search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...
    X

    குழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...

    கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
    இன்று (அக்டோபர் 15-ந்தேதி) உலக கைகழுவும் தினம்.

    கை கழுவி விட்டேன் உணர்ச்சியின் வேகத்தில் உறவுகளிலும் நட்புகளிலும் சொல்லப்படுகினற வாக்கியமிது..பலவேளைகளில் சொல்லிவிட்ட பிறகு பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. இப்படித்தான் நாம் கைகழுவும் வழக்கத்தைக் கைவிட்டதால் பல வியாதிகளுக்கு ஆளாகிறோம். உலகின் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமின்மையால் தான் பரவுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் இத்தகைய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். எனவே, வருங்கால சந்ததி ஆரோக்கியமானதாக திகழ குழந்தைகள் சோப் மூலம் கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

    இரு கரங்களையும் சேர்த்து குவித்து வணங்குவது தான் தமிழ்ப்பண்பாடு.மாறாக ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி வணக்கம் சொல்வது இன்று நடைமுறை வழக்கமாகி விட்டது.கைகளால் இரு சக்கர வாகனங்களை ,எந்திரங்களை பயன்படுத்தும் போது நம் கைகளில் தூசிகள் படர்ந்து அதன்மூலம் கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகவே கைகளை நன்றாக கழுவவேண்டும். கை கழுவுவது என்பது கைகளை தண்ணீரில் நனைப்பது இல்லை.

    அவ்வாறு செய்வதால் கைகளில் உள்ள நோய் கிருமிகள் அழியாது. சோப்பு போட்டு முறையாக கழுவதன் மூலமே கிருமிகளைக் கொல்ல முடியும். கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இது தவிர டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்று பூச்சிகள், பன்றி காய்ச்சல், எபோலா, தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் அவர்களை நெருங்குவதில்லை. நோய்த் தொற்று, சுத்தமில்லாத கையில் ஒரு கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    நம் கைகளில் ஒட்டியுள்ள கிருமிகள்,நாம் உண்ணும் உணவுடன் நம் வயிற்றுக்கு சென்று நமக்கே வியாதிகளை உண்டாக்குகின்றன. நாம் மட்டும் கைகழுவினால் மட்டும் போதாது. விட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், சமைப்பவர்கள் அனைவரும் முறையாக கையைக் கழுவ வேண்டும். இன்றைய நாகரிக மோகத்தில் திசு பேப்பரால் கையை சாப்பிட்டப் பின்னும்,மலம்கழித்தபிறகும் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டுவருகிறது..



    சில திருமண வீடுகளில் உணவுகளை கையால் பரிமாறுகிறார்கள்.சுத்தமற்ற கையினால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகின்றன. இதைப்போல சாலை ஒரக்கடைகளிலும், துரித உணவு விடுதிகளிலும் கைகளால் உணவுகளை எடுத்துப்போட்டு சமைக்கிறார்கள்.வியர்வையை கைகளால் துடைத்து அந்த கையால் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வரும்.

    கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை வீட்டு வேலை செய்பவர்களிடமும்,ஆயாவிடமும் விட்டுசெல்கின்றனர். இவர்களுக்கு சோப்பு வாங்கி கொடுத்து குழந்தையை தூக்கும்போதும், உணவு ஊட்டும் போதும் கைகளை கழுவ சொல்லவேண்டும். மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்துவிட்டு வந்தபின்பு அவசியம் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

    ஏனென்றால் மருத்துவமனை சார்ந்த கிருமி தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். குழந்தைகளுக்கு கைகளை சோப்புகள் போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துவதின் மூலம் தொற்று நோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். கைகழுவும்போது விரல்களின் இடுக்குகளில் சோப்புப் போட்டு இரண்டு கைகளாலும் தேய்க்க வேண்டும்.

    வெளியில் சென்று விட்டு வரும் போது கைகளையும் கால்களையும் நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி.ஆகவே குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்கவேண்டும் இதற்கு தேவை மக்களிடையே விழிப்புணர்வு.கைகளை சுத்தமாக கழுவுவதால் ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள், பள்ளி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக விளங்குகின்றனர். கைகளைக்கழுவுவோம்,கவனத்துடன் உடல் நலம் காப்போம்.

    மருத்துவர்.நா.மோகன்தாஸ்,

    முன்னாள் தலைவர்,

    இந்திய மருத்துவ சங்கம், தமிழக கிளை
    Next Story
    ×