search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவில் உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் வரும்
    X

    உணவில் உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் வரும்

    உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். பல வழிகளில் உடலில் சேரும் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
    உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இது மிகப் பெரிய தப்பு. சமையல் உப்பு என்பது 40 சதவீதம் சோடியத்தாலும், 60 சதவீதம் குளோரைடாலும் ஆனது. நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது.

    நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும். ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும். உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத்துக்கு அதிக பங்கு உண்டு.

    ‘ரெனின்ஆஞ்சியோடென்சின் ஆல்டோஸ்டீரான் அமைப்பு‘ என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இதில் ரெனின், ஆஞ்சியோடென்சின் ஆகிய இரண்டும் உடலில் ரத்தக்குழாய்களை சுருங்கி விரியச்செய்கின்றன. இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும்.



    அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாக சுருங்கிவிடும். இப்படி சுருங்கிப் போன ரத்தக்குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலில் அதிகமானால், அதிலுள்ள சோடியமானது, ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்தக்குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும்போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்கு கொண்டுவந்துவிடும்.

    இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் பல வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவேதான் உப்பு அதிகம் சாப்பிட்டால் தப்பு. உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாகம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், சேவு போன்ற நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வதைப் போல், சோடியம் ரத்தஅழுத்தத்தை அதிகப்படுத்துகிறது என்றால் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. இதனால் இந்தச் சத்துகள் உள்ள உணவை அதிகப்படுத்திக்கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
    Next Story
    ×