search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் எதற்காகவெல்லாம் பயப்படுவார்கள்? அதற்கான காரணம் என்ன?
    X

    குழந்தைகள் எதற்காகவெல்லாம் பயப்படுவார்கள்? அதற்கான காரணம் என்ன?

    குழந்தைகளை எதற்காக பயப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டால் தான் குழந்தைகளை அந்த பயத்தில் இருந்து மீட்கமுடியும்.
    குழந்தைகள் அனைவருமே பயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களால் வெளிப்படுத்தத் தெரியாது. வளரும் பருவத்தில் ஏற்படும் பயம் மனநிலையை வெகுவாக பாதிக்கக்கூடியது. அதனை தெளிவுபடுத்தி நீக்காவிட்டால் அது அப்படியே மனதில் தங்கி, பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பயத்தால் ஜீரண கோளாறு ஏற்படும். பதற்றம் உருவாகும். படிப்பில் மந்தநிலை தோன்றும். ஞாபக மறதி, உடல் எடை குறைதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

    பயப்படும் குழந்தைகளை முதலில் அடையாளங்காண வேண்டும். பின்பு அவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்பதை அறியவேண்டும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டால்தான் குழந்தைகளை அந்த பயத்தில் இருந்து மீட்கமுடியும்.

    உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கக்கூடிய இந்த பயம் பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் ஏதாவதொரு விஷயத்தை பார்த்து அதிகம் பயந்தால் அந்த பயம் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். அதை தவிர்க்க முடியாது. அதனால்தான் குழந்தை நலன் கருதி கர்ப்பிணிகள் திகிலான படங்களை பார்ப்பதோ, மனதை கலங்கவைக்கும் விஷயங்களை காது கொடுத்து கேட்பதோ கூடாது.

    குழந்தைகள் எதற்காகவெல்லாம் பயப்படுவார்கள்? அதற்கான காரணம் என்ன?

    இருட்டு: பொதுவாக இருட்டைப் பார்த்தால் எல்லோருக்கும் பயம் ஏற்படத்தான் செய்யும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். அதேபோன்று குழந்தைகளும் இருட்டைப் பார்த்து பயப்படும். இருட்டில் அவர்கள் மனதில் பயங்கரமான கற்பனைகள் தோன்றும். அதை தவிர்க்க அவர்களிடத்தில் மன தைரியத்தை உருவாக்க வேண்டும். ‘இருட்டைப் பார்த்து பயப்பட எதுவு மில்லை. எப்போதும் நாம் பார்க்கும் பொருட்கள் தான் இருட்டிலும் இருக்கும். இருட்டிலும் மனிதர்கள் தான் இருப்பார்கள்’ என்பதை புரியவைக்கவேண்டும். விளக்கை அணைத்துக்காட்டி இருட்டைக் கொஞ்சம் பழக்கப்படுத்தவேண்டும். திடீரென்று விளக்கு அணைந்தாலும் பயப்படாமல் இருந்த இடத்திலேயே அமைதியாக இருக்கவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்.



    பள்ளிக்கூடம்: புதிதாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு புதிய இடம் பயத்தை வரவழைக்கும். சுற்றி இருக்கும் ஒரு சிலரை பார்த்தும் பயம் தொற்றிக்கொள்ளும். ‘அவர்கள் தம்மை ஏதாவது செய்து விடுவார்களோ?’ என்ற உள்ளுணர்வு, பயமாக வெளிப்படும். ‘அம்மா, அப்பாவை காணவில்லையே.. அவர்கள் திரும்பி வருவார்களோ? மாட்டார்களோ?’ என்ற பதற்றம், பயத்தை அதிகப்படுத்திவிடும். இப்படி பலவிதமான பயங்கள் புது இடத்தில் அவர்களை சூழ்ந்து கொள்ளும். பெற்றோர்கள்தான் சுற்றி இருப்பவர்களை குழந்தைகளிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

    புதிய மனிதர்கள்: புதிய மனிதர்களைப் பார்த்தும் குழந்தைகள் பயப்படும். வீட்டிற்கு வருகை தரும் உறவினர்களை பார்த்தும் குழந்தைகளிடத்தில் பயமும், வெட்கமும் தலைகாட்டும். அவர்கள் அன்போடு குழந்தையின் பெயரை கேட்டால் பதில் சொல்லாமல் அம்மாவின் பின்னால் போய் ஒளிந்துகொள்வார்கள். அத்தகைய பயத்தையும், கூச்ச சுபாவத்தையும் போக்கி புதியவர் களுக்கு குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும்.

    உயரமான இடம்: உயரமான இடத்தில் இருந்து கீழே இருக்கும் நிலப்பரப்பை பார்த்தால் பலருக்கும் பயம் ஏற்படுவது இயல்புதான். குழந்தை களிடம் இந்த பயம் அதிகமாக வெளிப்படும். அதனை போக்க ‘உயரத்தில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்ற உணர்வை குழந்தைகள் மனதில் பெற்றோர் உருவாக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு மேலிருந்து கீழே பார்க்கும்போது பயத்துடன் மயக்கம் கூட ஏற்படலாம். அதனால் உயரமான இடங்களிலும் பயமின்றி உலாவருவதற்கு பழகும் வரை பெற்றோர் உடனிருந்து தைரியப்படுத்த வேண்டும். குழந்தை பயப்படுகிறது என்பதற்காக உயரமான பகுதிகளுக்கு அழைத்துப் போகாமல் இருக்கக்கூடாது. சிறுவயதிலேயே அத்தகைய பயத்தை போக்கி விடுவது நல்லது.

