search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்னீர் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
    X

    பன்னீர் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

    பன்னீரில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. பன்னீர் சாப்பிடுபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பன்னீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பன்னீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. அதனால் நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம். பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும்.

    100 கிராம் ஃப்ரெஷ் பன்னீரில் எனர்ஜி - 265 kcal, புரதம் - 18.3 gm, கொழுப்பு- 20.8 gm, கால்சியம் - 208 mg, வைட்டமின் C - 3 mg, கரோட்டீன் - 110 mg ஆகியவை அடங்கியுள்ளது. புரதம், பாஸ்பரஸ் மற்றும் அதிகளவு கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம் இருப்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். மேலும் பல் சிதைவு, ஈறு பிரச்சனைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பன்னீர் இருக்கிறது.

    பன்னீர் எல்லா வேலைகளிலும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள்தான். குறிப்பாக, காலை நேரங்களில் பன்னீர் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி நாளின் தொடக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது. இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் மட்டும் இரவில் பன்னீர் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் கொழுப்புச்சத்து இருப்பதால் செரிமானமாவது சிறிது தாமதமாகும்.’’

    பன்னீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொறிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனால் நம் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் போகலாம். முட்டை பொரியல், கிரேவி போன்றவை செய்து சாப்பிடலாம்.



    பன்னீர் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...

    ‘‘பெரும்பாலும் கடைகளில் பன்னீர் வாங்குவதை விட வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதன் மூலம் பன்னீரில் கலக்கப்படும் ரசாயன அமிலங்களின் கலப்பை நம் உணவில் இருந்து  தவிர்க்கலாம். செலவும் மிக குறைவு.’’

    வீட்டிலேயே பன்னீர் செய்யும் முறையை பற்றிச் பார்க்கலாம்...

    ‘‘பால் -1 லிட்டர், எலுமிச்சைச்சாறு - 2 - 3 tbsp அல்லது தயிர் - 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பாலை நன்றாகக் கொதிக்க வையுங்கள். பால் கொதித்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு (அ) தயிர் ஏதேனும் ஒன்றை பாலில் கலந்து நன்றாகக் கிண்ட வேண்டும். அப்போது பால் திரிந்து கட்டி கட்டியாக வரும். அப்படி வந்ததும் அதனை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்போது மேலே துணியில் இருப்பது தான் பன்னீர்.

    தண்ணீர் நன்றாக வடிந்ததும், பன்னீரை இரண்டு தட்டுகளுக்கு இடையில் வைத்து,மேலே ஒரு கனமான பொருளை வைக்கவும்.1/2மணி நேரம் கழித்து பன்னீரை நன்றாக தண்ணீரில் கழுவிய பின் துண்டுகளாக்கி சமையலில் பயன்படுத்தவும்.
    Next Story
    ×