிக் கொள்கிறது. நாம் சாப்பிடப் பிந்தினாலும் அமிலச் சுரப்பு தன்வேலையை உரிய நேரத்தில் தொடங்கி விடுகிறது. இதுதான் பசியின் அறிகுறி. இந்த நேரத்தில் தேவையான உணவை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

    உண்ட உணவு செரித்தபின் நமக்கு உகந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்லிவைத்த உண்மை. சாப்பிட வேண்டிய அளவு என்ன? ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? அதற்கும் அளவு சொல்கிறார் வள்ளுவர். நம் வயிற்றில் உள்ள அக்கினிதான் நாம் உண்ட உணவைச் செரிக்க வைக்கிறது. அதனால் நம் வயிற்றுத் தீயின்(உஷ்ணம்) அளவுக்கேற்பவே உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை உணர்ந்துதான், வயிறுமுட்டச் சாப்பிடாதே என்கின்றனர்.

    ‘ருசித்துப் புசி’ என்பது நம் முன்னோர் சொல்லி வைத்த இன்னொரு அனுபவ மொழி. அதாவது உணவை விருப்புடன் ரசித்துச் சாப்பிட என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கிறது. மனம் சொல்வதைத்தான் வயிறு ஏற்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தச் சாப்பாடு ஆனாலும் மன மகிழ்வோடு விரும்பியுண்டால் வயிறும் அதனைச் சந்தோஷமாக எற்றுக் கொள்ளும்.



    உப்பில்லாக் கூழ் கூட அமிழ்தமாகிவிடும். வேறு நினைவில் சிந்தனையைச் செலுத்தாமல் உண்ணும் உணவில் மட்டும் கவனம் செலுத்தி, நன்கு மென்று உண்ணவேண்டும். இரைப்பைக்குப் பற்கள் கிடையாது. வாயினால் உணவை நன்கு மென்று விழுங்கினால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகிவிடும். நன்றாக மெல்லும்போதுதான் நாக்கு உணவின் ருசியை அறிய முடியும். இதனால்தான் நம் முன்னோர் ருசித்துப் புசி என்றனர்.

    கைகால் கழுவி வாயைச் சுத்தமாக்கிய பின்னே உணவு உண்ண வேண்டும். கால்களில் ஈரம் உலரு முன்பே உண்ணுதல் உயர்ந்த பழக்கம். உண்டு முடித்தபின் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் நம்முன்னோர் எந்தத்திசை நோக்கியிருந்து உணவு உண்ண வேண்டும் என்பதையும் அதற்கான பலனையும் குறிப்பிடுகின்றனர்.

    கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் மூன்று திசைகளைப் பார்த்து இருந்து உண்பது நல்லது. வடக்குப் பார்த்து உண்ணக்கூடாது. அது நல்லது இல்லை. இந்திரனுக்குரிய கிழக்குத் திசை நோக்கியிருந்து உண்டால் கல்வியும் ஆயுளும் பெருகும். எமதர்மனுக்குரிய தெற்கு நோக்கி உண்டால் புகழ் வளரும். மகாலட்சுமிக்குரிய மேற்குத்திசை நோக்கியிருந்து உண்டால் செல்வம் பெருகும். மற்றவர் வீடுகளுக்குச் செல்லும்போது மேற்கு நோக்கி இருந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டும் நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் வெட்ட வெளியிலும் உணவு உண்பது நம் முன்னோருக்கு ஏற்புடையது அல்ல.

    நின்றும் நடந்தும் வெட்டவெளிப் பரப்பிலும் உணவு உண்ணும் பழக்கம் இப்போது நம்மிடையே மலிந்து வருகிறது. வித, விதமான உணவு வகைகளை மேஜையில் பரிமாறி, சூழ இருந்து கரண்டி, முள்கரண்டிகளால் எடுத்துண்ணும் வெளிநாட்டுக் கலாசாரம் இங்கு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எதை முதலில் சாப்பிடுவது? எதை எப்படிச் சாப்பிடுவது? என்ற குழப்பத்தில் பலர் தவிக்கின்றனர். இதனால் உணவு விடுதிகளிலும் விருந்து நிகழ்வுகளிலும் ஒருவர் சாப்பிடும் முறையே அவரை அடையாளப்படுத்தும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது. என்ன இருந்தாலும் வலது கையால் (சோற்றாங்கை) பிசைந்து அள்ளி உண்ணும் ருசிக்கு ஈடாகாது. இனிப்பை முதலிலும் கைப்பைக் கடைசியிலும் மற்ற சுவைகளை இடையிலும் உண்ண வேண்டும் என்பது முன்னோர் மொழிந்தது.

    உணவைப் பற்றிச் சொன்ன நம் முன்னோர் உறக்கத்தைப் பற்றியும் சொல்லிச் சென்றுள்ளனர். உள்ளத்துக்கு ஓய்வு தந்து உடலுக்குத் தெம்பு தருவது உறக்கம். தூக்கம் நோயைத் துரத்தும் என்பது அறிவுபூர்வமான உண்மை. தூக்கத்திற்கு உகந்த நேரம் இரவு என்பதும் முன்னிரவில் துயின்று வைகறையில் துயில் எழ வேண்டும் என்பதும்? முன்னோர் வகுத்த நெறி. இரவில் தூங்காமல் இருந்தால், பயம், படபடப்பு, மந்தம், புத்திமயக்கம் போன்றவை உண்டாகும். கோபம், கவலை, வேண்டாத சிந்தனை போன்றவற்றைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு இறைவனை எண்ணித் துயிலச் சென்றால் நிம்மதியான தூக்கம் உடனே நம்மைத் தழுவும்.

    நல்ல தூக்கத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும். எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதையும் நம் முன்னோர் அறிவு பூர்வமாக வரையறுத்துள்ளனர். வடக்குத் திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பது நம் மூதாதையர் கருத்து. உடம்பின் தலைப்பகுதியில் நேர் மின்னோட்டம் உள்ளது. பூமியின் வடக்கில் நேர்மின்னோட்டம் உள்ளது. இரண்டு நேர்மின்னோட்டம் ஒன்றையொன்று துரத்தும். இது மூளைக்கு நல்லது அல்ல. பூமியின் வடதிசையில் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி மூளையைப் பாதிக்கும்.

    இது அறிவியல் உண்மை. இதை அறிந்தே நம் முன்னோர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் தலைவைத்துப் படுப்பதற்கு உகந்தவை. இதனை, “உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு” என்பதால் அறியலாம். உடம்பில் உள்ள ஈரம் உலர்ந்த பின்னே படுக்கைக்குச் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பவனைச் சாப்பாட்டு ராமன் என்றும் மிதமிஞ்சித் தூங்குபவனை கும்பகர்ணன் என்றும் இகழ்வதுண்டு. அப்படியின்றி, அளவோடு உண்டு, அயர்ந்து தூங்குபவர்களுக்கு ஊணும் உறக்கமும் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் உயர்ந்த தவமேயாகும்.

    பேராசிரியர் மா.ராமச்சந்திரன், உடன்குடி
    Next Story
    ×