search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்ணைக் காத்திட எளிய வழிகள்
    X

    கண்ணைக் காத்திட எளிய வழிகள்

    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும்.
    இன்று(அக்டோபர் 11-ந்தேதி) உலக கண்பார்வை தினம்

    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.

    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.

    இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம்.

    புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம்.

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

    அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும். நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்.

    ‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.

    டாக்டர் விஜய் சங்கர்
    Next Story
    ×