search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் தனியறையில் படுப்பது மன வளர்ச்சிக்கு நல்லதா?
    X

    குழந்தைகள் தனியறையில் படுப்பது மன வளர்ச்சிக்கு நல்லதா?

    குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.
    இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா… குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் தனியறையில் இருப்பது கெட்டது என்றோ, பெற்றோருடன் சேர்ந்திருப்பது நல்லது என்றோ எதுவும் கிடையாது. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து இதை இரண்டுவிதங்களாகப் பார்க்கலாம். குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள். இது அந்தந்தக் குடும்பத்தின் சூழ்நிலை சார்ந்த அணுகுமுறை.

    குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்னை. குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பிலிருக்க வேண்டும். 



    தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள் அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும்,  `கம்போர்ட் ஸோன்’ (Comfort Zone) ஆகவும் இருக்க வேண்டும்.

    இப்படியாக அவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால், தன் பெற்றோர் சார்ந்த நல்ல நினைவுகள் குழந்தைகளை நல்லமுறையில் வழிநடத்தும்.
    பதின்பருவக் குழந்தைகளுக்கு காலையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு குறித்த பயம், குழப்பம், சந்தேகம், நிம்மதியற்ற உறக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிலும் தனியாகத் தூங்கும்போது இந்த உணர்வுகள் அவர்களை அதிகமாக அலைக்கழிக்கும் சூழல்கூட ஏற்படலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அதைக் கண்டு பெற்றோர் பதற்றப்படத் தேவையில்லை. குழந்தை தன்  பிரச்னை குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.

    ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான் இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் சறுக்கத்தான் செய்வார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
    Next Story
    ×