search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் வரும் தலைவலிக்கு காரணங்கள்
    X

    கோடை காலத்தில் வரும் தலைவலிக்கு காரணங்கள்

    கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? உஷ்ணம் தான் அநேகமாய் காரணமாக இருக்கும்.
    கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? உஷ்ணம் தான் அநேகமாய் காரணமாக இருக்கும். கோடையில் உடலில் நீர் சத்து குறையும் பொழுது தலைவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக சூடு இருக்கும் பொழுது வெளியில் உடற்பயிற்சி செய்தாலும் இத்தகு தலைவலி ஏற்படும்.

    சூடு கூடகூட ‘அக்னி’ காலகட்டத்தில் அநேகர் அதிக தலைவலியினைக் கூறுவர். காரணம் தலையினுள் உள்ள ரத்த குழாய்கள் விரிந்து பக்கத்திலுள்ள நரம்புகளை அழுத்துவதன் மூலம் இந்த வலி, பாதிப்பு ஏற்படுகின்றது.

    உடலில் நீர்சத்து குறைந்து, அதற்கேற்ப தண்ணீர் குடிக்காது இருக்கும் பொழுது தலைவலி, மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். ஆல்கஹால், காபி, டீ இவற்றினை நன்கு குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். ஏனெனில் இவையும் உடலில் நீர்சத்தினை குறையச் செய்யும்.

    காரணத்திற்கேற்ப தலைவலிக்கான சிகிச்சை தேவை. ஆனால் அதிக வெயிலில் நீங்கள் அலைந்து தலைவலி ஏற்பட்டால் முதலில் தண்ணீர் குடியுங்கள்.

    தாங்க முடியாத தலைவலி, இருமும் பொழுதும் நகரும் பொழுதும் தலைவலி கூடுவது. கழுத்து பிடிப்பாக இருத்தல் போன்ற கூடுதல் அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டியவை.

    சிலருக்கு அதிக பளிச்சென்ற சூரிய ஒளி கூட தலைவலி கொடுத்து விடும். அதிக வாசனை சன் ஸ்கீரின், சென்ட், இவைகளைத் தவிருங்கள். வழக்கத்தினைவிட மாறுபட்ட உணவினை உட்கொண்டாலும் தலைவலி ஏற்படும் என்பதனை அறிக.

    சிலருக்கு வெயிலில் அதிக தலைவலியுடன், தசைபிடிப்பு, வயிற்று பிரட்டல், சோர்வு, இவையும் ஏற்படலாம். உடனடியாக நிழலான பகுதியில் ஒதுங்கி, நீர்குடித்து உடனடியாக உங்களை நீங்களே சரி செய்து கொள்ள முடியும்.



    தேவையில்லை எனில் அதிக வெயிலில் அலைவதை விட்டு விடலாமே. இவ்வாறு தவிர்ப்பு முறைகளை மேற்கொள்ளாதவர் உயிரிழப்பு வரை சென்று விடுகின்றார்கள். ஆகவே கவனம் தேவை.

    அதிக சூடு இருந்து உங்களுக்கு அசவுகர்யமாக இருந்தால் முடிந்தால் ஏசி அறைக்குச் செல்லுங்கள். இல்லையெனில் மின்விசிறியின் கீழ் வாருங்கள். படுத்து கால்களை தலைகாணி கொண்டு சற்று உயர்த்தி வையுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். காபி, டீ வேண்டவே வேண்டாம். குளிர்ந்த நீரில் நன்கு குளியுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளை அணியுங்கள். நல்ல முன்னேற்றத்தினை உணர்வீர்கள். ஒரு மணி நேரம் ஆகியும் முன்னேற்றம் தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அதிகமான பாதிப்பில் மேற்கூறிய முயற்சிகள் எந்த பலனையும் தராது என்பதனை நன்கு உணர வேண்டும்.

    * கையில் எப்பொழுதும் தண்ணீர் வைத்திருங்கள்.

    * உடற்பயிற்சி, தூக்கம் இவை அவசியமே.

    * உடல் நலமே முக்கியம். எனவே உடல் நலனை பாதிக்கும் எதனையும் மேற்கொள்ளாதீர்கள்.

    * வெயிலில் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. ஆனால் இப்படி இருப்பதே மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும். பழைய சாதம், நீர்மோர், பழங்கள், இளநீர் இப்படி ஏதாவது சாப்பிடுங்கள். வறுத்த, பொரித்த, மசாலா உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.

    * தலைவலிக்கும் போல் தோன்றினாலே ஒரு க்ளாஸ் நீர் அருந்துங்கள்.

    * குடையுடன் வெளியில் செல்லுங்கள்.

    * தரமான கூலிங் கிளாஸ் அணியுங்கள்.
    Next Story
    ×