search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிள்ளைகளின் கோடை விடுமுறை குதூகலம்
    X

    பிள்ளைகளின் கோடை விடுமுறை குதூகலம்

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.

    இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

    மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    Next Story
    ×