search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை அட்மிஷன் சேர்க்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...
    X

    குழந்தைகளை அட்மிஷன் சேர்க்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...

    சிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது.
    மாணவர்களும், பெற்றோரும் அட்மிஷனை எதிர்பார்த்து காத்திருக்கும் காலமிது. சமீப காலமாக ‘அட்மிஷன்’ என்ற வார்த்தை அனைவரது காதுகளிலும் அதிகமாக விழுந்து கொண்டிருக்கும். சிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது. அதில் தவறு இல்லை. ஆனால் எந்த ஒரு நிறுவனத்திலும் அட்மிஷன் போடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய சில இருக்கின்றன. அவை பற்றி இங்கே...

    அப்ளிகேசனை பூர்த்தி செய்து அனுப்பு முன்பு, அப்ளிகேசனை நன்றாக படித்து அறியுங்கள். அதற்கு முன்பாக அந்த பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தின் விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    ‘எல்லாம் தெரிந்து கொளண்டுதானே அப்ளிகேசன் போட ஆசைப்படுகிறோம்’ என்று அவசரப்பட வேண்டாம். பள்ளி கல்லூரியின் குறை நிறைகள், தேர்ந்தெடுக்கும் கல்வியின் எதிர்காலம், அதை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதி எல்லாவற்றையும் யோசித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அவர்கள் பல கேள்விகளைக் கேட்பதைப்போல நீங்களும் உங்களுக்குள்ளாகவே பல கேள்விகளை கேட்டுக் கொள்வது நலம். அக்கம் பக்கத்திலும், நிர்வாகத்தினரிடமும் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

    குழந்தைக்கு பள்ளி - கல்லூரி ‘செட்’ ஆகுமா? என்று யோசிப்பதைப் போலவே உங்கள் சூழலுக்கும் அது உகந்ததா? என்பதை யோசியுங்கள். உங்கள் வேலை, மனைவியின் வேலை, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிலை, கல்வி நிர்வாகத்தினரின் கெடுபிடிகள் எல்லாவற்றுக்கும் சூழல் ஒத்துழைக்குமா? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    கல்வி வளாகத்தை நேரில் சென்று பார்வையிடுங்கள். விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அப்படியே நம்பிவிடாதீர்கள். கல்வி நிறுவன வளாகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கிறதா? பாதுகாப்பு இருக்கிறதா? கட்டமைப்புகள் போதுமானதாக இருக்கிறதா? என்பதை நோட்டமிடுங்கள். அவற்றை அறிந்து கொள்வதை விரும்பாத அமைப்புகளில் உங்கள் குழந்தைகளை சேர வேண்டுமா? என்பதை யோசியுங்கள்.

    ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும்போதே, அதை முடிக்கும் வரையிலான பொருளாதார திட்டமிடலையும் வகுத்துவிடுங்கள். இந்த ஆண்டு சேர்த்துவிட்டு, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற மேம்போக்கான திட்டமிடலால் தத்தளிப்பவர்கள் ஏராளம். ‘எப்படியும் கடன்வாங்கித்தானே சமாளிக்கப் போகிறோம்’ என்று சாதாரணமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். நகை, சீட்டு எல்லாம் எதிர்பாராத சிரமங்களை எதிர்கொள்வதற்கு பயன்படும் உபாயங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்ற வருவாய், சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக்கான பொருளாதாரத்தை திட்டமிடுங்கள்.

    பொருளாதார வசதிக்கேற்ப திட்டமிடல் இருக்க வேண்டும். சில பயிற்சிகளுக்கு இலவசம் அல்லது சலுகை அறிவித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை தேர்வு செய்யக் கூடாது. அதே நேரத்தில் ஆசைக்காக அதிக தொகையுள்ள பயிற்சியையும் தேர்வு செய்யக் கூடாது. நல்ல எதிர்காலம் மிகுந்த, உங்கள் குழந்தையின் திறனுக்கேற்ற படிப்புதானா? என்பதை அறிந்து எந்த ஒரு பயிற்சியையும், கல்வியையும் தேர்வு செய்ய வேண்டும்.

    குழந்தையின் விருப்பத்தை முதலில் கேளுங்கள். அவர்கள் விருப்பத்துக்கும், திறமைக்கும் பொருத்தமான துறை படிப்பை தேர்வு செய்கிறோமா என்பதை கவனியுங்கள். அதுபற்றி அறிய பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர் உதவியை நாடுங்கள். விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து கொண்டு அவதிப்பட வேண்டாம்.

    கவுரவம் கருதி ஒரு படிப்பை தேர்வு செய்வதை கைவிடுங்கள். பிள்ளைகள் விரும்பும் படிப்பு வேறு ஒன்றாக இருந்தாலும், ‘அதில் சரியான வாய்ப்புகள் கிடைக்காது, சிறந்த எதிர்காலம் இருக்காது’ என்று புறம் தள்ளிவிட்டு, சமூக கவுரவம் கருதி, குழந்தைக்குப் பிடிக்காத துறையை தேர்வு செய்து படிக்க அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளின் ஆர்வத்தையும், திறனையும் தூண்டும், எதிர்காலத்திற்கேற்ற படிப்பை தேர்வு செய்யவும், அந்தத் துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

    அதிகப்படியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு, இதுவா அதுவா? என்று குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள, உங்கள் குழந்தைக்குப் பிடித்த, எளிதில் வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்திற்கு முதலில் முயற்சி செய்யுங்கள். நீங்கள் கல்லூரியில் இருப்பதைவிட கல்லூரிக்கு வெளியே நிறைய காலம் இருக்க நேரிடும், எனவே சிறந்த கல்வி நிறுவனத்தைவிட, சிறந்த கல்வித் துறையை தேர்வு செய்து படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். 
    Next Story
    ×