search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு
    X

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம்.
    மூக்கு, முக அழகுக்கு மட்டுமல்ல சுவாசத்திற்கும் முக்கியமானது. உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி அனுப்புவது மூக்குதான். வாசனை அறியவும் மூக்கு பயன்படுகிறது. முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிவோம்...!

    * மூக்கு, வாசனைகளை நுகர்வதற்கான பிரத்தியேக செல்களைக் கொண்டுள்ளன. இவையே நறுமணத்தையும், நாற்றத்தையும் உணர காரணமாக உள்ளன.

    * காற்றில் ஆபத்தான ரசாயனங்கள் இருந்தால் மூக்கினால் உணர முடியும்.

    * மனிதனின் மூக்கு 2 நாசித் துவாரங்களைக் கொண்டது. இந்த துவாரங்களை பிரிக்கும் தடுப்பு, ‘நாசல் செப்டம்’ எனப்படுகிறது.

    * ‘நாசல் செப்டம்’ தடுப்பானது ஒரு குருத்தெலும்பு அமைப்பாகும். இது தசைகளைவிட வலிமையானது, ஆனால் எலும்பைவிட நெகிழ்வுத்தன்மை கொண்டது.

    * மூக்கின் உச்சியானது ‘நாசிக்குழி’ எனப்படுகிறது. இங்குள்ள எத்மாய்டு எலும்பு நாசிக்குழியையும், மூளையையும் பிரிக்கிறது.

    * இந்த எத்மாய்டு எலும்பின் மீதுதான் கண்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. எனவே இதை கண்ணின் சுழல் அச்சு என்கிறார்கள்.

    * தலையின் உட்பகுதியில் அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது நாசிக்குழி. வெளிப்புறத்தில் மூக்கு அமைந்திருக்கும் பகுதிக்கு உட்புறத்தில் கண்ணின் பின்னால் அமைந்திருக்கிறது நாசிக்குழி.

    * நாசிக்குழியில்தான் நாம் உள் இழுக்கும் காற்றானது உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. அதாவது அதிக வெப்பமான காற்று உடலுக்கு ஏற்ப குளிர்விக்கப்படுகிறது அல்லது குளிரான காற்று உடல் வெப்பத்திற்கேற்ப சூடாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    * நாசிக்குழி பகுதியில் காணப்படும் நுண் மயிரிழைகள் போன்ற அமைப்பு காற்றில் கலந்து வரும் தூசுகளையும், நுண்துகள்களையும் வடிகட்டுகிறது.

    * மூக்கின் உச்சிப்பகுதியாக கருதப்படும் நாசிக்குழியே, வாயின் உச்சிப் பகுதியாகவும் அமைந்துள்ளது.

    * வாசனையை நுகர முடியாத நிலை ‘அனோஸ்மியா’ எனப்படுகிறது.

    * லேசான வாசனையையும் உணர்ந்து கொள்ளும் அதிகப்படியான நுகர்ச்சி திறன் ‘ஹைபரரோஸ்மியா’ எனப்படுகிறது.

    * வாசனை நுகர்வதில் ஏற்படும் திடீர் மாற்றம் ‘டைசோஸ்மியா’ எனப்படுகிறது.

    * ஆண்களின் மூக்கு, பெண்களின் மூக்கைவிட பெரியது.

    * மூக்கு சம்பந்தமான அறுவைச் சிகிச்சை ‘ரினோபிளாஸ்டி’ எனப்படுகிறது.

    மூக்கு பராமரிப்பு

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூக்கில் விரல்கள், குச்சிக ளைவிட்டு விளையாடக்கூடாது. தண்ணீர் மற்றும் மருந்து போன்ற திரவங்களை மூக்கில் ஊற்றிக் கொள்ளக்கூடாது.

    மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்தை மட்டுமே மூக்கிற்கு பயன்படுத்த வேண்டும். மூக்கில் தேவையற்ற தூசு துரும்புகள் நுழைந்தால் இயற்கையாகவே தும்மல் ஏற்பட்டு வெளியேறிவிடும். ஒருவேளை அதில் அசுத்தங்கள் மிகுந்துவிட்டால் அதை சுத்தம் செய்ய பருத்தி துணிகளையே பயன்படுத்த வேண்டும். தெரியாத மருந்துகள், பூக்களை மூக்கினால் நுகர்ந்து பார்க்கக்கூடாது.

    அசுத்தங்கள் நிறைந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால் மூக்கினை கைக்குட்டை அல்லது மருந்து துணியால் மூடிக் கொள்ள வேண்டும். நோய் ஏற்படும்போதும் இவற்றைப் பயன்படுத்தி சுகாதாரம் பேண வேண்டும். மூக்கில் ரத்தக் காயம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும். 
    Next Story
    ×