    நண்பர்கள்: சில குழந்தைகளுக்கு தன் வயதுக் குழந்தைகளைப் பார்த்தாலும் பயம் ஏற்படும். சில குழந்தைகள் முரட்டுத்தனமாக விளையாடும். சட்டென்று அடித்து விடும். கீழே தள்ளிவிடும். அதையெல்லாம் நினைத்து குழந்தைகள் பயம்கொள்வார்கள். அத்தகைய சுபாவம் கொண்ட குழந்தைகளுடன் விளையாடும்போது பெற்றோர் உடன் இருப்பது நல்லது. தனக்காக ஒருவர் உடன் இருக்கிறார் என்ற பாதுகாப்பு உணர்வு பயத்தை போக்கிவிடும். முரட்டுக் குழந்தை களிடமும் மற்ற குழந்தைகளோடு சண்டைபோடக்கூடாது என்று சொல்லிவைக்கவேண்டும்.

    சாப்பிட பயம்: ஒரு சில குழந்தைகள் புதிய உணவு பொருட்களை சாப்பிட பயப்படும். அதை சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, என்னவாகுமோ என்ற பயம் உருவாகிவிடும். அதனால் புதிதாக பார்க்கும் பொருட்களை சாப்பிட மறுக்கும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோர்கள் அவர்கள் முன்பு சாப்பிட்டுக் காண்பிக்க வேண்டும். அதன் சுவையை விளக்கிச் சொல்லவேண்டும். அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்கள் முன்பு மற்றவர்களையும் சாப்பிட வைத்து பழக்கவேண்டும்.



    தனிமை: தனிமை பயம் குழந்தைகளை அதிகமாக ஆக்கிரமிக்கும். அப்போது அவைகளுக்கு ஏதேதோ கற்பனைகள் தோன்றும். அடிக்கடி குழந்தைகளை தனிமையில் தவிக்கவிடும்போது ஏற்படும் பயம் அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகளை தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள். அறிமுகமில்லாதவர்கள் மத்தியில் விட்டுச் சென்றாலும் குழந்தைகளுக்கு தனிமை உணர்வுதான் தோன்றும். தனக்கு பழக்கமானவர்கள் உடன் இல்லாதபோது பலவித எண்ணங்கள் தோன்றும். ‘ஏன் இன்னும் வரவில்லை. வருவார்களா மாட்டார்களா?, அவர்கள் என்னை விட்டு எங்காவது போய்விட்டார்களா?, இன்னும் வரவில்லையே?, ஏதாவது அவர்களுக்கு ஆகிவிட்டதா?’ என்றெல்லாம் குழந்தைகள் குழம்புவார்கள். அப்படி குழம்பும் நிலைக்கு குழந்தைகளை தனிமையில் தவிக்கவிட்டுவிடக் கூடாது.

    திகில்: உடன் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் திகிலான விஷயங்களைக் கேட்டு குழந்தைகள் மனதில் பல்வேறுவிதமான பயம் தோன்றும். தனக்கும் அதுபோன்ற சம்பவம் ஏற்பட்டு விடுமோ என்று யோசிக்கும். திகிலான விஷயங்களின் உண்மைத்தன்மை குழந்தைகளுக்கு புரியாது. அதனால் அதைப் பற்றிய அதீத கற்பனைகள் மனதில் தோன்றும். அது அவர்கள் பயத்தை தூண்டி நிம்மதியை குலைத்துவிடும். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு திகிலான விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது.

    திடீர் சத்தங்கள்: எதிர்பாராத திடீர் சத்தங்கள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று இடி, மின்னல் தோன்றினால் அவர்களுக்குள் இனம் புரியாத பயம் உண்டாகிவிடும். அதுபோன்ற நேரங்களில் அவர்களை தனிமையில் விடாதீர்கள். ‘ஏன் இடி, மின்னல் வெளிப்படுகிறது?’ என்பதை விஞ்ஞானரீதியாக விளக்கி கூறுங்கள்.

    பேய் பிசாசு:
    பேய், பிசாசு போன்றவை கிடையவே கிடையாது என்பதை முதலில் பெற்றோர் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொண்டு சிறுவயதில் இருந்தே குழந்தை களிடம் ‘பேய் பிசாசு என்பது மாயை’ என்பதை உணர்த்தவேண்டும். பேய் காட்சிகள் தோன்றும் சினிமாக்களை குழந்தைகள் பார்க்கவும் அனுமதிக்காதீர்கள். பேய் சினிமாக்களை பெரியவர்கள் பார்ப்பது வேறு, குழந்தைகள் பார்ப்பது வேறு. உண்மை நிலை அறியாத குழந்தைகளின் கற்பனை உலகம் வேறு மாதிரி இருக்கும். காரணங்கள் பல இருந்தாலும் பயமும், அதன் பாதிப்பும் ஒன்றுதான். குழந்தைகளின் பயம் என்பது அவர்கள் உடல் நலனை பாதிக்கச் செய்யும். அதனால் அவர்களை கண்காணித்து அவ்வப்போது ஏற்படும் பயங்களை விளக்கம் கொடுத்து விரட்டியடிக்கவேண்டும்.
    Next Story
    ×