search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொதுத்தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது
    X

    பொதுத்தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது

    தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம்.
    தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். அப்படி அவசியமற்ற பயம் வரவேண்டாம் என்றால் தேர்வுக்கு தெளிவாக திட்டமிட்டு படித்தாலே போதுமானது. ஏறத்தாழ பாடத்திட்டங்கள் நிறைவு பெற்று முழுஆண்டுத் தேர்வுக்கு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம். அதற்கான சில அடிப்படை விஷயங்கள் இங்கே...

    தேவை புதிய அட்டவணை

    அரையாண்டு விடுமுறை மற்றும் நீண்ட பொங்கல் விடுமுறை இடைவேளை உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது. பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான நேர ஒதுக்கீடு செய்து படிப்பது, எழுதிப் பார்ப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற கை கைகொடுக்கும்.

    அதற்கான திட்டமிடலுக்கு சரியான புரிதல் அவசியம். முதலில் எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மன இறுக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். படிப்புக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே போதிய இடைவேளை மற்றும் மன இறுக்கம் போக்கும் பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய தேர்வு அட்டவணையை தயார் செய்யுங்கள்.

    அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி திருப்புதல் செய்யுங்கள். இன்று முதல் தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.

    தேர்வுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். இறுதி வாரத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மற்ற வாரங்களுக்குள் படித்து முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும். தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.

    படிப்பின்போது...

    அட்டவணையின்படி படித்து முடிப்பதை வழக்கமாக்குங்கள். உங்கள் அட்டவணையை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் உதவியுடன் தினசரி பயிற்சிகளில் கேள்வி கேட்பது அல்லது எழுதிக்காட்டுவது என பயிற்சி மேற்கொள்ளலாம்.

    சகதோழிகள், மாணவர்களை சேர்த்துக் கொண்டும் குழுவாக படித்து பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். பாடங்களை மற்றவர்களிடம் ஒப்புவிப்பது தவறுகளை தவிர்க்கவும், நினைவில் நிறுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும். எழுதிப்பார்க்க அதிக நேரம் கிடைக்காவிட்டால் இப்படிச் செய்வது சிறந்தது.

    பள்ளியிலும், டியூசன்களிலும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை மகிழ்ச்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொள்ளுங்கள். வீட்டிலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளில் சுய தேர்வு எழுதி பரிசோதனை செய்யுங்கள்.

    புதிய பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களை படிக்க அதிகாலை நேரத்தை ஒதுக்குங்கள். போதிய ஓய்வுக்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் காலைப்பொழுதில் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.

    படிக்கும் இடத்தில் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தை படிக்க தேர்வு செய்யுங்கள்.

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்களை இடைவேளைவிடுங்கள். 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்கி நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நகைச்சுவை துணுக்குகளை ரசிப்பது என மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயற்கை காட்சிகளைப் பார்த்தும், கண்களை மூடி தியானித்தும் கண்களுக்கு பயிற்சியளித்துக் கொள்ளுங்கள்.

    பொழுதுபோக்கு மற்றும் இடைவேளை நேரத்தில் படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.

    தினசரி முடித்த பாடங்களை அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.

    இறுதியாக ஒதுக்கி வைத்த வாரத்தில் முந்தைய தேர்வு வினாத் தாள்களுக்கு விடையளிக்கலாம்.



    சராசரி மாணவர்கள்

    சராசரியாக படிக்கும் மாணவர்கள், பாடங்கள் நிறைய சேர்ந்துவிட்டதை எண்ணி பதற்றப்பட வேண்டாம். அப்படி படபடப்புடன் படிப்பது ஏற்கனவே படித்த பாடங்களைக்கூட மறக்க வைத்துவிடும். அதுபோன்றவர்கள் முக்கியமான பாடங்களை மட்டும் படிக்க முயற்சியுங்கள். இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்கு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

    ஆசிரியர், பெற்றோர் உதவியை நாடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் எளிதாக மதிப்பெண் பெறும் முறைகளை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

    தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று விடுமுறை நாட்களையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள இடைவேளை நாட்களில் படித்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பயம் தொற்றுவதை தவிர்க்க முடியாது. மனச்சோர்வும் மிகுந்துவிடும்.

    பாடங்களை படிப்பதுடன் நில்லாமல் எழுதிப் பார்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். படங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள், கிராப் வரைபடங்கள், மேப், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவை எளிதாக மதிப்பெண்கள் பெற உதவும் என்பதால் அவற்றை சரியாக பயிற்சி செய்வது அவசியம்.

    உடல் நலன்

    தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் முக்கியம். தொடர்ந்து படிப்பது மற்றும் பயத்துடன் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், ஆற்றல் இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    நிறைய நேரம் படித்தும் மனதில் எதுவும் நிற்காவிட்டால் சிந்தனை சிதறல் இருப்பதாக அறியலாம். மனதை பக்குப்படுத்தும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படிக்க ஆரம்பித்தால் இந்த பிரச்சினைகளைப் போக்கலாம்.

    மூச்சுப்பயிற்சியானது மூளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இது மனச்சோர்வின்றி படிக்க துணை செய்யும்.

    நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே படிப்பதும் சிந்தனையை மழுங்கடிக்கும். காரம், புளிப்பு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்கும்.

    காலை உணவை தவிர்க்கக்கூடாது. பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள்.

    நீண்ட நேரம் படிப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்விழித்துப் படித்தால் கண்கள் சிவந்துவிடுவது, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். எனவே குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.

    செய்யக்கூடாதவை...


    உணவுப் பழக்கத்தில் செய்யக்கூடாதவற்றை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.

    தேர்வு நேரத்தில் வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். காயம் மற்றும் விபத்து நேரும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பைக்குகளை ஸ்டைலாக ஓட்டுவது, கிணற்றில் டைவ் அடித்து குளிப்பது, பஸ்கள், ரெயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்றவை கூடாது. கடினமான வேலைகள், கூர்மையான ஆயுதங்கள், நெருப்பை பயன்படுத்தி செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் படிப்பை பாதிக்கும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை எதிர்கொள்ள விடாமலும் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.

    அதிகமாக டி.வி. மற்றும் செல்போனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
    Next Story
    ×