search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன.
    • சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்த பற்கள் முளைக்கும். இருப்பினும் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

    குழந்தைக்கு பல் வளரும் வயது:

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத்தொடங்குகின்றன.

    அறிகுறிகள்:

    * வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்.

    * திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.

    * எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.

    * பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்.

    * வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல்.

    * வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல்.

    பல் வளர்ச்சி உதவும் உணவுகள்:

    பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அந்தசமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.

    ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

    குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

    எப்படி பராமரிப்பது:

    இந்த பால் பற்கள் குழந்தைக்கு முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும், இதன் காரணமாக குழந்தைக்கு கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போட்டு கடிக்கும். அந்த நேரத்தில் குழந்தைக்கு கேரட், ஆப்பிள் போன்றவற்றை கொரிக்க கொடுக்கலாம்.

    பல் முளைக்கும் நேரத்தில் குழந்தையின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஈறுகளில் வலி ஏற்பட்டு வலியின் காரணமாக காய்ச்சல் கூட ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது மிகவும் நல்லதாகும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு மெல்லிய மஸ்லின் அல்லது மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் பற்களை சுத்தம் செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு வகைகளை கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதற்கு பதிலாக அதிகளவு காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, குழந்தையின் உடல் நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தையின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி, பெரியவர்களின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இவற்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் பற்களை பராமரிக்கவும்.

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • வளரிளம் பருவம் மிக முக்கியமானது.
    • இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    பள்ளியிலிருந்து உங்கள் குழந்தையின் ஆசிரியர், உங்கள் மகள் அல்லது மகனை பற்றி புகார் கூறும் நிலை பல பெற்றோர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். இவ்வளவு நாளாக நன்றாக இருந்த உங்கள் மகன் இப்பொழுதெல்லாம் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை.

    எப்பொழுதும் மற்ற பிள்ளைகளிடமே பேசிக்கொண்டிருக்கிறான். கண்டித்தால் உடனே அழுது விடுகிறானே தவிர மாறுவது இல்லை.

    அவன் நண்பர்களிடமும் அடிக்கடி சண்டை போடுகிறான், அடித்தும் விடுகிறான் என்று குறை கூறுவார்கள். இதை கேட்ட பெற்றோர்களுக்கு தன் மகன் ஏதோ பெரிய பிரச்சினையில் இருப்பதாக நினைத்து பயந்து போவார்கள். இது பயப்பட வேண்டிய ஒன்றில்லை. ஆனால் இந்த வளரிளம் பருவம் பற்றி புரிந்து கொண்டால் இந்த காலத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

    டீன் ஏஜ், அடலசன்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் தான் குழந்தையாக இருக்கின்ற நாம் பெரியவர்களாக மாறுகின்ற காலம். இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    அசட்டு துணிச்சல் இருக்கும், நாம் யார் என நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோம், கனவுகள் அதிகம் வளரும், கூடவே குழப்பங்களும் பயமுறுத்தும், நண்பர்களோடு பயணிக்க ஆசைப்படும், பொழுதுபோக்குகளில் கவனம் செல்லும், பெற்றோர்களின் ஆசிரியர்களின் அதிகப்படியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனம் மறுக்கும், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ரகசியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

    இந்த பருவத்தை பெரியவர்களாகிய நாம் கடந்து வந்தாலும், நம் வீட்டு குழந்தைகள் இப்பருவத்தை கடக்கும் போது அவர்கள் நிலையிலிருந்து பார்க்காமல், அவர்களிடம் கண்டிப்பாக நாம் நடந்து கொள்வது சரியா? மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர்கள் கூறுவது என் பையன் அல்லது என் பெண் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாள்.

    எதை சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள். தான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறாள். மரியாதை இல்லை என்பதுதான்.

    உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த வளரிளம் பருவத்தில் குழந்தைகள் தங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களிடம் தங்களின் மன அலை சூழலை அப்படியே வெளிப்படுத்துகின்றனர். அதாவது தங்களுக்கு உள்ள குழப்பம், உலகை அறிந்து கொள்வதில்

    இருக்கின்ற ஆர்வம், கோபம் எரிச்சல் போன்றவற்றை பெற்ற தாய் தந்தையர்களை தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்? எனவே புரிந்து கொள்ளுங்கள்.

    அதேபோல் இந்த வயதில் நண்பர்களே பிரதானமாக தெரிவார்கள். அவர்கள் சொல்வதெல்லாமே சரியென்று தோன்றும். தன் நண்பன் சொன்னதை கேட்டு உங்களிடம் சண்டை போடுவார்கள். இது எதனால் என்றால் தன்னை பற்றி மதிப்பிடாமல் தன்னை அந்த நண்பன் ஏற்றுக்கொள்வதால்தான்.

