search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்றிக்காய்ச்சலா... பதற வேண்டாம்...
    X

    பன்றிக்காய்ச்சலா... பதற வேண்டாம்...

    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மீண்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்... ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான சிகிச்சைகள் குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மருதுபாண்டியன் நம்மிடம் விளக்கம் அளித்தார். அதுபற்றிய தகவல்களை இனி விரிவாக காணலாம்.

    ‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

    பன்றிக்காய்ச்சல் தொற்றினால் மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய காய்ச்சலுக்குரிய அறிகுறிகள்தான் இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். பன்றி காய்ச்சலை பரப்பும் வைரசுக்கு ஒரு வினோத சக்தியும் இருக்கிறது. அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மூன்றாவதாக புதிய வைரசாகவும் உருமாறிவிடக்கூடும். எனவே அலட்சியம் காட்டினால், நோய் தீவிரம் அடைந்து உடல் உறுப்புகள், செயல் இழந்து உயிரிழப்பும் வரலாம்.

    பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி இளநிலை, முதுநிலை டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு டீன் டாக்டர் மருதுபாண்டியன் கூறினார்.

    தடுக்க முடியுமா? :

    பன்றிக்காய்ச்சலை தடுக்க முடியுமா? என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இருந்தால் அதனை 80 சதவீதம் தடுத்து விடலாம். பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ஒருவரை குணப்படுத்த முடியும். ஆனால், அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவரை குணப்படுத்துவது சற்று கடினமானதாகிவிடும்.

    எடுத்துக்காட்டாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் அவருக்கு தகுந்த சிகிச்சை மிக அவசியமானது. பொதுவாக குழந்தைகளையும், பெரியவர்களையும் இந்த வைரஸ் எளிதாக தாக்குகிறது.

    தினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.

    வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். இதுபோன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கிறது. அதுபோல் பன்றி காய்ச்சலை கண்டறிவதற்காக பிரத்யோக ஆய்வகமும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ளது. தென் மாவட்டங்களில் இதுவே அங்கீகாரம் பெற்ற மிகப்பெரிய ஆய்வகமாகும்.

    பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா என்று கேட்டால், ‘உண்டு’ என்பதுதான் பதில். பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் ‘ஒசல்டாமிவிர்‘ என்ற மாத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கான அறிகுறிகள் தென் பட்டால் டாக்டரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படும். இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் மாறி மாறி உருவெடுப்பதால், ஆண்டுதோறும் புது தடுப்பூசி போட வேண்டும்.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

    வைரஸ்களில் பலவகை

    பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்தில் எச்1என்1 என்ற வைரஸ்தான் பரப்பியது. தற்போது அதில் படிப்படியாக பல மாற்றங்கள் உருவாகி, எச்3என்2, எச்2என்1, எச்2என்3, எச்1என்2, எச்3என்1 என்ற பல்வேறு வைரஸ் வகை வந்து விட்டன. பொதுவாக இந்த காய்ச்சல் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்துதான் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகம் பரவுகிறது. பொதுவாக மற்ற மாதங்களில் இது அதிக பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை.

    பன்றிக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை பொறுத்து, அவருக்குரிய பாதிப்பை கூறுகிறார்கள். அதாவது, ஏ, பி, சி என்ற 3 நிலைகள் இதில் உள்ளன.

    நிலை-‘ஏ’ பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நோயாளிக்கு ஏற்படும் ‘ஏ‘ நிலைக்கான அறிகுறி என்பது மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு ஆகியவை.

    நிலை-‘பி’ கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி.

    நிலை-‘சி’ மேற்கண்ட ‘ஏ‘ மற்றும் ‘பி‘ நிலைகளில் காணப்படும் அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக நிச்சயம் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    என்னென்ன பரிசோதனை?

    தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்து எந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ‘சி‘ நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு அவசியம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் தற்போது அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×