search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கவலை அளிக்கும் இந்திய கல்வி முறை
    X

    கவலை அளிக்கும் இந்திய கல்வி முறை

    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்.
    இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதுபற்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி முறை பற்றி விரிவாக கூறியிருக்கிறது.

    இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

    ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.

    இதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும், 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.

    மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

    இந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.

    முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.
    Next Story
    ×