    மற்றவர் தன் மேல் கொள்ளும் மதிப்பீட்டை பற்றி அதிகம் கவலைப்படும் வயது இது என்பதால் தன்னைப் போலவே இருக்கும் தன் நண்பர்கள் கூறுவதும் செய்வதும் இவர்களுக்கு தேவ வாக்காக இருக்கும்.

    உங்கள் குழந்தைகள் மேற்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இயல்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறில்லாமல் மிக அமைதியாக இருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த குழந்தை தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அல்லது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயந்து அடக்கி கொண்டுஉங்களுக்கு ஏற்றது போல் நடிக்க வேண்டும்.

    குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடாது. இந்த வயதில் ஏற்படும் எந்த பழக்கமும் பொதுவாக தொடராது. பல மாதங்களாக எதிர்மறை நடத்தை இருந்தாலோ அல்லது அது தவறான விளைவுகளுக்கு வழிவகுத்தாலோ மட்டுமே அதை நாம் மாற்ற வேண்டும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சரியாக புரிந்து கொண்டால் எப்படி சண்டித்தனம் பண்ணும் குழந்தையையும் மிக இயல்பாக வழிக்கு கொண்டு வர முடியும்.

    • குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும்.
    • குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்திச் செல்வது அவர்களை சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்.

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாகக் கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடை முறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    சமூக வளர்ச்சி

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை களைப் பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைத்தான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மன வளர்ச்சி

    பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களைப் பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பிடூ

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

    நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச்சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது.
    • அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல.

    இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது. இது அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல. காது குத்துவதற்கு பின்னால் நிரூபிக்கப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளன.

    குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது. மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவும். அவ்வாறு காது குத்துவதற்கு முன்பு பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசிகள் முழுவதுமாக போட்ட பிறகுதான் காதுகுத்த வேண்டும். எனவே 1 முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு காது குத்துவது சரியானது. அதிக எடை கொண்ட காதணிகளைக் காட்டிலும், மெல்லிய, லேசான காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

    காது குத்துவதற்கு முன்பு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது காதுகளில் துளையிட வேண்டாம். காது குத்தும்போது. குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப குழந்தைக்கு பிடித்த பொம்மைகளைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லவும். காது குத்துவதற்கு முன்னர் துளையிடும் இடத்தை ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் தோல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    இதன்மூலம் கிருமித்தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொண்டு துளையிடுவது நல்லது, துளையிட பயன்படுத்தும் ஊசி அல்லது எந்திரத்தின் சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே காதில் துளையிட வேண்டும்.

    காது குத்திய உடன் தங்கம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி காதணிகளை அணிவிப்பது நல்லது.

    இந்த வகை உலோகங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தங்கம் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட, நிக்கல் கலக்காத உலோக காதணிகளை அணிவிக்கலாம். தொங்கும் வகையிலான காதணிகளை அணிவிப்பதைவிட, காதோடு ஒட்டி இருக்கும்படியான காதணிகளை அணிவித்தால் குழந்தைகள் இலகுவாக உணருவார்கள்.

    இறுக்கமான காதணிகள் அணிவிப் பதையும் தவிர்க்க வேண்டும். காது குத்திய பின்பு ஒருசில நாட்கள் வரை, துளையிட்ட பகுதி சிவந்து காணப்படும். துளையிடப்பட்ட இடத்தில் இருந்து சீழ் அல்லது திரவம் வெளியேறினால். தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாக சிறிய கொப்புளங்கள் அல்லது துளையிடப்பட்ட பகுதிக்கு அருகில் பெரிய கொப்புளம் ஏற்படும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதன் மூலமும் தொற்று வெளிப்படும். காது குத்தப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும். அவ்வாறு காய்ச்சலோ, நோய்த்தொற்றோ இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

    காது குத்திய பிறகு துளையிட்ட பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமிநாசினியைப் பூசவும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ள சோப்பு கொண்டு காதுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் கழுவவும். காயம் குணமாகும் வரை குழந்தைகளுக்கு பொத்தான்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்துங்கள். இதனால் ஆடையை தலைக்கு மேல் இழுக்காமல் கழற்ற முடியும். ஆடை காதுகளில் பட்டு குழந்தைக்கு வலி உண்டாவதை தடுக்கவும் முடியும்.

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
    • குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.

    பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.

    மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.

    குளிர்கால தொற்றுகள்

    குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.

    ஜலதோஷம்

    குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சுவாசக்குழாய் தொற்று

    குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.

    நோரோ வைரஸ்

    இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    • குழந்தைகள் செய்யும் சேட்டைகளை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம்.
    • குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது நம்முடைய உளவியல், நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்வேறு உளவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனம், சிரிப்பு, அழுகை என அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நம்மை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம். இந்த ரசனையே நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இது புதிதாக ஒரு இடத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது நமக்கு கிடைக்கும் அனுபவத்துக்கு இணையாக இருக்கும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும். இது நீடித்த இனிமையான நினைவுகளை உருவாக்கும்.

