search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பள்ளிக்கல்வியும் அரசுப் பள்ளியும்...
    X

    பள்ளிக்கல்வியும் அரசுப் பள்ளியும்...

    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது.
    2019-ம் ஆண்டின் சுட்டெரிக்கும் கோடை மெதுவாக விலக ஆரம்பிக்க, புதுக் கல்வியாண்டும் நெருங்கிவிட்டது. பல ஆயிரம் பெற்றோர்கள் தம் அரும்புக் குழந்தைகளின் கைப்பிடித்து கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மிரட்சி கலந்து அவரவர்கள் வசதிக்கேற்ப கூட்டிச் செல்வதும் நம் கண்ணில் விரிகிறது. அந்தக் காட்சிகளில் தம் குழந்தைகள் மேல் அவர்கள் ஏற்றிய கனவுகளும் தெரிகின்றன. அந்தக் கனவுகளின் பாதை அவர்களை இட்டுச் செல்வது அவர்களின் இன்றைய கனவுப் பள்ளிகள்.

    உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.

    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.

    சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.

    நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.

    அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.

    நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.

    இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.

    நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,

    இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.

    ‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்’

    என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.

    அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.

    “நானோவை” சாலையில் ஓட்டும்போது தன்னைத்தானே ஏழை என்று பறைசாற்றுவதாய் இருக்கும் எனவே அந்தக் காரை ஒதுக்கினார்களாம். இதை மனதில் வைத்து மேலே படியுங்கள், போன தலைமுறைப் பெற்றோர்களுக்கு, அதிகமான குழந்தைகள் இருந்தன. அப்போதைய கல்வி வளாகங்களுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கவில்லை. எனவே தமது குழந்தைகளை வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் இப்போது, வர்த்தக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட போட்டிகள் விளையாட்டு மைதானங்களைத் தாண்டி வகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்தன.



    பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.

    இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.

    அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.

    இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.

    எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
    Next Story
    ×