search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு
    X

    உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

    இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது.

    மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் மூலம் பிராணவாயு மற்றும் உணவுச் சத்துக்களை செலுத்தி வருவது இதயமே. உடலின் எல்லா உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியமாகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இதயத்தின் செயல்பாடு சீராக இருக்க வேண்டும். இதயம் சீராக நடைபெற மற்ற உறுப்புகளைப் போலவே இதயத்திற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, செயற்கை குறைபாடு, சுருக்கம் போன்றவை இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக் குழாய் நோய் எனப்படுகிறது.

    இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் தடை ஏற்படும்போது அங்கு ரத்தம் தேங்குவதால் அங்கு ரத்தக்கட்டு உண்டாகி விடுகிறது. இந்த ரத்தக்கட்டு சிறு துணுக்காக பெரிய குழாயிலிருந்து சிறு குழாய்களுக்குள் செல்லும்போது அடைப்பை ஏற்படுத்தி அந்த ரத்தக்குழாய் போய் சேரும் இதய தசைக்கு ரத்தம் போய் சேராமல் தடுத்து விடுகிறது. இதனால் இயத்தின் அந்த பகுதி தசை செயலிழந்து விடுகிறது. இதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்படலாம். இதையே மாரடைப்பு என்கிறோம். இதய ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு மற்ற ரத்தக் குழாய்களிலும் கூட ஏற்படலாம். மூளைக்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளை செல்கள் செயலிழந்தால் அதை ஸ்ட்ரோக் என்கிறோம். இதே போல் கை, கால்களின் ரத்தக் குழாய்களிலும் கூட அடைப்பு ஏற்பட்டு உடலின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.

    எனவே ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்.?

    * புகை பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும். மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    * உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * நீரிழிவு இருப்பின் அதையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


    * உடல் பருமன் இருந்தால் தகுந்த உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சரி செய்ய வேண்டும்.

    * அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும், பிரச்சனை இருப்பின் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * சுறுசுறுப்பான உடலுழைப்பு மற்றும் செயல்பாடு இருந்தால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடைபெறும். வாரத்தில் 5 நாட்களாகவது துரிதமான உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவை மூலம் இதயத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி ரத்த ஓட்டத்தின் சிறு தடைகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும்.

    * இதயத்திற்கு இதமான உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். (1) ஒமேகா-3, ஒமேகா-6 போன்றவை நிறைந்த வஞ்சரம், காலா, வெளவால் போன்ற மீன் வகைகள் (2) சோயா, பீன்ஸ், முழு கடலை, வேர்கடலை போன்ற பயறு வகைகள் (3) பூண்டு (4) இஞ்சி (5) நல்லெண்ணெய் (மோனோ அன்சாச்சுரேட்டட்) போன்ற உணவுகளையும், பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதும் இதய ரத்தக்குழாய் மற்றும் உடலின் எல்லா உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

    * இவையெல்லாவற்றிற்கும் மேல் மனதின் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். மனதின் இயக்கத்திற்கு மூளைதான் காரணம் என்றாலும், உணர்வுகளின் பாதிப்பு இதயத்தில் தான் பிரதிபலிக்கிறது. எனவே, உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு நாம் இதயத்தை தொட்டு உணர்த்துகிறோம். எனவே பயம், அச்சம், கவலை, கோபம், பொறாமை போன்ற எதிர்மறையான உணர்வுகள் எல்லாமே இதயத்தை பாதிக்கக்கூடியவை. அன்பு, கருணை, மகிழ்ச்சி, பாசம், காதல், நகைச்சுவை போன்ற நேர்மறை உணர்வுகள் இதய ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கும்.
    Next Story
    ×