search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாற வேண்டியது பெற்றோரா? குழந்தைகளா?
    X

    மாற வேண்டியது பெற்றோரா? குழந்தைகளா?

    குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.
    ஆம்பூரில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் சிறுமி ஹனீபாஜாரா போலீஸ் நிலையத்தில் தன் தந்தை மீதே ஒரு விசித்திர புகார் கொடுத்தார். அதில், தன் வீட்டில் கழிவறை கட்டக்கோரி தந்தையிடம் கேட்டதாகவும் அதற்கு படிப்பில் முதலிடம் எடுத்தால் கழிவறை கட்டி தருவதாக அவர் உறுதி அளித்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக படிப்பில் முதலிடம் பெற்ற பின்னரும் கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் அந்த சிறுமி வீட்டில் தனி நபர் கழிப்பறை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்.ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் அச்சிறுமியை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக நியமித்து உத்தரவிட்டார்.

    சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி என் மனதை வருடியது. பயணம் செய்யும் தாயும், அவருடைய ஆறு வயது குழந்தையும் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர். உடன் பயணிப்பவர்களுக்கு ஆச்சரியம். ‘என் குழந்தை எத்தனை அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை. கைபேசியில் விளையாடத்தான் விரும்புகிறது.

    உங்கள் குழந்தை எப்படி அமைதியாக படிக்கிறது? நீங்கள் என்ன சொல்லி குழந்தைக்கு புரிய வைத்தீர்கள்?’ என்று ஒருவர் அந்ததாயிடம் கேட்டார். அதற்கு அந்த தாய் ‘குழந்தைகள் நாம் சொன்னால் கேட்பதில்லை. அவை நம்மைப் பார்த்துதான் கற்றுக்கொள்கின்றன’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் நிறைய கற்றுக்கொள்கின்றன என்பது தான் உண்மை. கடந்த வருடம் தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் தந்தை. ஆனால் மகன் அவருடன் செல்ல மறுத்து அழுகிறான்.

    என்னவென்று கேட்டபோது ‘நீ ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறாய். அதனால் உன்னுடன் வர மாட்டேன்’ என்கிறான் மகன். தந்தை தன் தவறை உணர்ந்து ஹெல்மெட் அணிந்து அவனை அழைத்துக் செல்கிறார். ஒரு குழந்தை காயம் பட்ட சமயத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழுதால் ஏதோ ஒரு காரணத்துக்காக அது போராடுகிறது என்று பொருள். இந்தக் குழந்தை போராடி தன் தந்தை செய்கின்ற தவறை எடுத்துச் சொல்லி அவரை திருத்துகிறதா?

    “பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாகனம் ஓட்டும் பெற்றோர் ஒரு மாதத்தில் எத்தனை முறை சாலை விதிகளை மீறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ஒவ்வொரு மாணவரும் மாதாந்திர அறிக்கை தரவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அப்பெற்றோருக்கு தம் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்போகிறது” என்று என் நண்பர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். பிள்ளைகள் பெற்றோரைத் திருத்தப்போகிறார்களா?

    பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்குச் செல்வது, சாதிச் சண்டைகளில் ஈடுபடுவது, பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கற்பழிப்பு போன்ற கொடிய பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பள்ளிக்கு விடுமுறை வேண்டி சக மாணவனைக் கொலை செய்வது, குண்டு வைத்துள்ளதாக பள்ளி நிர்வாகத்தை மிரட்டி விடுமுறை விடச் செய்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, அடிப்பது, தற்கொலை மிரட்டல் விடுவது மற்றும் தேர்வு எழுதுவதில் தில்லு முல்லுகள் செய்வது போன்ற நிகழ்வுகள் இந்நாட்களில் கூடிக்கொண்டே இருக்கின்றன.



    பற்றாக்குறைக்கு தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் குடும்பத்தின் சிந்தனையை சீக்கு பிடிக்க வைக்கின்றன. குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது. எனவே யார் இப்போது திருந்த வேண்டும். குழந்தைகளா? பெற்றோரா? யார் யாரைத் திருத்துவது?

    இந்த செய்திகள் எனக்கு பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்தது. இன்றைய தலைமுறையை திருத்த வேண்டுமானால் முதலில் நேற்றைய தலைமுறையைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இச்சமூகம் உள்ளது. நாம் உருவாக்கும் ஆட்சியாளர்கள் சமூகத்துக்கு வேண்டிய மாற்றங்களை நிகழ்த்தாத நிலையில் மக்களேதான் அந்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

    இத்தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தோற்றுப் போனால் அதைச் செயல்படுத்தும் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் தான்கல்வி வியாபாரமாகாத காலத்தில் அரசுப் பள்ளிகள் அதிகமில்லா விட்டாலும் ஒவ்வொரு பள்ளியிலும் நிரம்பி வழிந்தன. “வாத்தியாரைய்யா எம் பையனுக்கு பாடம் சொல்லிக் குடுங்கய்யா அடங்க மாட்டேன்கிறான். தலையைத் தவிர்த்து உடம்பெல்லாம் எங்கு வேண்டுமானாலும் அடிச்சி சொல்லி கொடுங்கய்யா” என்று தம் மகனை ஆசிரியர்களிடம் ஒப்பவித்தவர்கள் அதிகம்.

    அன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். ஆனால் இக்கால ஆசிரியர்கள் சமூகத்தையே மாற்றக் கூடிய மனிதத்தை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இது மிக கடினமான ஒன்று அன்றைய பெற்றோர் சமூகம் மனிதத்தை வளத்தெடுக்க உதவியது.

    இன்றைய பெற்றோர் சமூகம் தங்களை அறியாமலேயே மனிதத்துக்கு எதிராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் தலைவர்கள் வளர்த்தெடுக்கும் சமுதாயத்தில் ஒவ்வொரு தலைமுறையும் கூடுதலான சுயநலம் கொண்டதாகவே வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது.

    தம் பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்ற தம் கனவை நனவாக்கவே வளர்ந்து கொண்டிருக்கும் நியூகிளியர் குடும்பங்கள் அதிபெரும்பான்மையாக உள்ள சமூகம் இது. சட்டங்களின் குறைபாடுகளை நன்கு அறிந்த சமூகம் எளிதில் திருத்த இயலாத சமூகம். இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியே உள்ளது.

    யார் சொன்னாலும் இவர்கள் மாறப்போவதில்லை. ஆனால் லஞ்சம் வாங்கும் தந்தையிடம் “நீ லஞ்சம் வாங்கிய பணத்தில் என்னைப் படிக்க வைத்தால் நான் படிக்கமாட்டேன் உடுத்தமாட்டேன். உண்ணமாட்டேன்” என்று மகனோ, மகளோ புரட்சி செய்தால் நிச்சயம் தந்தை திருந்துவார். ஆசிரியர் சமூகம் முயற்சி செய்தால் குழந்தைகள் மூலமே தற்போதைய தலைமுறையை மாற்ற முடியும்.

    மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்.,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    Next Story
    ×