    * பொறுமை, நன்றி உணர்வு, மகிழ்ச்சி என குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது நமக்குள் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

    * குழந்தைகளுடன் விளையாடும்போது நம்முடைய பொறுப்புகளையும், கவலைகளையும் பற்றி சிந்திப்பதை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

    * குழந்தைகளிடம் பழகுவதற்கு பொறுமை அவசியமானது. தொடர்ந்து அவர்களிடம் பழகும்போது. காலப்போக்கில் நமக்குள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை தானாகவே உருவாகி விடும்.

    * குழந்தைகளின் உலகம் பெரும்பாலும் கற்பனை விளையாட்டு அல்லது புதிய படைப்புகளையே உள்ளடக்கி இருக்கும். அவர்களுடன் பழகுவது உங்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    * குழந்தைகளுடன் தொடர்புகொள்வது, நம் முடைய தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்தும். அதன்மூலம் மற்றவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கவும். மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்கவும் முடியும்.

    * குழந்தைகளுடன் பழகி அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளை புரிந்துகொள்வது, உங்களுடைய இரக்க குணத்தை மேம்படுத்தும்.

    * படம் வரைவது. இசைக்கருவிகளை வாசிப்பது. விளையாடுவது என குழந்தைகளுடன் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது நமக்கான புதிய பொழுதுபோக்கை கண்டறியவும், நம்முடைய பழைய திறன்களையும், ஆர்வத்தையும் புதுப்பிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கான தேவைகள் மற்றும் அவர் கள் எதிர்கொள்ளும் சவால்களை கையாள்வதன் மூலம். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றி யோசித்து தீர்வு காணும் திறன் உருவாகும்.

    * வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டுவதன் மூலம். நம்முடைய தலைமைத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    * தற்போதைய தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதில் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களை விட சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

    * குழந்தைகள் இந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். அவர்களுடன் பழகும்போது நமக்கும் அனைத்து விஷயங்களையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகக்கூடிய திறன் உண்டாகும்

    • பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும்.
    • பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது.

    பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. தந்தை மீது எப்போதுமே பெண் குழந்தைகள் அதிக பாசத்தை காண்பிப்பார்கள். பெண் குழந்தைகள் தந்தையின் ஆயுள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போலந்தில் உள்ள ஜெகில்லோனியன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலத்தில் சுமார் 74 வாரங்கள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அந்த வீட்டு தந்தையின் ஆயுளும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.

    இதற்கு எதிர்மாறாக தாயின் ஆயுட்காலம் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் மகன் அல்லது மகள், அல்லது இருவரும் இருந்தால் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறார்கள். அவரது ஆயுளையும் குறைக்கிறார்கள். சராசரியாக தாயின் ஆயுட்காலம் 95 வாரங்கள் குறையும் என்கிறது அந்த ஆய்வு.

    • உங்கள் குழந்தைக்கு டயப்பர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.
    • குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    தாய்மை என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஒரு குழந்தை வளரும் போது, அந்த வளர்ச்சி ஆரோக்கியமாகவும், சிறந்ததாகவும் அமைய பெற்றோருக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் பெரும் பங்கு உண்டு. அந்த முயற்சியின் போது வீடுகளை தயார்படுத்துவது முதல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது வரை தங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், அன்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

    பல பெற்றோர்கள், குறிப்பாக முதல் முறையாக தாய்மை அடைபவர்களுக்கு இந்த பதிவு வழிகாட்டுதலாக இருக்கும். பெற்றோர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதை கையாள பெற்றோருக்கு உதவும் நோக்கில் சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் சிறந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன் கூறியதாவது:

    பிறந்த குழந்தை பராமரிப்புக்கான 7 நிபுணர் குறிப்புகள்:

    குழந்தையை கையில் தூக்கும் போது: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம், தங்கள் குழந்தையை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகள் மொத்த உடல் நீளத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு தலையுடன் பிறக்கின்றன. இதன் விளைவாக, அவர்களின் ஈர்ப்பு மையம், வயது, உடல் வடிவம் மற்றும் உட்காரும் தோரணைக்கு ஏற்ப மாறுகிறது.

    எனவே, புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கிச் செல்லும்போது, தலை மற்றும் கழுத்தைத் தாங்கிப்பிடிக்க மறக்காதீர்கள். வேடிக்கைக்காக கூட கை, கால் மற்றும் இதர உடல் உறுப்புகளை அசைப்பது அல்லது ஜிக்கிங் செய்யாதீர்கள். இது உங்கள் முதல் குழந்தையாக இருந்தாலும் அல்லது ஐந்தாவது குழந்தையாக இருந்தாலும் சரி, பிரசவத்திற்குப் பிறகு புதிதாகப் பிறந்த குழந்தையை கையாளும் போது பார்த்து கையாள வேண்டும்.

