search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணம்
    X

    அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணம்

    சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
    ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக்குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளில் தண்ணீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தை குடிக்கிறாரோ அப்போது அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

    நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.



    அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    இடுப்புப் பகுதியை சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை வெளியேற்றுகிறது. இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

    45 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சிறுநீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது.
    Next Story
    ×