    பிணைப்பு நேரம்: உங்கள் குழந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பது மகிழ்ச்சியானது. பெரும்பாலான பெற்றோருக்கு இது இயற்கையாகவே வந்தாலும், உங்கள் குழந்தையை கட்டிப்பிடிப்பது, மெதுவாகப் பேசுவது அல்லது உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வது போன்ற எளிய செயல்களைச் செய்வது, பிணைப்புக்கான சில அற்புதமான வழிகள். இது உங்கள் குழந்தை அழுதாலோ அல்லது அசௌகரியமாக இருக்கும் போது அவைகளைத் தீர்த்து வைக்க இவை உதவும்.

    சௌகரியமான உடை: உங்கள் குழந்தைக்கு மென்மையான துணிகளில் வசதியாக இருக்கும் படி உடுத்துங்கள். உங்கள் குழந்தை இருக்கும் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப உடல் வெப்பநிலையை கொடுக்க முடியாது. எனவே குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    டயப்பரிங் சரியாக செய்யுங்கள்: டயப்பரிங் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். உங்கள் செலவினங்களை பொறுத்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்யலாம். எப்படியிருந்தாலும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரிய குழந்தைகளை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் மற்றும் மலம் கழிக்கும் என்பதால், நீங்கள் அடிக்கடி டயப்பர்களை மாற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழுக்கடைந்த டயப்பரை நீண்ட நேரம் அணிய அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது இதர பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தைக்கு டயபர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும். புதிதாகப் பிறந்த குழந்தை தினமும் குளிக்க தேவையில்லை. உங்கள் குழந்தை நடமாடும் வரை, வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை குளிக்க வைத்தால் போதும்.

    தொப்புள் கொடி ஸ்டம்ப் பராமரிப்பு: உங்கள் குழந்தைக்கு தொப்புள் கொடி ஸ்டம்ப் இருக்கும், அது 10 நாட்கள் முதல் மூன்று வாரங்களில் காய்ந்து விழும். இதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியின் ஸ்டம்ப் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையை குளிப்பாட்டிய பின், ஸ்டம்பைச் சுற்றியுள்ள பகுதி மென்மையான பஞ்சு போன்ற பொருட்களால் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். உங்கள் குழந்தையின் டயப்பரை எப்போதும் தொப்புளுக்குக் கீழே கட்டி, அந்தப் பகுதி வறண்டு இருப்பதை உறுதிசெய்யவும். எந்த நேரத்திலும் தொப்புள் கொடியை சுற்றி சீழ் அல்லது இரத்தம் காணப்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தையை சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள், ஏனெனில் அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    ஆரோக்கியமான தூக்கம்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் 16 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவார்கள் , ஒவ்வொரு தூக்க சுழற்சியும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். உங்கள் குழந்தையை தூங்க வைக்கும் போது பின்புறமாக திருப்பி படுக்க வையுங்கள். நீங்கள் தொட்டிலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குழந்தையை உள்ளே வைக்கும் போது நனையாத உறுதியான மெத்தையைத் தேர்ந்தெடுக்கவும். குழந்தை தூங்கும் தொட்டிலின் உள்ளே தளர்வான போர்வைகள், தலையணைகள், தொட்டில் பம்பர்கள் அல்லது மென்மையான பொம்மைகளை வைக்காமல் இருப்பது நல்லது.

    காய்ச்சல் மேலாண்மை: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குகாய்ச்சல் இருந்தால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். வயதான குழந்தைகளைப் போலல்லாமல், இரண்டு மாதங்களுக்கும் குறைவான புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 100.4 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் இருந்தால், உடனடியாக ஒரு குழந்தை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ஆரோக்கியமான பொறுப்பு. அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எப்போதும் பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் பேசலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் சிறந்த நடவடிக்கையைக் கண்டறிய மருத்துவரை தொடர்புகொள்ளலாம். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

    அடுத்தது என்ன?

    புதிதாகப் பிறந்த குழந்தையைக் கையாள்வது சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.உங்கள் பெற்றோருக்குரிய திறமைகளை நீங்கள் மெருகூட்டும்போது, உங்கள் குழந்தையும் வளரும், நீங்கள் நினைத்ததை விட வேகமாக குழந்தைப் பருவத்திற்கு நகரும்!

    பார்வதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சென்னையில் அவசர மருத்துவ தேவைகளுக்கு +91 98412 98412 அல்லது 044 2238 2248 / +91 98848 99091 என்ற எண்ணில் குழந்தை நல மருத்துவரிடம் பேச முன்பதிவு செய்யலாம்.

    - டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன், பார்வதி மருத்துவமனை 

    ×